திங்கள், 29 அக்டோபர், 2012

பச்சைத் தமிழ்த் தேசியம்

ஒரு பெரியார்-அண்ணா கால தி.(மு).க.காரரின் மகனாகப் பிறந்த காரணத்தால் நான் பல நன்மைகளைப் பெற்றேன் என்று உறுதியாக நினைக்கிறேன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, மூட நம்பிக்கைக் களைதல் என பல நல்ல சிந்தனைகளை, செயல்பாடுகளைப் பெற அது எனக்கு அச்சாரமாய் அமைந்தது. இவை எல்லாவற்றையும் விட பார்ப்பனிய‌ ஆதிக்கம் எனும் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்டபசை இனம் கண்டிட, எதிர்த்திட, எடுத்தெறிந்திடவும் பெரிதும் உதவியது. இந்த விழிப்புணர்வு அன்றைக்கு கிடைக்காமல் போயிருந்தால், இன்றைக்கு பார்ப்பனர் உயர்ந்தவர், அவர் வணங்கும் தெய்வங்கள் உயர்ந்தவை, அவர் ஓதும் வேதம் உன்னதமானது என்று உளறிக் கொண்டிருந்திருப்பேன். காக்கி நிக்கர் போட்டுக்கொண்டு, மராட்டிய பார்ப்பனர்களின் புகழ் பாடிக் கொண்டிருந்திருப்பேன். மனுதர்ம மடமை, சாதீய வெறி, இனவேற்றுமைச் சதி, அதிகாரத் திமிர், அடக்கியாளும் அகந்தை, முதலாளித்துவ காமம் என கட்டமைக்கப்பட்டிருந்த சமூக ஏற்பாட்டை எந்த விதமான கேள்வியும் இன்றி ஏற்றுக்கொண்டிருப்பேன். தீண்டாமை (untouchability), அதைவிடக் கொடுமையான காணாமை (unseeability) போன்றவை இயற்கை விதிகளாகத் தோற்றமளித்திருக்கும். இவை இரண்டையும் விட மோசமானது நம்பாமை (unbelievability) – தங்களால் மட்டுமே சிந்திக்க, செயல்பட, தீர்மானிக்க, நடத்த முடியும்; வேறு யாராலும் தங்களைப் போல் இயங்க முடியாது; மற்றவர்கள் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாது எனும் தான்தோன்றித் தத்துவத்தை தர்க்கரீதியாகப் பார்த்திருக்க மாட்டேன். “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா அய்யா சொல்வது புரிகிறது என்றாலும், திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. காங்கிரஸ் வல்லாதிக்கத்தை எதிர்க்க, பிற்போக்கான சமுதாயத்தைக் கேள்வி கேட்க, அதன் ஏற்பாடுகளை மாற்றியமைக்க பெரியாரியம் உண்மையிலேயே உதவியது. பெரியார் கையாண்ட சில சொற்கள், சிந்தனைகள், கருத்துக்கள், முடிவுகள், நடவடிக்கைகள், சமரசங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாக மாறி இருக்கலாம். காலமும், சூழலும், தேவையும் மாறும்போது, கருத்துக்கள் மாறுவதில் வியப்பேதும் இருக்க முடியாது. இன்னும் பழைய பெரியாரை, அவரின் பழைய கொள்கைகளை கட்டிக்கொண்டு இழுப்பது தேவையற்றது. பெரியாரிடமிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, தேவையற்றவற்றை விட்டுவிடுவதுதான் அறிவுடைமை. முன்னாள் தலைவர்கள் இட்ட அஸ்திவாரங்களின் மீது இந்நாளையத் தேவைக்கு ஏற்றார்போல கட்டிக்கொள்வதுதான் சிறப்பு. இந்தப் படைப்பாற்றலில், புத்தாக்கத்தில் கவனம் செலுத்தவேண்டுமே தவிர, இன்றைய நாளில் நின்று கொண்டு கழிந்த நூற்றாண்டு நிகழ்வுகளை விமர்சிப்பதும், இங்கே நின்றவாறே காலனி ஆதிக்க காலத்து அரசியலை அலசுவதும் நமது தற்போதைய தேவைக்கு பெருமளவில் உதவும் விடயங்களல்ல என்பது என் எண்ணம். வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, வீண் பேச்சு பேசிக்கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது. பெரியார் கன்னடரா, தமிழரா எனும் விவாதம் எப்படி நமக்கு உதவும் என்பதும் எனக்குப் புரியவில்லை. தமிழரை மட்டும்தான் தலைவராய் ஏற்றுக் கொள்வோம், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றால், நாம் போற்றுகின்ற புத்தன், ஏசு, நபிகள், மார்க்ஸ், லெனின், காந்தி, அம்பேத்கர் யாருமே தமிழர் அல்லவே. இன்றையச் சூழலில் ஒரே ஒரு தமிழ் தலைவர் வருவார், அவர் ஒரே ஒரு தமிழ் புத்தகம் தருவார், ஒரே ஒரு தமிழ் கொள்கைக் கூறுகளை அருள்வார், நாம் எல்லாம் சுபிட்சத்தை நோக்கி சுகமாக நடப்போம் என்று கனவு காண்பது மடமையிலும் மடமை. யார் தமிழர்? இப்போது யார் தமிழர் எனும் கேள்வி எழுகிறது. ‘யார் தமிழர்’ என்பது ‘சுத்தமான தமிழ் எது’ என்பது போலவே ஒரு பெரிய பிரச்சினை. நாங்கள் நாகர்கோவில்காரர்கள். எங்கள் தமிழ்தான் உண்மையான தமிழ் மொழி என்கிறோம். வட தமிழ்நாட்டு மக்கள் “என்னய்யா, மலையாளம் போல பேசுகிறீர்களே” என முகம் சுளிக்கின்றனர். சென்னைவாசி பேசுவது தமிழா என்று கோவைக்காரர்கள் குமுறுகிறார்கள். இது போன்ற நிலைதான் தமிழர் யார் என்று வரையறுப்பதிலும் நிலவுகிறது. தமிழ் நாட்டில் வாழ்கிறவர் எல்லோரும் தமிழரா? தமிழ் மொழி பேசுகிறவர் அனைவரும் தமிழரா? வீட்டிலே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசினாலும், வெளியே வந்து தமிழ் பேசிவிட்டால் போதுமா என்று பல கேள்விகள் எழுகின்றன. தன்னுடைய அடையாளம் பற்றிக் கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய தலைவர் அப்துல் வாலி கான், “நான் கடந்த ஐம்பது வருடங்களாக பாகிஸ்தானியாக இருக்கிறேன், ஐநூறு வருடங்களாக முஸ்லீமாக இருக்கிறேன், ஆனால் ஐயாயிரம் வருடங்களாக பட்டானாக இருக்கிறேன்” என்றார். அதுபோல நாமும் அறுபது வருடங்களாகத்தான் இந்தியராக இருக்கிறோம். ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளாக தமிழராக வாழ்கிறோம். இன சுத்தம் இன்றைய உலகில் சாத்தியமா என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாகரீகத்தோடு இன்னும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத பழங்குடிகளில் மட்டும்தான் இன சுத்தமான மக்களைப் பார்க்க முடியும். நமது தமிழ்க்குடி வந்தவன், போனவன், தங்கியவன், தயங்கி நின்றவன், கடந்து சென்றவன் எல்லாம் ஏறி மேய்ந்து கலப்படமாகிவிட்ட ஒரு சமூகமல்ல என்பது உண்மை. அமெரிக்காவிலே, ஆஸ்திரேலியாவிலே சிலர் சொல்வது போல நான் 50 சதவீதம் ஐரிஷ், 30 சதவீதம் ஜெர்மன், 20 சதவீதம் பூர்வீகக்குடி என்றெல்லாம் நாம் சொல்வதில்லை, சொல்லத் தேவையும் இல்லை. அதே நேரம் நாமெல்லாருமே 100 சதவீதம் சுத்தமான, கலப்பே இல்லாத அக்மார்க் தமிழர்கள் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. யார் யாரோ இங்கே வந்து நம்மை ஆண்டிருக்கிறார்கள். எவரெவர் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. இன சுத்தம் பார்க்கும்போது மாற்று மொழி பேசுகிறவர்; கிறித்தவர், இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை மதத்தவர்; வேறு இடங்களிலிருந்து குடி பெயர்ந்து வந்தவர்கள் என எல்லோரும் தள்ளப்பட்டால் வேறு யார்தான் எஞ்சி இருப்பார்கள்? இந்த இன சுத்த சித்தாந்தம் எவ்வளவு ஆபத்தானது, என்னென்ன தீங்குகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பல நாட்டு வரலாறுகளில் நாம் பார்க்கிறோம். அப்படியானால் தமிழகத்தை வேற்று இனத்தவர்களுக்குத் திறந்து விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க வேண்டுமா? இல்லை. இன சுத்த சித்தாந்தத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நமது அடையாளத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பது மிக முக்கியம். மலையாளிகள், சிங்களர் மீதான வெறுப்பின் மீது, கோபத்தின் மீது கட்டமைப்பதா? அல்லது நமது பண்டைய புராணங்களின் மீது, வரலாற்றுப் பெருமைகளின் மீது, கலாச்சார குணநலன்களின் மீது ஏற்படுத்திக் கொள்வதா? அல்லது இன்றைய யதார்த்தம், நாளைய தேவைகளைக் கருத்திற்கொண்டு வடிவமைத்துக் கொள்வதா? இன அடையாளம் ஒரு வளையாத விறைப்பான பாசிசக் கொள்கையாக இருக்க வேண்டுமா அல்லது மென்மையான, மிருதுவான குழுக் குறியீடாகத் திகழ வேண்டுமா? தமிழன், தமிழச்சி என்பவர் யார்? தன்னை தமிழ் மகனாக/மகளாக, தமிழ் கூறும் நல்லுலகின் அங்கமாக உணர்வுப்பூர்வமாகப் பார்க்கிற, தனது தமிழ் இனத்தின் சிறப்புக்கு, உயர்வுக்கு, விடுதலைக்கு தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் உழைக்க முன்வருகிறவரே தமிழன், தமிழச்சி எனக் கொள்ளலாம் என்பது என் எண்ணம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்கா, மலேசியா, பினாங்கு, மொரீஷியஸ் நாடுகளில் ஆங்கிலேயரால் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் இன்றைய தலைமுறையினர், தமிழில் பேசவோ, எழுதவோ முடியாதிருப்பினும், தங்களைத் தமிழர்களாகவே உணர்கின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் வீடுகளில்கூட‌ அந்தந்த நாட்டு மொழிதான் பேசுகிறார்கள். அதனால் அவர்களை தமிழரல்லர் என்று ஒதுக்கிவிட முடியாது. இது, தமிழ் பேச, படிக்கத் தெரியாத மூன்றாம் தலைமுறை புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும். எது தமிழ்த் தேசியம்? இன சுத்தம் இயலாத ஒன்றாகிப் போகும்போது, தமிழகத்தைச் சுற்றி இஸ்ரேல் பாணியில் சுவர் கட்ட முடியாத, கட்டக்கூடாத நிலையில், அரசியல் பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு அரிய வகைத் தமிழனை தேடுவதற்குப் பதிலாக, நமது பாரம்பரிய வரையறைக்குத்தான் போகவேண்டியிருக்கிறது: “யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” தமிழ் மண்ணை, தமிழ் வளங்களை, தமிழ் அடையாளத்தை உலகமயமாக்குவதற்குப் பதிலாக, உலகை, உலக வளங்களை தமிழ்மயமாக்குவதற்கு முயற்சிப்போம். அதுதான் தமிழ்த் தேசியம். தமிழ் வித்தில் முளைத்தெழுந்து, தமிழ் மண்ணில் வேரூன்றி, தமிழ் மொழியின் சாறெடுத்து, தமிழ் அடையாளத்தை சுவாசித்து வளர்ந்து, தரணியெல்லாம் பரந்து விரிந்து, தன் தண்டமிழ் நிழலில் ஒதுங்குவோர்க்கு காய்கனியும், மாமருந்தும், குளிர்ச்சியும், வளர்ச்சியும் தருகின்ற கற்பகத்தருவே தமிழ்த் தேசியம். ஒரு குறிப்பிட்ட தமிழ்த் தேசிய அமைப்போ, குழுவோ, தலைவரோ தேர்ந்து வழங்குவதல்ல தமிழ்த் தேசிய அடையாளம். தனிப்பட்ட மனிதரை சுயமாக தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதுதான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் மேலிருந்துக் கீழே திணிக்கப்படுவதல்ல. கீழிருந்து மேலாகப் பரந்து விரிவது. மதவெறி, இனவெறி, சாதீயம், ஆணாதிக்கம், வயதானோரதிகாரம், வகுப்புவாதம், வல்லாதிக்கம், வன்கொடுமை, வன்முறை ஏதுமற்ற சமாதானகரமான சமத்துவ சமுதாயத்தை நிர்மாணிக்க முயல்கிற சித்தாந்தம்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்பது எது, யார் உண்மையான தமிழ்த் தேசியவாதி என்பதல்ல பிரச்சினை. தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களாகிய நாம் எதை அடைய விரும்புகிறோம்? அதுதான் மிக முக்கியம். பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் திட்டுவதல்ல தமிழ்த் தேசியம். முக்கிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கதை முடிந்துகொண்டிருக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலை செய்யப்படும்போது, ராஜினாமா கூத்து, உண்ணாவிரத நாடகம் நடத்தியவர், இன்று டெசோ மாநாடு நடத்தி அரசியல் வாழ்வை புதுப்பித்துக்கொள்ள புலம்பித் திரிகிறார். இதுகாறும் பாராமுகமாய் சும்மா இருந்த அம்மா, தமிழ்த் தேசிய அலை தமிழகத்தில் வீசுவதைப் புரிந்துகொண்டு, பரபரப்பான மூவர் தூக்கு, கட்சத் தீவு, மீனவர் கொலை, சிங்களருக்கு இராணுவப் பயிற்சி போன்ற பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறார். தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். செத்துக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சி அரசியலை தூக்கிக் கொண்டுபோய் புதைத்து விட்டு, இனி தமிழகத்தை தமிழன்தான் ஆள்வான், தமிழச்சிதான் ஆள்வாள் என உறுதி பூணுவதுதான் தமிழ்த் தேசியம். இவன் தெலுங்கன், இவன் கன்னடன், இவன் மலையாளி என்று நாமகரணம் சூட்டுவது தமிழ்த் தேசியமல்ல. “தமிழ் வாழ்க” என நகராட்சிக் கழிப்பறைகளில் எழுதி வைப்பதும் தமிழ்த் தேசியமல்ல. எந்தக் கட்சி ஆட்சிக்கு வருவது, யாரை முதல்வராக்குவது என நமக்குள் அடித்துக் கொள்வதுமல்ல தமிழ்த் தேசியம். தமிழீழப் பிரச்சினை பற்றி பகட்டாகப் பேசுவதும், தலைவர் பிரபாகரன் புகழ் பாடுவதும் தமிழ்த் தேசியமல்ல. அப்படியானால் எது தான் தமிழ்த் தேசியம்? தனியொரு தமிழனுக்கு உணவில்லை எனில், ஒட்டுமொத்த தமிழினமும் கேவலப்படுவதுதான், கேள்வி கேட்பதுதான், அதை மாற்றி அமைப்பதுதான் தமிழ்த் தேசியம். பிரிட்டிஷ்காரன் தேயிலைத் தோட்டத்தில் அடிமை வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கூலிக்காரனாக இல்லை இன்றையத் தமிழன் என நமது கூலி அடையாளத்தை தூக்கி எறிவதுதான் தமிழ்த் தேசியம். தமிழ் மக்கள் திரைகடல் ஓடி இனி திரவியம் தேடப் போகவேண்டாம், நம் தமிழ் மண்ணிலேயே தன் மனைவி மக்களுடன் நல்வாழ்வு நடத்தி, பொருளீட்டி, புகழோடு வாழமுடியும் எனச் செய்வதுதான் தமிழ்த் தேசியம். “மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற பாரதியின் கூற்றை நிலை நிறுத்துவது போல, பெண் விடுதலை, விதவை மறுமணம், அம்மா என்றழைத்து தெய்வமாக்காமல் அருமை நண்பராகவும் பெண்ணைப் பார்க்கலாம் எனும் கலாச்சார மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் தமிழ்த் தேசியம். திரைப்படம், தொலைக்காட்சி, சினிமா நடிகர், நடிகைகளிடமிருந்து தமிழ்க் கலாச்சாரத்தை மீட்டெடுத்து, இயல், இசை, நாடகம் எனும் பாரம்பரிய தளங்களுக்குக் கொண்டு போவதுதான் தமிழ்த் தேசியம். உணர்ச்சி வயப்படுவதும், ஓடிப்போய் உயிரை விடுவதுமான ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ நடவடிக்கைகளைக் கைவிட்டு, “எண்ணித் துணிக கருமம்” என நம் மக்களை மாற்றி செயல்படவைப்பதுதான் தமிழ்த் தேசியம். அன்பு, வீரம், கொல்லாமை, நல்லாறு எனும் பல்வேறு மாதிரி தமிழ் கோட்பாடுகளை உலகுக்கு எடுத்துச் சொல்லி அவற்றை வளர்த்தெடுப்பதுதான் தமிழ்த் தேசியம். “பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போச்சே” என்று உரக்கப் பாடி, சாதி, மதக் குழுக்களால் யாரும் யாரையும் அடக்க முடியாதபடி, அதட்ட முடியாதபடி புதிய சமுதாயம் ஒன்றைக் கட்டுவதுதான் தமிழ்த் தேசியம். தலைமுறை தலைமுறையாய் அடக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள், தலித் மக்கள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள், மீனவர்கள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினரும் தமிழராய் தலைநிமிர்ந்து வாழ வழி செய்வதுதான் தமிழ்த் தேசியம். ஈழத்தில் வதைபடும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும், உலகெங்குமுள்ள தமிழருக்கும் தோள்கொடுத்து துணை நிற்பதுதான் தமிழ்த் தேசியம். வரவறிந்து, திட்டமிட்டு செலவு செய்து, மக்களுக்கு இலவசம் கொடுக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்து, தொழில் வளம் பெருக்கி, விவசாயம் காத்து, வாழ்வாதாரங்கள் போற்றி, எதிர்கால சந்ததிகளுக்கு எம்மண்ணை, நீரை, காற்றை, கடலை, மலைகளை, காடுகளை, மரம் மட்டைகளை காப்பாற்றி விட்டுச் செல்வதுதான் தமிழ்த் தேசியம். விஞ்ஞானம், வளர்ச்சி என்ற பெயரில் கூடங்குளம், கல்பாக்கம், நியுட்ரினோ, சிர்கோனியம் போன்ற ஆபத்தான திட்டங்களைத் திணிப்பதை எதிர்ப்பதுதான் தமிழ்த் தேசியம். நதிநீர் பங்கீடு, தன்னிறைவுத் திட்டங்களில், இந்திய தேசியத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் தமிழருக்கு நீதி கிடைக்க, தமிழரின் உரிமை காக்கப் போராடுவதுதான் தமிழ்த் தேசியம். “எட்டுத் திக்கும் செல்வோம், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்” என்ற நிலையில் பெருந்தன்மையாக வாழ்ந்தாலும், எங்கள் மீது அந்நிய மொழியை, அரசியலை, வல்லாதிக்கத்தை, அடிமைத்தனத்தை சுமத்த வந்தால் எதிர்த்து நின்று, போராடி, விரட்டியடிப்போம் என்று வீறுகொள்வதுதான் தமிழ்த் தேசியம். பச்சைத் தமிழ்த் தேசியம் இன்றைய பன்னாட்டுச் சூழலில், இந்திய‌ அரசியலில் நமக்குத் தேவைப்படுவது பச்சைத் தமிழ் தேசியம். இந்தச் சொற்றொடர் இரண்டு அர்த்தங்களைத் தருகிறது. ஒன்று, அப்பழுக்கற்ற, கலப்படமற்ற, சமரசமற்ற, உண்மையான தமிழ்த் தேசியம் என்பதைக் குறிக்கிறது. இன்னொன்று ‘தமிழ்’ தேசியம், ‘தமிழர்’ தேசியம் போன்ற கொள்கைகளையும் இணைத்து, கூடவே பசுமை உணர்வுகளை, விழுமிய‌ங்களை, கொள்கைகளை, திட்டங்களை உள்ளடக்கியது என்றும் அர்த்தமாகிறது. இன்றைய தமிழகத்தினுடைய தேவை தமிழ் சூழல் தேசியம்தான். சூழல் என்பது வெறும் இயற்கை சுற்றுச்சூழலை மட்டும் குறிப்பதல்ல. சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்கங்களும், தாக்கங்களும் கூட பரந்துபட்ட சூழலுக்குள் உட்படுவதால், நமது புத்தாக்கக் கொள்கையும் அகலமானதாய் ஆழமானதாய் இருத்தல் அவசியம். பசுமைக் கொள்கை என்பது வெறும் அரசியல் கொள்கையோ அல்லது பொருளாதாரத் திட்டம் மட்டுமோ அல்ல. அது ஓர் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை. இயற்கையைப் பேணுதல், சனநாயகம் காத்தல், சமூக நீதி-சமத்துவத்துக்காய் உழைத்தல், வன்முறை தவிர்த்தல், பகிர்ந்தாளுதல், உள்ளூர் பொருளாதாரம் பேணல், பெண் விடுதலை கோரல், சமூகப் பன்மை போற்றல், பொறுப்போடு வாழ்தல், வருங்காலம் கருதல், நீடித்து நிலைத்து நிற்றல் என்பவையே பசுமை விழுமங்கள். நாம் எடுத்தாளப்போகும் பச்சைத் தமிழ்த் தேசியம் என்னென்ன திண்மமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என ஒத்தக்கருத்து கொண்டோர் ஒன்றிணைந்து முடிவு செய்யலாம். ஒரு சில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்: தமிழகம் தண்ணீர் தன்னிறைவு பெறுவது, நிலத் தரகர்களிடமிருந்து விளைநிலங்களைக் காத்துக்கொள்வது, மானாவாரிப் பயிர்களை திட்டமிட்டுப் பயிரிட்டு, பரந்து கிடக்கும் தமிழ் மண்ணை அறிவுப்பூர்வமாக பயன்படுத்துவது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது, தமிழ் கடலை - கடலுணவைக் காப்பது, நம் இயற்கை வளங்களைக் காக்கும் நீடித்த நிலைத்த வளர்ச்சி சித்தாந்தத்தைப் பேணுவது, தமிழினத்தை அச்சுறுத்தும் அணுஉலை மற்றும் மாசுபடுத்தும் பிற உலைகளைத் தடுப்பது, அணு ஆயுதங்களை விரட்டுவது, மென்முறையைப் போற்றி வளர்ப்பது, மது அரக்கனை அழிப்பது, தீண்டாமையை ஒழிப்பது இன்ன பிற. “செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு தேள் வந்து கொட்டுது காதினிலே – எங்கள் மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல் மண்ணும் சிரிக்குது பீச்சினிலே” என கவிஞர் கண்ணதாசன் வர்ணிக்கும் இன்றையத் தமிழகத்தை மாற்றியமைத்து, “செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என மகாகவி பாரதியார் கனவில் மிளிரும் தமிழகமாக மாற்றியமைப்பதுதான் பச்சைத் தமிழ்த் தேசியம். (கட்டுரையாளர் சுப.உதயகுமார் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.)

தமிழரின் உடனடித் தேவை


நமது தமிழ் சமுதாயம் ஒரு திருப்பு முனையில் நின்று கொண்டிருக்கிறது. அதன் குறியீடாக பல சமூக, அரசியல், கலாச்சார பிரச்சினைகளைப் பற்றி நாம் இன்று விவாதிக்கத் துவங்கியிருக்கிறோம். தமிழனை சிந்திக்கவிடாமல், கேள்வி கேட்கவிடாமல், அடுக்குமொழி பேசி, அனாவசியமாக கடிதங்கள் எழுதி, குழாயடிச் சண்டை, குடும்பப்பகை போன்ற ஓர் அசிங்கமான அரசியல் கலாச்சாரத்துக்குள் நம்மைத் தள்ளி திமுகவும், அதிமுகவும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். வெற்று வார்த்தைகளையும், வீர வசனங்களையும் கேட்டு வீணாகிப்போன நமது தமிழினம், நமது எதிர்காலத்தைப் பற்றி கரிசனத்துடனும் கவனத்துடனும் அலசி ஆராயத் துவங்கிவிட்டது.
koodankulam_371திராவிடம், பெரியாரியம், திமுக-அதிமுக கட்சிகளின் இன விரோதப் போக்கு, தமிழ்த் தேசியம், இந்த சித்தாந்தம் பேசுகிற அமைப்புகளின் இடையேயான சிறு சிறு வேறுபாடுகள், ஈழப் பிரச்சினையில் நமது நிலைப்பாடு பற்றியெல்லாம் ஒர் ஆரோக்கியமான அரசியல் விவாதம் நடக்கத் துவங்கியிருக்கிறது. இந்த விவாதம் தொடர்ந்து நடந்து, ஒலியை விட அதிக ஒளியை உருவாக்கும், உருவாக்கவேண்டும் என விரும்புவோம்.
அதோடு நமது தமிழ் சமுதாயத்தின் பொருளாதாரத்தைப் பற்றியும் நாம் விவாதிக்க முன்வர வேண்டும். “வரவு எட்டணா, செலவு பத்தணா” என்ற வகையில்தான் நமது மாநில நிதி நிர்வாகம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. சாராயம் விற்று, நம் தமிழ் சகோதரர்களை எல்லாம் குடிகாரர்களாக்கி, நமது குடும்பங்களை எல்லாம் குட்டிசுவராக்கித்தான் அரசை நடத்துகின்ற ஒரு இழிநிலை நிலவி வருகிறது. இலவசமாக பொருட்கள் கொடுத்து, குடும்பத் தலைவர்களைப் பொறுப்பற்றவர்களாக்கி, தமிழ் மக்களை பிச்சைக்காரர்களாக்கி ஒரு பெரும் அசிங்கம் நடந்து கொண்டிருக்கிறது. விவசாய அபிவிருத்தி, தொழில்வள உருவாக்கம், வேலை வாய்ப்பு, வருமான அதிகரிப்பு, பொருளாதார மேம்பாடு என சிந்திப்பதற்குப் பதிலாக, இனாம் கொடுப்பது, கை ஏந்தியே பிழைக்க வைப்பது, இடையில் கிடைப்பதை சுருட்டிக் கொள்வது என செயல்படுகிறார்கள் ஆட்சியாளர்கள்.
பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக் காலத்தில் ஏழ்மை தலைவிரித்து ஆடியபோது, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, இலவச உணவோடு முட்டை போடுகிறோம், முளைப்பயிறு தருகிறோம் என்று இறுமாப்பு பேசுகிறது ஆட்சி பீடம். இந்த சத்துணவு வேலை கிடைத்தால் நமது பங்குக்கு நாமும் திருடலாம் என்று மக்கள் போட்டி போடுகிற நிலையைப் பார்க்கிறோம். ரூபாய் 5,500தான் மாதச் சம்பளம் என்றாலும், ஒரு சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு 632 பெண்கள் திருச்சியில் போட்டி போட்டதாக செய்திகள் சொல்லுகின்றன.
வெறுப்பு, கோபத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அரசியலை கேள்விக்குள்ளாக்குவதுபோல; இலவசம், லஞ்சம் மீது எழுப்பப்பட்ட பொருளாதாரத்தை எதிர்க்க முனைவதுபோல; பழம்பெருமை, வெளிவேடம் மீது நிறுவப்பட்ட கலாச்சாரத்தையும் நாம் மறுபரிசீலனை பண்ணியாகவேண்டும். திரைப்படங்களில் ஆபாசம், சின்னத்திரையில் சிறுமைத்தனம், பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பது பாவிப்பது, பாலியல் கல்வி எதிர்ப்பு, மறுமணம் மறுப்பு, முதியோர் புறக்கணிப்பு என கலாச்சார அழிவுக்குள் புதைந்து கொண்டிருக்கிறோம்.
முள்ளிவாய்க்காலில் ஓர் இனப்படுகொலைக்கு ஆளானாலும், நம் ஈழத்துச் சொந்தங்கள் நீதி கேட்டு நடுத்தெருவில் நின்றாலும், முல்லைப்பெரியாரிலும், கூடங்குளத்திலும் ஒரு புது வரலாற்றை நம் தமிழ் சொந்தங்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். சமூகம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் தாண்டி, நமது வாழ்வுரிமைகளை, வாழ்வாதாரங்களைப் பற்றி சிந்திக்கத் துவங்கிவிட்டோம் நாம்.
இந்த நேர்மறைப் போக்கை எப்படி நெறிப்படுத்துவது, எப்படி தக்கவைத்துக்கொள்வது, எங்ஙனம் விரிவு படுத்துவது என்பது பற்றி நாம் விவாதித்தாக வேண்டும். தமிழ் சமுதாயத்தின் பல தலைவர்கள் இடிந்தகரையில் யூலை முதல் நாள்  கூடிய‌து இந்த முயற்சிக்கு ஒரு துவக்கமாக இருக்குமாயின் சிறப்பாக அமையும். இடிந்தகரை தமிழ்ச் சமுதாயத்தின் விடிந்த கரையாகும். கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக நாங்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும், அணுசக்திக்கும்  மற்றும்அணுவாயுதங்களுக்கும் எதிராகப் பேசியும், எழுதியும், போராடியும் வருகிறோம். கடந்த பதினோரு மாதங்களாக இடிந்தகரையிலேயே ஒரு முனைப்பான போராட்டத்தைத் துவங்கி துவளாது நடத்தி வருகிறோம்.
நம்மில் பலர் எங்கள் போராட்டம் பற்றிய அரசின் பொய்களை, போலிக் குற்றச்சாட்டுக்களை அப்படியே ஏற்றுக்கொண்டனர். அந்நிய நாடுகளிடம் நம்மை, நமது நாட்டை விற்று விட்டவர்கள் சொன்னதைக் கேட்டு, எங்களை கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்றே பலர் நினைத்தார்கள். பணத்துக்காகவும், பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும் மட்டுமே பொதுவாழ்க்கைக்கு வரும் புல்லுருவிகள் போன்று நாங்கள் பார்க்கப்பட்டோம்.
அதற்கும் மேலாக செயற்கை மின்வெட்டு என்ற சக்திமிக்க ஆயுதத்தைப் பிரயோகித்து, இரவும் பகலும் தோன்றும் போதெல்லாம் மின்தடை எற்படுத்தின அரசுகள். தமிழ் மக்களை துன்பத்திற்குள்ளும், வேதனைக்குள்ளும் தள்ளி உங்களை எங்கள் மேல் கோபமடையச் செய்து, எங்கள் போராட்டம் நின்றால் மின்சாரம் தங்குதடையின்றி வரும் என்ற மாயையினை உருவாக்கி எங்களை தமிழின எதிரிகளாகச் சித்தரித்தனர். தமிழகத்தின் மின்பற்றாக்குறையைப் போக்க அடுத்தடுத்து ஆண்ட கருணாநிதியும், ஜெயலலிதாவும் என்ன செய்தார்கள், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்பதற்குப் பதிலாக பலர் எங்களை தொலைபேசியில் அழைத்து வாய்க்கு வந்தபடி திட்டினார்கள்.
எங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த தமிழக முதல்வர், ஏதோ காரணத்தால் அல்லது நெருக்கடியால் தனது அரசின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அப்படி மாற்றிக் கொண்டபிறகு, மின்சார நிலைமை திடீரென மேம்பட்டதை நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும். எங்கே இருந்து, எப்படி இந்த மின்சாரம் உடனடியாக ஓடி வந்தது? நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டால், கூடங்குளம் உடனே இயங்கும், திரும்பும் திசையெல்லாம் மின்சாரம் பெருக்கெடுத்து ஓடும் என்றார்கள். மூன்று மாதங்கள் ஆனபிறகும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எதுவும் நடக்கவில்லையே? ஏன்? என்ன ஆயிற்று? கடன்காரனுக்கு அவதி சொல்வது போல, பத்து நாளில் வரும், இரண்டு வாரத்தில் வரும் என்று உளறிக் கொண்டிருக்கிறார்களே, பொய் சொல்கிறார்களே? இப்படி செய்வதற்கு ஒரு மத்திய மந்திரி நியமிக்கப் பட்டிருக்கிறாரே?
1965-ம் ஆண்டு இந்தி மொழி நம் மீது திணிக்கப்பட்டபோது எப்படி வெகுண்டெழுந்து நமது மொழியுரிமையை, அடிப்படை தேசிய இன அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளப் போராடி வென்றோமோ, அந்த மாதிரியான ஒரு நிலையில்தான் தமிழ் மக்கள் இன்று நிற்கிறோம். தற்போது மொழியைவிட முக்கியமான நமது இயற்கை வாழ்வாதாரங்களும், நமது எதிர்கால சந்ததியின் நல்வாழ்வும் கேள்விக்குறியாகி இருக்கின்றன. இதனை நாம் உணர்ந்தாகவேண்டும்.
அண்டை மாநிலமான கேரளத்தில் அம்மக்கள் தங்கள் இயற்கை வளங்களை எவ்வளவு கவனமாகப் போற்றி பாதுகாக்கிறார்கள் பாருங்கள். அங்கே ஓர் அணுமின் நிலையம் நிறுவ முயற்சித்தபோது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக நின்று எதிர்த்தார்கள். இன்றும் எதிர்க்கிறார்கள். கூடன்குளத்திலிருந்து 500 மெகவாட் மின்சாரம் வேண்டும் என உரிமையோடு கேட்கும் கேரள முதல்வர் எங்கள் மாநிலத்தில் ஓர் அணுமின் நிலையத்தைக் கட்டுங்கள் என மத்திய அரசைக் கேட்பாரா? கேட்க முடியுமா? கேட்டால் மலையாள மக்கள் விடுவார்களா? அந்த மாநிலத்தில் ஓர் அனல் மின் நிலையம் கூட நிறுவ முடியாது. கூடங்குளம் இயங்கினால் 150 கிமீ தூரத்திலுள்ள தமக்கு கதிர்வீச்சுக் கேடுகள் வரும் என அஞ்சி பத்து இடங்களில் கதிர்வீச்சின் அளவை அளக்க, அவதானிக்க ஆய்வு மையங்கள் அமைத்து விட்டார்கள் இலங்கையிலே! ஆனால் நமது தமிழகத்தில்?
தமிழனின் உயிருக்குகூட விலை கிடையாது என்பதுதான் உண்மை. நக்கநேரி நாடகம் பற்றிக் கேள்விபட்டிருப்பீர்கள். கூடங்குளம் அணுஉலை இயங்கத்துவங்கும் முன்னர் பேரிடர் பயிற்சி நடத்தப்படவேண்டும் என்பது விதி. இந்தியாவிலேயே மிகப்பெரிய அணுஉலை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலை, நாட்டின் முதல் மென்நீர்  உலை, அதிகமான மக்கள் அடர்த்தியாக வாழ்கிற ஒரு தீபகற்ப மூலையில் அமைக்கப்பட்டிருக்கிற பூதாகரமானத் திட்டம் கூடங்குளம். குறைந்தபட்சம் 30 கிமீ தூரத்திலாவது மக்களுக்கு பேரிடர் பயிற்சி கொடுப்பது மிகமிக முக்கியமானது. ஆனால் 10,000 பேர் வாழும் இடிந்தகரை, 20,000 பேர் வாழும் கூடங்குளம் போன்ற கிராமங்கள் அருகே இருக்கும்போது, வெறும் 300 பேர் மட்டுமே வாழ்கின்ற நக்கநேரிக்குப் போய் தினசரி கூலி வேலைக்காக 200 பேர் ஊருக்கு வெளியே போன பிறகு, சுமார் 100 எழுத படிக்கத் தெரியாத பெண்களும் குழந்தைகளும் இருக்கும்போது நூற்றுக்கணக்கான காவல் துறையினரும், துணை ஆட்சியரும், வட்டாட்சியரும், அணுசக்தித் துறை அதிகாரிகளும் போய் பாவலாக் காட்டிவிட்டு, பேரிடர் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது, இனி அடுத்தக் காட்சி 2014-ம் ஆண்டு என்று அறிவித்தனர்.
இப்படித்தான் பேரிடர் பயிற்சி நடத்துவதா? ஏதோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் தீயணைப்பு பயிற்சி நடத்திவிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிக்  குழந்தைகளுக்கும் அந்த பயிற்சி கொடுத்துவிட்டதாக சொல்ல முடியுமா? எங்கோ ஒரு திரை அரங்கில் பேரிடர் பயிற்சி நடத்திவிட்டு, நாடு முழுவதும் உள்ள திரை அரங்குகள் பாதுகாப்பாக உள்ளன என்று சொல்ல முடியுமா? நமது உயிர்களை துச்சமென நடத்தும் அரசை, அரசு நிறுவனங்களை ஏன் தட்டிக்கேட்கத் தயங்குகிறோம்?
bhopal_tragedy_3601984ம் ஆண்டு போபால் விடவாயு விபத்து நடந்தபோது ஓர் ஈரத்துணியை எடுத்து வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு ஓடுவதற்கு பயிற்சி அளித்திருந்தால் இத்தனை பேர் உயிரிழந்திருக்கமாட்டார்கள், ஊனமடைந்திருக்கமாட்டார்கள். ஆனால் மத்திய மாநில அரசுகள் செய்யவில்லை. இருபத்து எட்டு ஆண்டுகள் ஆனபிறகும் அந்த விடவாயு ஆலையில் மண்டிக்கிடக்கும் ஆபத்தான கழிவுகளை இன்னும் ஏன் அப்புறப்படுத்தவில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் அரசுகளை கடிந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை. இப்போது இந்த விபத்துக்கும் அமெரிக்காவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல அந்த நாட்டிலே தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள். இதைப் பற்றிக்கூட நீங்கள் சிந்தித்துப் பார்க்காதது ஏன்?
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 58 பேர், பெரும்பாலும் குழந்தைகள், டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். ஒரு மனிதனுக்கு வாழ்வில் நிகழும் மிகப்பெரிய இழப்பு, துயரம் எது? தனது குழந்தையை அநியாயமாகப் பறிகொடுத்து, குழிக்குள் போட்டு மூடுவதுதான். இத்தனை குழந்தைகள் இறந்ததற்கு யார் பொறுப்பு? மாவட்ட ஆட்சித்தலைவரும், வருவாய்த் துறை அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் சரியாக பணியாற்றி ஏன் இந்த தொற்று நோயைத் தவிர்க்கவில்லை, தடுக்கவில்லை? இது ஒரு மனித குலத்துக்கு எதிரான குற்றமில்லையா? சம்பளமும் கிம்பளமும் வாங்கிக்கொண்டுதானே இருந்தார்கள் இந்த அதிகாரிகள்?
நாளை கூடங்குளத்தில் ஒரு விபத்து நடந்தால் என்ன ஆகும்? விபத்தே நடக்காது, இதுதான் உலகிலேயே மிகச் சிறந்த, மிக உன்னதமான அணுஉலை என்று ரசிய நிறுவனமும், அரசும் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை என்றால், எவ்வளவு தொகை இழப்பீடு வேண்டுமென்றாலும் தருகிறோம், எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் தருகிறோம் என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
உங்கள் வீட்டுக்கு ஒரு சலவை இயந்திரம் வாங்குகிறீர்கள். ‘ஓஹோ ப்ரொடக்சன்ஸ்’ நிறுவனம் தயாரித்த அந்த இயந்திரத்தை ‘மன்னார் & கம்பனியில்’ வாங்குகிறீர்கள். ஒருநாள் சலவை செய்துகொண்டிருக்கும்போது, உங்கள் துணைவியாரின் கை இயந்திரத்தில் சிக்கி ஒரு விபத்து நடந்துவிடுகிறது. இந்திய-ரஷிய ஒப்பந்தத்தின்படி, சலவை இயந்திரத்தை உருவாக்கிய அல்லது விற்ற நிறுவனங்களுக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. இயந்திரத்தை ஓட்டியவர்தான் இழப்பீடு தர வேண்டும். உங்கள் மனைவி உங்கள் குடும்ப நிதியிலிருந்து ஒரு தொகையை எடுத்து உங்களுக்குத் தருவார். உங்கள் பணத்திலேயே உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து நடந்தால் ரஷ்ய நிறுவனமோ, ரஷ்ய அரசோ இழப்பீடு தரமாட்டார்கள். என்.பி.சி.ஐ.எல் எனும் நமது பொதுத்துறை நிறுவனம் நமது வரிப்பணத்தை எடுத்து நமக்கு இழப்பீடு தருவார்கள். வருமானம் எல்லாம் ரஷ்யாவுக்கு, இழப்பு எல்லாம் நமக்கு. இதைக்கூட கேள்வி கேட்காமல் இருக்கிறோமே, என்ன நியாயம்?
நமது கல்பாக்கத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத ஈனுலைகளை நிறுவி வருகிறார்களே, கவனித்தீர்களா? தமிழகத்தின் தென்கோடியாம் கூடங்குளத்திலிருந்து அபாயகரமான அணுக்கழிவுகளை வடகோடிக்கு எடுத்துச் சென்று அதை எரிபொருளாக உபயோகிப்பார்களாம். எப்படி எடுத்துச் செல்வார்கள்; நமது தமிழ் சமுதாயத்திற்கு என்னென்ன ஆபத்துகள் வரலாம் என்பது பற்றிக் கூட சிந்திக்காது இருப்பதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
இந்தியக் குடியரசு தலைவர் பிரதிபா பாடீல் கடந்த 28 மாதங்களில் 30 தூக்குத் தண்டனை கைதிகளுக்குக் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுருக்கி இருக்கிறார். ஆனால் முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டும் இன்னும் அது பற்றி சிந்திக்கக் கூட முடியாமல் இருக்கிறதே ஏன்? 
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதாக தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டாலே 20 ஆண்டுகள் சிறையில் தள்ளப்படுவார்கள் என புதிய சட்டம் இயற்றிகொண்டிருக்கிறதே அந்த அரசு? நமக்காக இந்திய அரசு இன்னும் குரல் கொடுக்கவில்லையே ஏன்?
ஒரு முள்ளிவாய்க்கால் போதாதா, இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் வேண்டுமா எனக் கேட்டிருக்கும் சிங்கள அமைச்சர் ரணவக்க என்பவரை இதுவரை இந்திய அரசு கண்டிக்கவில்லையே ஏன்?
kalpakkam_620
நான்கு மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்தின் ஆதாரமான அமராவதி நதியின் துணை ஆறுகளான சின்னாறு, மாயாறு, பாம்பாறுகளின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் கேரள அரசை மத்திய அரசு தட்டிக் கேட்கவில்லையே ஏன்? அதுபோல சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பகுதியில் 4.5 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டுவதற்கு கேரள அரசு முனைகிறது. இதையாவது யாராவது கேட்கிறார்களா?
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் எரிவாயுக் குழாய் கேரளா-கர்நாடகா வழியாக நேரடியாகப் போவதற்கு பதில், வளைந்து தமிழகத்தின் ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக ஏராளமான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்துச் செல்கிறது. இதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை ஏன்?
ஒரு வருடத்துக்கு முன் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழக முதல்வர் தமிழகத்துக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை, நிதி உதவியை, கூடுதல் மின்சாரத்தை, ஆதரவைக் கேட்டபோதெல்லாம் திரும்பிப் பார்க்காத, ஏன் என்று கூட கேட்காத மன்மோகன் சிங் அரசு பாகிஸ்தானுக்கு 5,000 மெகாவாட் மின்சாரம் தருவதும், ஐரோப்பிய நாடுகளின் நிதி நிலையை சீரமைக்க 56,000 கோடி ரூபாய் உதவி செய்வதும் எப்படி நியாயமாகும்? 
எதையுமே பார்க்காதே, எதையுமே கேட்காதே, எதையுமே பேசாதே என்று வாளாவிருப்பதுதான் தமிழனின் வாழ்விலக்கணமா என கேட்கத்தோன்றுகிறது. இல்லை என நாம் அனைவரும் ஏகோபித்த குரலில் உரக்கச் சொல்வதுதான் இன்றைய உடனடித் தேவை. தமிழகத்தின் இளம் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை புறந்தள்ளி, மனமாச்சார்யங்களை  ஒதுக்கி வைத்து, ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்காக உடனடியாக ஒன்று படவேண்டும். பொது செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி அனைத்து தளங்களிலும் ஒரு புதிய தமிழ் சமுதாய மறுமலர்ச்சிக்காக உழைக்க முன்வர வேண்டும்.
(கட்டுரையாளர் சுப.உதயகுமார் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.)