வியாழன், 24 பிப்ரவரி, 2011

சோனியா அம்மாவுக்கு பயந்து பார்வதி அம்மாவை மறந்த தமிழக வீரத் தமிழர்கள்.



ஊறணிச்சுடலை நாய்க்கு ஒரு பிடி சோறு போட்ட ஈழத்து பிச்சைக்காரன் தமிழக தலைவர்களுக்கு எழுதும் மடல்..
பார்வதிப்பிள்ளை மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும் தலைவர்களான மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா, கேப்டன் பிரபாகரன் மன்னிக்க கேப்டன் விஜயகாந்த் ஆகிய மூவரும் வாயே திறந்ததாக தெரியவில்லை.
பட்டுக்கோட்டையில் தமிழீழமே தமிழருக்கு தீர்வென பிரகடனப்படுத்தியவன் நானே என்று நமது கலைஞர் அடிக்கடி மார்தட்டுவார்…
இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழம் அமைக்கிறேன் என்று தேர்தலுக்காக வீரமுழக்கமிட்டார் நமது அன்னை பராசக்தி ஜெயலலிதா..
ஈழத் தமிழனுக்காக கேப்டன் வந்துவிட்டார் என்று முழங்கினார்கள் அவருடைய கட்சித் தொண்டர்கள்.
இந்த மூன்று பேரும் பார்வதி அம்மா மரணித்தபோது அவருக்கு மரியாதைக்காகவேனும் ஓர் அஞ்சலி செலுத்தவி;லை..
இந்தத் தலைவர்களுடைய பணத்தில் வரும் தொலைக்காட்சிகளின் மட்டைகளை எடுத்து மகிழ்வோடு பார்ப்பவன் ஈழத் தமிழன். அந்த மானங்கெட்டவன் எடுக்கும் மட்டைகளுக்காவது ஒரு மரியாதை கொடுத்திருக்கலாம் இந்த பிழைப்புவாத ஊடகங்கள்.. அதுவும் இல்லை..
ஏன்..?
வரும் தேர்தலில் காங்கிரஸ் திமுக – கூட்டு இன்னமும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் பார்வதி அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினால் காங்கிரஸ் தாய் சோனியாவின் பார்வையில் எதிரணியாகிவிடுவோம் என்ற பயத்தில் இந்த மூன்று தலைவர்களும் மௌனம் காத்திருக்கலாம்.
காங்கிரசுடன் உறவென்றால் ஈழத் தமிழனை விற்க மூவரும் தயார்தான்.
அட சும்மா கெட புள்ளே…!
தேர்தல் வரும்போது ஈழத் தமிழா என்று முழங்கினால் போதும் அவன் காதில் பூ சுற்றிவிடலாம் என்று கருதுகிறார்கள். ஈழம் என்றுவிட்டால் எல்லாவற்றையும் மறந்து, கோமாளிகள் தாயே தெய்வமே என்று ஜெயலலிதாவுக்கு கவிபாட காத்துக் கிடப்பது அவர்களுக்கு தெரியும்
அசினை படத்தில் கதாநாயகியாக போட்ட காவலன் படம் ஓடி முடிக்கும்வரை புலிப்பால் குடிக்காத நமது இளைய தளபதி விஜய் நேற்று நாகபட்டணத்தில் புலிப்பால் குடித்திருக்கிறார். அந்தப் பாலில் ஒரு மிடறை அசினுக்கு பருக்கியிருந்தால் காவலன் கதறிக் கொண்டு ஓடியிருக்குமே…
திருமாவளவனை சிங்கள நாட்டின் விமான நிலையம் திருப்பி அனுப்பியதற்கு பதிலடியாக டக்ளசை கைது செய்ய வேண்டும் என்றுள்ளார் டாக்டர் ஐயா.. டக்களஸ் மீது சுமத்தப்பட்டது கொலைக் குற்றம், திருமாவளவன் செய்த குற்றம் என்ன ? சூளை மேட்டில் செத்தவனைப் பற்றி யாருக்கு என்ன கவலை..
சென்னை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்படும் ஈழத் தமிழருக்காக குரல் கொடுங்கள் என்று திருமாவளவனிடம் கேட்டவர் பலர். அவர் கலைஞருக்கு பயந்து அடக்கி வாசித்தார். இன்று கொழும்பு விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவுடன் அடக்க முடியாத கோபம் அவருக்கு வந்துள்ளது. ஐயா.. பண்டாரநாயக்கா விமான நிலையமும் சிங்கார சென்னை விமான நிலையமும் மானமுள்ள ஈழத் தமிழனுக்கு ஒன்றுதான். மானமுள்ள ஈழத் தமிழனாக இந்த இரண்டு விமான நிலையங்களுக்குள்ளும் போய்ப்பாருங்கள்.
அன்று..
1984ம் ஆண்டு வல்வையில் இராணுவம் சுட்டு ஒரு வயோதிபர் தெருவில் குற்றுயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் உயிர் பிரியும் தறுவாயில் எங்கள் உடன் பிறப்பு தலைவர். மு. கருணாநிதி வருவார் என்று கூறிவிட்டு நம்பிக்கையோடு இறந்தார். அந்த ஆத்மா உங்களை எல்லாம் கண்ணீருடன் பார்க்கிறதையா.. !
இதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு ஒரு புதிய சந்தேகம் வருகிறது..
பார்வதி அம்மாவுடன் செத்துக்கிடக்கும் நாய்களும் எங்கே உங்களுடைய வீர முழக்கங்களை கேட்டுத்தான் தவறுதலாகக் குரைத்துவிட்டனவோ என்பதுதான் அந்த அச்சம் ஐயா…
ஈழத்து பிச்சைக்காரன்.. 23.02.2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக