திங்கள், 29 அக்டோபர், 2012

பச்சைத் தமிழ்த் தேசியம்

ஒரு பெரியார்-அண்ணா கால தி.(மு).க.காரரின் மகனாகப் பிறந்த காரணத்தால் நான் பல நன்மைகளைப் பெற்றேன் என்று உறுதியாக நினைக்கிறேன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, மூட நம்பிக்கைக் களைதல் என பல நல்ல சிந்தனைகளை, செயல்பாடுகளைப் பெற அது எனக்கு அச்சாரமாய் அமைந்தது. இவை எல்லாவற்றையும் விட பார்ப்பனிய‌ ஆதிக்கம் எனும் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்டபசை இனம் கண்டிட, எதிர்த்திட, எடுத்தெறிந்திடவும் பெரிதும் உதவியது. இந்த விழிப்புணர்வு அன்றைக்கு கிடைக்காமல் போயிருந்தால், இன்றைக்கு பார்ப்பனர் உயர்ந்தவர், அவர் வணங்கும் தெய்வங்கள் உயர்ந்தவை, அவர் ஓதும் வேதம் உன்னதமானது என்று உளறிக் கொண்டிருந்திருப்பேன். காக்கி நிக்கர் போட்டுக்கொண்டு, மராட்டிய பார்ப்பனர்களின் புகழ் பாடிக் கொண்டிருந்திருப்பேன். மனுதர்ம மடமை, சாதீய வெறி, இனவேற்றுமைச் சதி, அதிகாரத் திமிர், அடக்கியாளும் அகந்தை, முதலாளித்துவ காமம் என கட்டமைக்கப்பட்டிருந்த சமூக ஏற்பாட்டை எந்த விதமான கேள்வியும் இன்றி ஏற்றுக்கொண்டிருப்பேன். தீண்டாமை (untouchability), அதைவிடக் கொடுமையான காணாமை (unseeability) போன்றவை இயற்கை விதிகளாகத் தோற்றமளித்திருக்கும். இவை இரண்டையும் விட மோசமானது நம்பாமை (unbelievability) – தங்களால் மட்டுமே சிந்திக்க, செயல்பட, தீர்மானிக்க, நடத்த முடியும்; வேறு யாராலும் தங்களைப் போல் இயங்க முடியாது; மற்றவர்கள் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாது எனும் தான்தோன்றித் தத்துவத்தை தர்க்கரீதியாகப் பார்த்திருக்க மாட்டேன். “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா அய்யா சொல்வது புரிகிறது என்றாலும், திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. காங்கிரஸ் வல்லாதிக்கத்தை எதிர்க்க, பிற்போக்கான சமுதாயத்தைக் கேள்வி கேட்க, அதன் ஏற்பாடுகளை மாற்றியமைக்க பெரியாரியம் உண்மையிலேயே உதவியது. பெரியார் கையாண்ட சில சொற்கள், சிந்தனைகள், கருத்துக்கள், முடிவுகள், நடவடிக்கைகள், சமரசங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாக மாறி இருக்கலாம். காலமும், சூழலும், தேவையும் மாறும்போது, கருத்துக்கள் மாறுவதில் வியப்பேதும் இருக்க முடியாது. இன்னும் பழைய பெரியாரை, அவரின் பழைய கொள்கைகளை கட்டிக்கொண்டு இழுப்பது தேவையற்றது. பெரியாரிடமிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, தேவையற்றவற்றை விட்டுவிடுவதுதான் அறிவுடைமை. முன்னாள் தலைவர்கள் இட்ட அஸ்திவாரங்களின் மீது இந்நாளையத் தேவைக்கு ஏற்றார்போல கட்டிக்கொள்வதுதான் சிறப்பு. இந்தப் படைப்பாற்றலில், புத்தாக்கத்தில் கவனம் செலுத்தவேண்டுமே தவிர, இன்றைய நாளில் நின்று கொண்டு கழிந்த நூற்றாண்டு நிகழ்வுகளை விமர்சிப்பதும், இங்கே நின்றவாறே காலனி ஆதிக்க காலத்து அரசியலை அலசுவதும் நமது தற்போதைய தேவைக்கு பெருமளவில் உதவும் விடயங்களல்ல என்பது என் எண்ணம். வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, வீண் பேச்சு பேசிக்கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது. பெரியார் கன்னடரா, தமிழரா எனும் விவாதம் எப்படி நமக்கு உதவும் என்பதும் எனக்குப் புரியவில்லை. தமிழரை மட்டும்தான் தலைவராய் ஏற்றுக் கொள்வோம், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றால், நாம் போற்றுகின்ற புத்தன், ஏசு, நபிகள், மார்க்ஸ், லெனின், காந்தி, அம்பேத்கர் யாருமே தமிழர் அல்லவே. இன்றையச் சூழலில் ஒரே ஒரு தமிழ் தலைவர் வருவார், அவர் ஒரே ஒரு தமிழ் புத்தகம் தருவார், ஒரே ஒரு தமிழ் கொள்கைக் கூறுகளை அருள்வார், நாம் எல்லாம் சுபிட்சத்தை நோக்கி சுகமாக நடப்போம் என்று கனவு காண்பது மடமையிலும் மடமை. யார் தமிழர்? இப்போது யார் தமிழர் எனும் கேள்வி எழுகிறது. ‘யார் தமிழர்’ என்பது ‘சுத்தமான தமிழ் எது’ என்பது போலவே ஒரு பெரிய பிரச்சினை. நாங்கள் நாகர்கோவில்காரர்கள். எங்கள் தமிழ்தான் உண்மையான தமிழ் மொழி என்கிறோம். வட தமிழ்நாட்டு மக்கள் “என்னய்யா, மலையாளம் போல பேசுகிறீர்களே” என முகம் சுளிக்கின்றனர். சென்னைவாசி பேசுவது தமிழா என்று கோவைக்காரர்கள் குமுறுகிறார்கள். இது போன்ற நிலைதான் தமிழர் யார் என்று வரையறுப்பதிலும் நிலவுகிறது. தமிழ் நாட்டில் வாழ்கிறவர் எல்லோரும் தமிழரா? தமிழ் மொழி பேசுகிறவர் அனைவரும் தமிழரா? வீட்டிலே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசினாலும், வெளியே வந்து தமிழ் பேசிவிட்டால் போதுமா என்று பல கேள்விகள் எழுகின்றன. தன்னுடைய அடையாளம் பற்றிக் கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய தலைவர் அப்துல் வாலி கான், “நான் கடந்த ஐம்பது வருடங்களாக பாகிஸ்தானியாக இருக்கிறேன், ஐநூறு வருடங்களாக முஸ்லீமாக இருக்கிறேன், ஆனால் ஐயாயிரம் வருடங்களாக பட்டானாக இருக்கிறேன்” என்றார். அதுபோல நாமும் அறுபது வருடங்களாகத்தான் இந்தியராக இருக்கிறோம். ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளாக தமிழராக வாழ்கிறோம். இன சுத்தம் இன்றைய உலகில் சாத்தியமா என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாகரீகத்தோடு இன்னும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத பழங்குடிகளில் மட்டும்தான் இன சுத்தமான மக்களைப் பார்க்க முடியும். நமது தமிழ்க்குடி வந்தவன், போனவன், தங்கியவன், தயங்கி நின்றவன், கடந்து சென்றவன் எல்லாம் ஏறி மேய்ந்து கலப்படமாகிவிட்ட ஒரு சமூகமல்ல என்பது உண்மை. அமெரிக்காவிலே, ஆஸ்திரேலியாவிலே சிலர் சொல்வது போல நான் 50 சதவீதம் ஐரிஷ், 30 சதவீதம் ஜெர்மன், 20 சதவீதம் பூர்வீகக்குடி என்றெல்லாம் நாம் சொல்வதில்லை, சொல்லத் தேவையும் இல்லை. அதே நேரம் நாமெல்லாருமே 100 சதவீதம் சுத்தமான, கலப்பே இல்லாத அக்மார்க் தமிழர்கள் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. யார் யாரோ இங்கே வந்து நம்மை ஆண்டிருக்கிறார்கள். எவரெவர் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. இன சுத்தம் பார்க்கும்போது மாற்று மொழி பேசுகிறவர்; கிறித்தவர், இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை மதத்தவர்; வேறு இடங்களிலிருந்து குடி பெயர்ந்து வந்தவர்கள் என எல்லோரும் தள்ளப்பட்டால் வேறு யார்தான் எஞ்சி இருப்பார்கள்? இந்த இன சுத்த சித்தாந்தம் எவ்வளவு ஆபத்தானது, என்னென்ன தீங்குகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பல நாட்டு வரலாறுகளில் நாம் பார்க்கிறோம். அப்படியானால் தமிழகத்தை வேற்று இனத்தவர்களுக்குத் திறந்து விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க வேண்டுமா? இல்லை. இன சுத்த சித்தாந்தத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நமது அடையாளத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பது மிக முக்கியம். மலையாளிகள், சிங்களர் மீதான வெறுப்பின் மீது, கோபத்தின் மீது கட்டமைப்பதா? அல்லது நமது பண்டைய புராணங்களின் மீது, வரலாற்றுப் பெருமைகளின் மீது, கலாச்சார குணநலன்களின் மீது ஏற்படுத்திக் கொள்வதா? அல்லது இன்றைய யதார்த்தம், நாளைய தேவைகளைக் கருத்திற்கொண்டு வடிவமைத்துக் கொள்வதா? இன அடையாளம் ஒரு வளையாத விறைப்பான பாசிசக் கொள்கையாக இருக்க வேண்டுமா அல்லது மென்மையான, மிருதுவான குழுக் குறியீடாகத் திகழ வேண்டுமா? தமிழன், தமிழச்சி என்பவர் யார்? தன்னை தமிழ் மகனாக/மகளாக, தமிழ் கூறும் நல்லுலகின் அங்கமாக உணர்வுப்பூர்வமாகப் பார்க்கிற, தனது தமிழ் இனத்தின் சிறப்புக்கு, உயர்வுக்கு, விடுதலைக்கு தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் உழைக்க முன்வருகிறவரே தமிழன், தமிழச்சி எனக் கொள்ளலாம் என்பது என் எண்ணம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்கா, மலேசியா, பினாங்கு, மொரீஷியஸ் நாடுகளில் ஆங்கிலேயரால் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் இன்றைய தலைமுறையினர், தமிழில் பேசவோ, எழுதவோ முடியாதிருப்பினும், தங்களைத் தமிழர்களாகவே உணர்கின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் வீடுகளில்கூட‌ அந்தந்த நாட்டு மொழிதான் பேசுகிறார்கள். அதனால் அவர்களை தமிழரல்லர் என்று ஒதுக்கிவிட முடியாது. இது, தமிழ் பேச, படிக்கத் தெரியாத மூன்றாம் தலைமுறை புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும். எது தமிழ்த் தேசியம்? இன சுத்தம் இயலாத ஒன்றாகிப் போகும்போது, தமிழகத்தைச் சுற்றி இஸ்ரேல் பாணியில் சுவர் கட்ட முடியாத, கட்டக்கூடாத நிலையில், அரசியல் பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு அரிய வகைத் தமிழனை தேடுவதற்குப் பதிலாக, நமது பாரம்பரிய வரையறைக்குத்தான் போகவேண்டியிருக்கிறது: “யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” தமிழ் மண்ணை, தமிழ் வளங்களை, தமிழ் அடையாளத்தை உலகமயமாக்குவதற்குப் பதிலாக, உலகை, உலக வளங்களை தமிழ்மயமாக்குவதற்கு முயற்சிப்போம். அதுதான் தமிழ்த் தேசியம். தமிழ் வித்தில் முளைத்தெழுந்து, தமிழ் மண்ணில் வேரூன்றி, தமிழ் மொழியின் சாறெடுத்து, தமிழ் அடையாளத்தை சுவாசித்து வளர்ந்து, தரணியெல்லாம் பரந்து விரிந்து, தன் தண்டமிழ் நிழலில் ஒதுங்குவோர்க்கு காய்கனியும், மாமருந்தும், குளிர்ச்சியும், வளர்ச்சியும் தருகின்ற கற்பகத்தருவே தமிழ்த் தேசியம். ஒரு குறிப்பிட்ட தமிழ்த் தேசிய அமைப்போ, குழுவோ, தலைவரோ தேர்ந்து வழங்குவதல்ல தமிழ்த் தேசிய அடையாளம். தனிப்பட்ட மனிதரை சுயமாக தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதுதான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் மேலிருந்துக் கீழே திணிக்கப்படுவதல்ல. கீழிருந்து மேலாகப் பரந்து விரிவது. மதவெறி, இனவெறி, சாதீயம், ஆணாதிக்கம், வயதானோரதிகாரம், வகுப்புவாதம், வல்லாதிக்கம், வன்கொடுமை, வன்முறை ஏதுமற்ற சமாதானகரமான சமத்துவ சமுதாயத்தை நிர்மாணிக்க முயல்கிற சித்தாந்தம்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்பது எது, யார் உண்மையான தமிழ்த் தேசியவாதி என்பதல்ல பிரச்சினை. தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களாகிய நாம் எதை அடைய விரும்புகிறோம்? அதுதான் மிக முக்கியம். பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் திட்டுவதல்ல தமிழ்த் தேசியம். முக்கிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கதை முடிந்துகொண்டிருக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலை செய்யப்படும்போது, ராஜினாமா கூத்து, உண்ணாவிரத நாடகம் நடத்தியவர், இன்று டெசோ மாநாடு நடத்தி அரசியல் வாழ்வை புதுப்பித்துக்கொள்ள புலம்பித் திரிகிறார். இதுகாறும் பாராமுகமாய் சும்மா இருந்த அம்மா, தமிழ்த் தேசிய அலை தமிழகத்தில் வீசுவதைப் புரிந்துகொண்டு, பரபரப்பான மூவர் தூக்கு, கட்சத் தீவு, மீனவர் கொலை, சிங்களருக்கு இராணுவப் பயிற்சி போன்ற பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறார். தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். செத்துக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சி அரசியலை தூக்கிக் கொண்டுபோய் புதைத்து விட்டு, இனி தமிழகத்தை தமிழன்தான் ஆள்வான், தமிழச்சிதான் ஆள்வாள் என உறுதி பூணுவதுதான் தமிழ்த் தேசியம். இவன் தெலுங்கன், இவன் கன்னடன், இவன் மலையாளி என்று நாமகரணம் சூட்டுவது தமிழ்த் தேசியமல்ல. “தமிழ் வாழ்க” என நகராட்சிக் கழிப்பறைகளில் எழுதி வைப்பதும் தமிழ்த் தேசியமல்ல. எந்தக் கட்சி ஆட்சிக்கு வருவது, யாரை முதல்வராக்குவது என நமக்குள் அடித்துக் கொள்வதுமல்ல தமிழ்த் தேசியம். தமிழீழப் பிரச்சினை பற்றி பகட்டாகப் பேசுவதும், தலைவர் பிரபாகரன் புகழ் பாடுவதும் தமிழ்த் தேசியமல்ல. அப்படியானால் எது தான் தமிழ்த் தேசியம்? தனியொரு தமிழனுக்கு உணவில்லை எனில், ஒட்டுமொத்த தமிழினமும் கேவலப்படுவதுதான், கேள்வி கேட்பதுதான், அதை மாற்றி அமைப்பதுதான் தமிழ்த் தேசியம். பிரிட்டிஷ்காரன் தேயிலைத் தோட்டத்தில் அடிமை வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கூலிக்காரனாக இல்லை இன்றையத் தமிழன் என நமது கூலி அடையாளத்தை தூக்கி எறிவதுதான் தமிழ்த் தேசியம். தமிழ் மக்கள் திரைகடல் ஓடி இனி திரவியம் தேடப் போகவேண்டாம், நம் தமிழ் மண்ணிலேயே தன் மனைவி மக்களுடன் நல்வாழ்வு நடத்தி, பொருளீட்டி, புகழோடு வாழமுடியும் எனச் செய்வதுதான் தமிழ்த் தேசியம். “மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற பாரதியின் கூற்றை நிலை நிறுத்துவது போல, பெண் விடுதலை, விதவை மறுமணம், அம்மா என்றழைத்து தெய்வமாக்காமல் அருமை நண்பராகவும் பெண்ணைப் பார்க்கலாம் எனும் கலாச்சார மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் தமிழ்த் தேசியம். திரைப்படம், தொலைக்காட்சி, சினிமா நடிகர், நடிகைகளிடமிருந்து தமிழ்க் கலாச்சாரத்தை மீட்டெடுத்து, இயல், இசை, நாடகம் எனும் பாரம்பரிய தளங்களுக்குக் கொண்டு போவதுதான் தமிழ்த் தேசியம். உணர்ச்சி வயப்படுவதும், ஓடிப்போய் உயிரை விடுவதுமான ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ நடவடிக்கைகளைக் கைவிட்டு, “எண்ணித் துணிக கருமம்” என நம் மக்களை மாற்றி செயல்படவைப்பதுதான் தமிழ்த் தேசியம். அன்பு, வீரம், கொல்லாமை, நல்லாறு எனும் பல்வேறு மாதிரி தமிழ் கோட்பாடுகளை உலகுக்கு எடுத்துச் சொல்லி அவற்றை வளர்த்தெடுப்பதுதான் தமிழ்த் தேசியம். “பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போச்சே” என்று உரக்கப் பாடி, சாதி, மதக் குழுக்களால் யாரும் யாரையும் அடக்க முடியாதபடி, அதட்ட முடியாதபடி புதிய சமுதாயம் ஒன்றைக் கட்டுவதுதான் தமிழ்த் தேசியம். தலைமுறை தலைமுறையாய் அடக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள், தலித் மக்கள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள், மீனவர்கள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினரும் தமிழராய் தலைநிமிர்ந்து வாழ வழி செய்வதுதான் தமிழ்த் தேசியம். ஈழத்தில் வதைபடும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும், உலகெங்குமுள்ள தமிழருக்கும் தோள்கொடுத்து துணை நிற்பதுதான் தமிழ்த் தேசியம். வரவறிந்து, திட்டமிட்டு செலவு செய்து, மக்களுக்கு இலவசம் கொடுக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்து, தொழில் வளம் பெருக்கி, விவசாயம் காத்து, வாழ்வாதாரங்கள் போற்றி, எதிர்கால சந்ததிகளுக்கு எம்மண்ணை, நீரை, காற்றை, கடலை, மலைகளை, காடுகளை, மரம் மட்டைகளை காப்பாற்றி விட்டுச் செல்வதுதான் தமிழ்த் தேசியம். விஞ்ஞானம், வளர்ச்சி என்ற பெயரில் கூடங்குளம், கல்பாக்கம், நியுட்ரினோ, சிர்கோனியம் போன்ற ஆபத்தான திட்டங்களைத் திணிப்பதை எதிர்ப்பதுதான் தமிழ்த் தேசியம். நதிநீர் பங்கீடு, தன்னிறைவுத் திட்டங்களில், இந்திய தேசியத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் தமிழருக்கு நீதி கிடைக்க, தமிழரின் உரிமை காக்கப் போராடுவதுதான் தமிழ்த் தேசியம். “எட்டுத் திக்கும் செல்வோம், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்” என்ற நிலையில் பெருந்தன்மையாக வாழ்ந்தாலும், எங்கள் மீது அந்நிய மொழியை, அரசியலை, வல்லாதிக்கத்தை, அடிமைத்தனத்தை சுமத்த வந்தால் எதிர்த்து நின்று, போராடி, விரட்டியடிப்போம் என்று வீறுகொள்வதுதான் தமிழ்த் தேசியம். பச்சைத் தமிழ்த் தேசியம் இன்றைய பன்னாட்டுச் சூழலில், இந்திய‌ அரசியலில் நமக்குத் தேவைப்படுவது பச்சைத் தமிழ் தேசியம். இந்தச் சொற்றொடர் இரண்டு அர்த்தங்களைத் தருகிறது. ஒன்று, அப்பழுக்கற்ற, கலப்படமற்ற, சமரசமற்ற, உண்மையான தமிழ்த் தேசியம் என்பதைக் குறிக்கிறது. இன்னொன்று ‘தமிழ்’ தேசியம், ‘தமிழர்’ தேசியம் போன்ற கொள்கைகளையும் இணைத்து, கூடவே பசுமை உணர்வுகளை, விழுமிய‌ங்களை, கொள்கைகளை, திட்டங்களை உள்ளடக்கியது என்றும் அர்த்தமாகிறது. இன்றைய தமிழகத்தினுடைய தேவை தமிழ் சூழல் தேசியம்தான். சூழல் என்பது வெறும் இயற்கை சுற்றுச்சூழலை மட்டும் குறிப்பதல்ல. சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்கங்களும், தாக்கங்களும் கூட பரந்துபட்ட சூழலுக்குள் உட்படுவதால், நமது புத்தாக்கக் கொள்கையும் அகலமானதாய் ஆழமானதாய் இருத்தல் அவசியம். பசுமைக் கொள்கை என்பது வெறும் அரசியல் கொள்கையோ அல்லது பொருளாதாரத் திட்டம் மட்டுமோ அல்ல. அது ஓர் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை. இயற்கையைப் பேணுதல், சனநாயகம் காத்தல், சமூக நீதி-சமத்துவத்துக்காய் உழைத்தல், வன்முறை தவிர்த்தல், பகிர்ந்தாளுதல், உள்ளூர் பொருளாதாரம் பேணல், பெண் விடுதலை கோரல், சமூகப் பன்மை போற்றல், பொறுப்போடு வாழ்தல், வருங்காலம் கருதல், நீடித்து நிலைத்து நிற்றல் என்பவையே பசுமை விழுமங்கள். நாம் எடுத்தாளப்போகும் பச்சைத் தமிழ்த் தேசியம் என்னென்ன திண்மமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என ஒத்தக்கருத்து கொண்டோர் ஒன்றிணைந்து முடிவு செய்யலாம். ஒரு சில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்: தமிழகம் தண்ணீர் தன்னிறைவு பெறுவது, நிலத் தரகர்களிடமிருந்து விளைநிலங்களைக் காத்துக்கொள்வது, மானாவாரிப் பயிர்களை திட்டமிட்டுப் பயிரிட்டு, பரந்து கிடக்கும் தமிழ் மண்ணை அறிவுப்பூர்வமாக பயன்படுத்துவது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது, தமிழ் கடலை - கடலுணவைக் காப்பது, நம் இயற்கை வளங்களைக் காக்கும் நீடித்த நிலைத்த வளர்ச்சி சித்தாந்தத்தைப் பேணுவது, தமிழினத்தை அச்சுறுத்தும் அணுஉலை மற்றும் மாசுபடுத்தும் பிற உலைகளைத் தடுப்பது, அணு ஆயுதங்களை விரட்டுவது, மென்முறையைப் போற்றி வளர்ப்பது, மது அரக்கனை அழிப்பது, தீண்டாமையை ஒழிப்பது இன்ன பிற. “செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு தேள் வந்து கொட்டுது காதினிலே – எங்கள் மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல் மண்ணும் சிரிக்குது பீச்சினிலே” என கவிஞர் கண்ணதாசன் வர்ணிக்கும் இன்றையத் தமிழகத்தை மாற்றியமைத்து, “செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என மகாகவி பாரதியார் கனவில் மிளிரும் தமிழகமாக மாற்றியமைப்பதுதான் பச்சைத் தமிழ்த் தேசியம். (கட்டுரையாளர் சுப.உதயகுமார் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.)

தமிழரின் உடனடித் தேவை


நமது தமிழ் சமுதாயம் ஒரு திருப்பு முனையில் நின்று கொண்டிருக்கிறது. அதன் குறியீடாக பல சமூக, அரசியல், கலாச்சார பிரச்சினைகளைப் பற்றி நாம் இன்று விவாதிக்கத் துவங்கியிருக்கிறோம். தமிழனை சிந்திக்கவிடாமல், கேள்வி கேட்கவிடாமல், அடுக்குமொழி பேசி, அனாவசியமாக கடிதங்கள் எழுதி, குழாயடிச் சண்டை, குடும்பப்பகை போன்ற ஓர் அசிங்கமான அரசியல் கலாச்சாரத்துக்குள் நம்மைத் தள்ளி திமுகவும், அதிமுகவும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். வெற்று வார்த்தைகளையும், வீர வசனங்களையும் கேட்டு வீணாகிப்போன நமது தமிழினம், நமது எதிர்காலத்தைப் பற்றி கரிசனத்துடனும் கவனத்துடனும் அலசி ஆராயத் துவங்கிவிட்டது.
koodankulam_371திராவிடம், பெரியாரியம், திமுக-அதிமுக கட்சிகளின் இன விரோதப் போக்கு, தமிழ்த் தேசியம், இந்த சித்தாந்தம் பேசுகிற அமைப்புகளின் இடையேயான சிறு சிறு வேறுபாடுகள், ஈழப் பிரச்சினையில் நமது நிலைப்பாடு பற்றியெல்லாம் ஒர் ஆரோக்கியமான அரசியல் விவாதம் நடக்கத் துவங்கியிருக்கிறது. இந்த விவாதம் தொடர்ந்து நடந்து, ஒலியை விட அதிக ஒளியை உருவாக்கும், உருவாக்கவேண்டும் என விரும்புவோம்.
அதோடு நமது தமிழ் சமுதாயத்தின் பொருளாதாரத்தைப் பற்றியும் நாம் விவாதிக்க முன்வர வேண்டும். “வரவு எட்டணா, செலவு பத்தணா” என்ற வகையில்தான் நமது மாநில நிதி நிர்வாகம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. சாராயம் விற்று, நம் தமிழ் சகோதரர்களை எல்லாம் குடிகாரர்களாக்கி, நமது குடும்பங்களை எல்லாம் குட்டிசுவராக்கித்தான் அரசை நடத்துகின்ற ஒரு இழிநிலை நிலவி வருகிறது. இலவசமாக பொருட்கள் கொடுத்து, குடும்பத் தலைவர்களைப் பொறுப்பற்றவர்களாக்கி, தமிழ் மக்களை பிச்சைக்காரர்களாக்கி ஒரு பெரும் அசிங்கம் நடந்து கொண்டிருக்கிறது. விவசாய அபிவிருத்தி, தொழில்வள உருவாக்கம், வேலை வாய்ப்பு, வருமான அதிகரிப்பு, பொருளாதார மேம்பாடு என சிந்திப்பதற்குப் பதிலாக, இனாம் கொடுப்பது, கை ஏந்தியே பிழைக்க வைப்பது, இடையில் கிடைப்பதை சுருட்டிக் கொள்வது என செயல்படுகிறார்கள் ஆட்சியாளர்கள்.
பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக் காலத்தில் ஏழ்மை தலைவிரித்து ஆடியபோது, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, இலவச உணவோடு முட்டை போடுகிறோம், முளைப்பயிறு தருகிறோம் என்று இறுமாப்பு பேசுகிறது ஆட்சி பீடம். இந்த சத்துணவு வேலை கிடைத்தால் நமது பங்குக்கு நாமும் திருடலாம் என்று மக்கள் போட்டி போடுகிற நிலையைப் பார்க்கிறோம். ரூபாய் 5,500தான் மாதச் சம்பளம் என்றாலும், ஒரு சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு 632 பெண்கள் திருச்சியில் போட்டி போட்டதாக செய்திகள் சொல்லுகின்றன.
வெறுப்பு, கோபத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அரசியலை கேள்விக்குள்ளாக்குவதுபோல; இலவசம், லஞ்சம் மீது எழுப்பப்பட்ட பொருளாதாரத்தை எதிர்க்க முனைவதுபோல; பழம்பெருமை, வெளிவேடம் மீது நிறுவப்பட்ட கலாச்சாரத்தையும் நாம் மறுபரிசீலனை பண்ணியாகவேண்டும். திரைப்படங்களில் ஆபாசம், சின்னத்திரையில் சிறுமைத்தனம், பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பது பாவிப்பது, பாலியல் கல்வி எதிர்ப்பு, மறுமணம் மறுப்பு, முதியோர் புறக்கணிப்பு என கலாச்சார அழிவுக்குள் புதைந்து கொண்டிருக்கிறோம்.
முள்ளிவாய்க்காலில் ஓர் இனப்படுகொலைக்கு ஆளானாலும், நம் ஈழத்துச் சொந்தங்கள் நீதி கேட்டு நடுத்தெருவில் நின்றாலும், முல்லைப்பெரியாரிலும், கூடங்குளத்திலும் ஒரு புது வரலாற்றை நம் தமிழ் சொந்தங்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். சமூகம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் தாண்டி, நமது வாழ்வுரிமைகளை, வாழ்வாதாரங்களைப் பற்றி சிந்திக்கத் துவங்கிவிட்டோம் நாம்.
இந்த நேர்மறைப் போக்கை எப்படி நெறிப்படுத்துவது, எப்படி தக்கவைத்துக்கொள்வது, எங்ஙனம் விரிவு படுத்துவது என்பது பற்றி நாம் விவாதித்தாக வேண்டும். தமிழ் சமுதாயத்தின் பல தலைவர்கள் இடிந்தகரையில் யூலை முதல் நாள்  கூடிய‌து இந்த முயற்சிக்கு ஒரு துவக்கமாக இருக்குமாயின் சிறப்பாக அமையும். இடிந்தகரை தமிழ்ச் சமுதாயத்தின் விடிந்த கரையாகும். கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக நாங்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும், அணுசக்திக்கும்  மற்றும்அணுவாயுதங்களுக்கும் எதிராகப் பேசியும், எழுதியும், போராடியும் வருகிறோம். கடந்த பதினோரு மாதங்களாக இடிந்தகரையிலேயே ஒரு முனைப்பான போராட்டத்தைத் துவங்கி துவளாது நடத்தி வருகிறோம்.
நம்மில் பலர் எங்கள் போராட்டம் பற்றிய அரசின் பொய்களை, போலிக் குற்றச்சாட்டுக்களை அப்படியே ஏற்றுக்கொண்டனர். அந்நிய நாடுகளிடம் நம்மை, நமது நாட்டை விற்று விட்டவர்கள் சொன்னதைக் கேட்டு, எங்களை கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்றே பலர் நினைத்தார்கள். பணத்துக்காகவும், பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும் மட்டுமே பொதுவாழ்க்கைக்கு வரும் புல்லுருவிகள் போன்று நாங்கள் பார்க்கப்பட்டோம்.
அதற்கும் மேலாக செயற்கை மின்வெட்டு என்ற சக்திமிக்க ஆயுதத்தைப் பிரயோகித்து, இரவும் பகலும் தோன்றும் போதெல்லாம் மின்தடை எற்படுத்தின அரசுகள். தமிழ் மக்களை துன்பத்திற்குள்ளும், வேதனைக்குள்ளும் தள்ளி உங்களை எங்கள் மேல் கோபமடையச் செய்து, எங்கள் போராட்டம் நின்றால் மின்சாரம் தங்குதடையின்றி வரும் என்ற மாயையினை உருவாக்கி எங்களை தமிழின எதிரிகளாகச் சித்தரித்தனர். தமிழகத்தின் மின்பற்றாக்குறையைப் போக்க அடுத்தடுத்து ஆண்ட கருணாநிதியும், ஜெயலலிதாவும் என்ன செய்தார்கள், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்பதற்குப் பதிலாக பலர் எங்களை தொலைபேசியில் அழைத்து வாய்க்கு வந்தபடி திட்டினார்கள்.
எங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த தமிழக முதல்வர், ஏதோ காரணத்தால் அல்லது நெருக்கடியால் தனது அரசின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அப்படி மாற்றிக் கொண்டபிறகு, மின்சார நிலைமை திடீரென மேம்பட்டதை நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும். எங்கே இருந்து, எப்படி இந்த மின்சாரம் உடனடியாக ஓடி வந்தது? நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டால், கூடங்குளம் உடனே இயங்கும், திரும்பும் திசையெல்லாம் மின்சாரம் பெருக்கெடுத்து ஓடும் என்றார்கள். மூன்று மாதங்கள் ஆனபிறகும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எதுவும் நடக்கவில்லையே? ஏன்? என்ன ஆயிற்று? கடன்காரனுக்கு அவதி சொல்வது போல, பத்து நாளில் வரும், இரண்டு வாரத்தில் வரும் என்று உளறிக் கொண்டிருக்கிறார்களே, பொய் சொல்கிறார்களே? இப்படி செய்வதற்கு ஒரு மத்திய மந்திரி நியமிக்கப் பட்டிருக்கிறாரே?
1965-ம் ஆண்டு இந்தி மொழி நம் மீது திணிக்கப்பட்டபோது எப்படி வெகுண்டெழுந்து நமது மொழியுரிமையை, அடிப்படை தேசிய இன அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளப் போராடி வென்றோமோ, அந்த மாதிரியான ஒரு நிலையில்தான் தமிழ் மக்கள் இன்று நிற்கிறோம். தற்போது மொழியைவிட முக்கியமான நமது இயற்கை வாழ்வாதாரங்களும், நமது எதிர்கால சந்ததியின் நல்வாழ்வும் கேள்விக்குறியாகி இருக்கின்றன. இதனை நாம் உணர்ந்தாகவேண்டும்.
அண்டை மாநிலமான கேரளத்தில் அம்மக்கள் தங்கள் இயற்கை வளங்களை எவ்வளவு கவனமாகப் போற்றி பாதுகாக்கிறார்கள் பாருங்கள். அங்கே ஓர் அணுமின் நிலையம் நிறுவ முயற்சித்தபோது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக நின்று எதிர்த்தார்கள். இன்றும் எதிர்க்கிறார்கள். கூடன்குளத்திலிருந்து 500 மெகவாட் மின்சாரம் வேண்டும் என உரிமையோடு கேட்கும் கேரள முதல்வர் எங்கள் மாநிலத்தில் ஓர் அணுமின் நிலையத்தைக் கட்டுங்கள் என மத்திய அரசைக் கேட்பாரா? கேட்க முடியுமா? கேட்டால் மலையாள மக்கள் விடுவார்களா? அந்த மாநிலத்தில் ஓர் அனல் மின் நிலையம் கூட நிறுவ முடியாது. கூடங்குளம் இயங்கினால் 150 கிமீ தூரத்திலுள்ள தமக்கு கதிர்வீச்சுக் கேடுகள் வரும் என அஞ்சி பத்து இடங்களில் கதிர்வீச்சின் அளவை அளக்க, அவதானிக்க ஆய்வு மையங்கள் அமைத்து விட்டார்கள் இலங்கையிலே! ஆனால் நமது தமிழகத்தில்?
தமிழனின் உயிருக்குகூட விலை கிடையாது என்பதுதான் உண்மை. நக்கநேரி நாடகம் பற்றிக் கேள்விபட்டிருப்பீர்கள். கூடங்குளம் அணுஉலை இயங்கத்துவங்கும் முன்னர் பேரிடர் பயிற்சி நடத்தப்படவேண்டும் என்பது விதி. இந்தியாவிலேயே மிகப்பெரிய அணுஉலை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலை, நாட்டின் முதல் மென்நீர்  உலை, அதிகமான மக்கள் அடர்த்தியாக வாழ்கிற ஒரு தீபகற்ப மூலையில் அமைக்கப்பட்டிருக்கிற பூதாகரமானத் திட்டம் கூடங்குளம். குறைந்தபட்சம் 30 கிமீ தூரத்திலாவது மக்களுக்கு பேரிடர் பயிற்சி கொடுப்பது மிகமிக முக்கியமானது. ஆனால் 10,000 பேர் வாழும் இடிந்தகரை, 20,000 பேர் வாழும் கூடங்குளம் போன்ற கிராமங்கள் அருகே இருக்கும்போது, வெறும் 300 பேர் மட்டுமே வாழ்கின்ற நக்கநேரிக்குப் போய் தினசரி கூலி வேலைக்காக 200 பேர் ஊருக்கு வெளியே போன பிறகு, சுமார் 100 எழுத படிக்கத் தெரியாத பெண்களும் குழந்தைகளும் இருக்கும்போது நூற்றுக்கணக்கான காவல் துறையினரும், துணை ஆட்சியரும், வட்டாட்சியரும், அணுசக்தித் துறை அதிகாரிகளும் போய் பாவலாக் காட்டிவிட்டு, பேரிடர் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது, இனி அடுத்தக் காட்சி 2014-ம் ஆண்டு என்று அறிவித்தனர்.
இப்படித்தான் பேரிடர் பயிற்சி நடத்துவதா? ஏதோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் தீயணைப்பு பயிற்சி நடத்திவிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிக்  குழந்தைகளுக்கும் அந்த பயிற்சி கொடுத்துவிட்டதாக சொல்ல முடியுமா? எங்கோ ஒரு திரை அரங்கில் பேரிடர் பயிற்சி நடத்திவிட்டு, நாடு முழுவதும் உள்ள திரை அரங்குகள் பாதுகாப்பாக உள்ளன என்று சொல்ல முடியுமா? நமது உயிர்களை துச்சமென நடத்தும் அரசை, அரசு நிறுவனங்களை ஏன் தட்டிக்கேட்கத் தயங்குகிறோம்?
bhopal_tragedy_3601984ம் ஆண்டு போபால் விடவாயு விபத்து நடந்தபோது ஓர் ஈரத்துணியை எடுத்து வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு ஓடுவதற்கு பயிற்சி அளித்திருந்தால் இத்தனை பேர் உயிரிழந்திருக்கமாட்டார்கள், ஊனமடைந்திருக்கமாட்டார்கள். ஆனால் மத்திய மாநில அரசுகள் செய்யவில்லை. இருபத்து எட்டு ஆண்டுகள் ஆனபிறகும் அந்த விடவாயு ஆலையில் மண்டிக்கிடக்கும் ஆபத்தான கழிவுகளை இன்னும் ஏன் அப்புறப்படுத்தவில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் அரசுகளை கடிந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை. இப்போது இந்த விபத்துக்கும் அமெரிக்காவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல அந்த நாட்டிலே தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள். இதைப் பற்றிக்கூட நீங்கள் சிந்தித்துப் பார்க்காதது ஏன்?
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 58 பேர், பெரும்பாலும் குழந்தைகள், டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். ஒரு மனிதனுக்கு வாழ்வில் நிகழும் மிகப்பெரிய இழப்பு, துயரம் எது? தனது குழந்தையை அநியாயமாகப் பறிகொடுத்து, குழிக்குள் போட்டு மூடுவதுதான். இத்தனை குழந்தைகள் இறந்ததற்கு யார் பொறுப்பு? மாவட்ட ஆட்சித்தலைவரும், வருவாய்த் துறை அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் சரியாக பணியாற்றி ஏன் இந்த தொற்று நோயைத் தவிர்க்கவில்லை, தடுக்கவில்லை? இது ஒரு மனித குலத்துக்கு எதிரான குற்றமில்லையா? சம்பளமும் கிம்பளமும் வாங்கிக்கொண்டுதானே இருந்தார்கள் இந்த அதிகாரிகள்?
நாளை கூடங்குளத்தில் ஒரு விபத்து நடந்தால் என்ன ஆகும்? விபத்தே நடக்காது, இதுதான் உலகிலேயே மிகச் சிறந்த, மிக உன்னதமான அணுஉலை என்று ரசிய நிறுவனமும், அரசும் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை என்றால், எவ்வளவு தொகை இழப்பீடு வேண்டுமென்றாலும் தருகிறோம், எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் தருகிறோம் என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
உங்கள் வீட்டுக்கு ஒரு சலவை இயந்திரம் வாங்குகிறீர்கள். ‘ஓஹோ ப்ரொடக்சன்ஸ்’ நிறுவனம் தயாரித்த அந்த இயந்திரத்தை ‘மன்னார் & கம்பனியில்’ வாங்குகிறீர்கள். ஒருநாள் சலவை செய்துகொண்டிருக்கும்போது, உங்கள் துணைவியாரின் கை இயந்திரத்தில் சிக்கி ஒரு விபத்து நடந்துவிடுகிறது. இந்திய-ரஷிய ஒப்பந்தத்தின்படி, சலவை இயந்திரத்தை உருவாக்கிய அல்லது விற்ற நிறுவனங்களுக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. இயந்திரத்தை ஓட்டியவர்தான் இழப்பீடு தர வேண்டும். உங்கள் மனைவி உங்கள் குடும்ப நிதியிலிருந்து ஒரு தொகையை எடுத்து உங்களுக்குத் தருவார். உங்கள் பணத்திலேயே உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து நடந்தால் ரஷ்ய நிறுவனமோ, ரஷ்ய அரசோ இழப்பீடு தரமாட்டார்கள். என்.பி.சி.ஐ.எல் எனும் நமது பொதுத்துறை நிறுவனம் நமது வரிப்பணத்தை எடுத்து நமக்கு இழப்பீடு தருவார்கள். வருமானம் எல்லாம் ரஷ்யாவுக்கு, இழப்பு எல்லாம் நமக்கு. இதைக்கூட கேள்வி கேட்காமல் இருக்கிறோமே, என்ன நியாயம்?
நமது கல்பாக்கத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத ஈனுலைகளை நிறுவி வருகிறார்களே, கவனித்தீர்களா? தமிழகத்தின் தென்கோடியாம் கூடங்குளத்திலிருந்து அபாயகரமான அணுக்கழிவுகளை வடகோடிக்கு எடுத்துச் சென்று அதை எரிபொருளாக உபயோகிப்பார்களாம். எப்படி எடுத்துச் செல்வார்கள்; நமது தமிழ் சமுதாயத்திற்கு என்னென்ன ஆபத்துகள் வரலாம் என்பது பற்றிக் கூட சிந்திக்காது இருப்பதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
இந்தியக் குடியரசு தலைவர் பிரதிபா பாடீல் கடந்த 28 மாதங்களில் 30 தூக்குத் தண்டனை கைதிகளுக்குக் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுருக்கி இருக்கிறார். ஆனால் முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டும் இன்னும் அது பற்றி சிந்திக்கக் கூட முடியாமல் இருக்கிறதே ஏன்? 
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதாக தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டாலே 20 ஆண்டுகள் சிறையில் தள்ளப்படுவார்கள் என புதிய சட்டம் இயற்றிகொண்டிருக்கிறதே அந்த அரசு? நமக்காக இந்திய அரசு இன்னும் குரல் கொடுக்கவில்லையே ஏன்?
ஒரு முள்ளிவாய்க்கால் போதாதா, இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் வேண்டுமா எனக் கேட்டிருக்கும் சிங்கள அமைச்சர் ரணவக்க என்பவரை இதுவரை இந்திய அரசு கண்டிக்கவில்லையே ஏன்?
kalpakkam_620
நான்கு மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்தின் ஆதாரமான அமராவதி நதியின் துணை ஆறுகளான சின்னாறு, மாயாறு, பாம்பாறுகளின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் கேரள அரசை மத்திய அரசு தட்டிக் கேட்கவில்லையே ஏன்? அதுபோல சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பகுதியில் 4.5 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டுவதற்கு கேரள அரசு முனைகிறது. இதையாவது யாராவது கேட்கிறார்களா?
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் எரிவாயுக் குழாய் கேரளா-கர்நாடகா வழியாக நேரடியாகப் போவதற்கு பதில், வளைந்து தமிழகத்தின் ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக ஏராளமான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்துச் செல்கிறது. இதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை ஏன்?
ஒரு வருடத்துக்கு முன் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழக முதல்வர் தமிழகத்துக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை, நிதி உதவியை, கூடுதல் மின்சாரத்தை, ஆதரவைக் கேட்டபோதெல்லாம் திரும்பிப் பார்க்காத, ஏன் என்று கூட கேட்காத மன்மோகன் சிங் அரசு பாகிஸ்தானுக்கு 5,000 மெகாவாட் மின்சாரம் தருவதும், ஐரோப்பிய நாடுகளின் நிதி நிலையை சீரமைக்க 56,000 கோடி ரூபாய் உதவி செய்வதும் எப்படி நியாயமாகும்? 
எதையுமே பார்க்காதே, எதையுமே கேட்காதே, எதையுமே பேசாதே என்று வாளாவிருப்பதுதான் தமிழனின் வாழ்விலக்கணமா என கேட்கத்தோன்றுகிறது. இல்லை என நாம் அனைவரும் ஏகோபித்த குரலில் உரக்கச் சொல்வதுதான் இன்றைய உடனடித் தேவை. தமிழகத்தின் இளம் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை புறந்தள்ளி, மனமாச்சார்யங்களை  ஒதுக்கி வைத்து, ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்காக உடனடியாக ஒன்று படவேண்டும். பொது செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி அனைத்து தளங்களிலும் ஒரு புதிய தமிழ் சமுதாய மறுமலர்ச்சிக்காக உழைக்க முன்வர வேண்டும்.
(கட்டுரையாளர் சுப.உதயகுமார் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.)

திங்கள், 9 ஜனவரி, 2012

காலச்சுவடு - காலைச் சுற்றும் நாகம்-திருமுருகன் காந்தி


எதிர்ப்பரசியலில் காலச்சுவடு கட்டியெழுப்பும் தமிழீழ விடுதலை எதிர்ப்பும்சிங்களப் பேரினவாதமும்
அறிவுலகம் தனது கருத்தாக்கங்களை மக்கள் போராட்டத்தின் முக்கிய அங்கமாக மாற்றும்போது போராட்டங்கள் கூர்மையடைவதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அந்த அறிவுலகம் விலைபோகும் பட்சத்தில் அல்லது நேர்மையற்றதாய் மாறும் பட்சத்தில், அது நேர் எதிர்மறையான கருத்துருவாக்கத்தை படைக்கிறது அல்லது போராட்டத்தை எதிர்த்திசையில் சித்தரிக்கிறது. கருத்துக்கள் ஆளும் இக்காலகட்டத்தில் பிழையாக சித்தரிக்கப்பட்ட போராட்டம் எளிதாக தோற்கடிக்கப்படுகிறது. அந்தப் போராட்டம் எந்த தத்துவத்தின் அடிப்படையில் நிற்கிறதோ அதே தத்துவத்தின் வாயிலாக அப்போராட்டத்தை தவறாக சித்தரிக்கும்போது அப்போராட்டம் எதிரிகளால் எளிதாக வேட்டையாடப்படுகிறது. இந்த வகையான உள்ளறுப்புப் பணிகள் ஒரு கூலிப்படைக்கு ஒத்ததாகவே கருதப்படும். உலகில் பல்வேறு போராட்டங்கள் இவ்வாறு தவறாக சித்தரிக்கப்பட்டு சிதைக்க‌ப்பட்டு இருக்கின்றன. பல போராட்டங்களை நேர்மையான சிந்தனையாளர்கள் காப்பாற்றியும் இருக்கிறார்கள், பாலஸ்தீன போராட்டம் உட்பட. சில போராட்டங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து, இன்றும் தன் மீது வைக்கப்பட்ட  நேர்மையற்ற அவதூறுகளை உடைத்து நேர்மையை நிரூபிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றன. இவ்வகையில் இந்தியாவில் அறிவுசீவிகளின் மத்தியிலும், மற்றவரிடத்திலும் வேட்டையாடப்பட்ட போராட்டங்களில் புலிகளின் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஒன்றாக பார்க்கப்பட வேண்டும்.
தனிப்பட்ட வன்மம், நேர்மையின்மை, விலைபோதல், இந்திய தேசியத்தை - பார்ப்பனியத்தைப் பாதுகாத்தல் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இப்போராட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டது. இது தவிர இப்போராட்டத்தை தவறாக சித்தரித்து விவாதத்தை உருவாக்குவதன் மூலம் விடுதலை கருத்துருவாக்கத்தை பின்னுக்குத் தள்ளுதல், உடைத்தல், விடுதலைப் போராட்டம் அதன் பின்னடைவிலிருந்து எழுந்து வருவதை தடுத்தல் என்பதும் அடக்கம். அவை அனைத்திலும் ஓர் ஒற்றுமையை நாம் கவனித்தால் இவர்கள் ஒருபோதும் சிங்கள அரசின் பேரினவாத வன்முறையை, அதன் வரலாற்றை ஆழமாக கேள்வி கேட்காதவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் உணர முடியும். சிங்களப் பாசிசத்தை தொகுக்காதவர்களாகவும், அதை மேம்போக்காக சித்தரிப்பவர்களாகவும், அதிக பட்சமாக போகிற போக்கில் சிங்களப் பாசிசம்- புலிப்பாசிசம் போன்றது என்பதாக இணைத்து புலிப்பாசிசத்தை தீவிரமான ஒன்றாகக் காட்டுவதற்கு பயன்படுத்தியும் உள்ளார்கள். இந்தச் செயல்பாட்டில் பெரும்பான்மையானவர்கள் இனப்படுகொலை போருக்குப் பிறகு அமைதிகாப்பவர்களாகவும் அல்லது விடுதலைப் போராட்டத்தை மனித உரிமைமீறலாக சித்தரிப்பதையும் நாம் காணலாம்.
இதன் மூலமாக 60 ஆண்டுகாலப் போராட்டத்தை கருத்தியல் ரீதியில் புறக்கணிப்பது, விடுதலைப் போராட்டத்தின் தேவையை மறுப்பது, சிங்களப் பாசிசத்தை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது என பலவாறு எதிர்அரசியல் புரிவதை நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது புலிகளை விமர்சனம் செய்ய இருக்கும் விருப்பமும், தன்முனைப்பும் ஒடுக்கப்படும் தமிழர்களைப் பற்றியும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தினைப் பற்றியும் அல்லது நேர்மையற்று நடந்து கொள்ளும் இந்திய-சர்வதேச  அரசுகளைப் பற்றியும் ஒரு போதும் இருந்ததில்லை. மேலும் மிகக் கவனமாக புவிசார் அரசியல் நிலைமையையும், சர்வதேச உளவு நிறுவனங்களின் பங்கேற்பைப் பற்றியும், குறிப்பாக வல்லாதிக்க-ஏகாதிபத்திய நலன் நகர்வுகளை ஒரு போதும் தவறிக்கூட தங்கள் கட்டுரைகளில், வாதங்களில் குறிப்பிட மாட்டார்கள். அதாவது இவர்களின் முழு நோக்கமும் போராட்டம் வெல்லவேண்டும் என்பதல்ல, அல்லது மக்களின் மீதான அக்கறை என்பதல்ல, இவர்கள் தனது தனிப்பட்ட  வன்மத்தின் காரணமாக (அல்லது மூலைக்குத் தள்ளப்பட்ட தனது அறிவு செறுக்கின் கோபம்) அல்லது சிங்கள அரசால் அடியாட்களாக மாற்றப்பட்டு எழுதுகிறார்கள் என்பதே. இவர்களை அறிவுசீவி அல்லது கருத்துருவாக்க அடியாட்கள் என்று அழைப்பது மிகப் பொருத்தமாக இருக்கும்.
இந்த தொழிலின் மூலம் இவர்கள் தங்களது அறிவுசீவி கிரீடத்தை காத்துக்கொள்வதுடன் இவர்களின் எசமானனுக்கு வேண்டிய இடைவெளியையும் உருவாக்கித் தருவார்கள். இதன் மூலம் போராட்டம் தனது ஆதரவு தளத்தை வெகுவாக இழக்கும், பின்னர் அதன் தார்மீக இருப்பை கேள்விக்குள்ளாக்கும் சூழலையும் எதிர்கொள்ளும். தனது முதன்மைப் போராட்டத்தை நடத்துவதுடன் இந்த போலியான சூன்யத்தையும் எதிர்கொண்டு வென்றாக வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும். இதை திறம்பட உயர்சாதி ஊடகங்களும் அதன் அறிவுசீவிகளும் காலம் காலமாக செய்து வருவதை நாம் அறிவோம்.  இந்த வகையில் காலச்சுவடு கருத்துருவாக்க அடியாளுக்குரிய அனைத்து தகுதிகளுடன் தமிழகத்தில் வலம் வருகிறது.
சீர்குலைவு தாக்குதல்கள்
காலச்சுவடு தனது எசமானனுக்கு விசுவாசமாக தமிழீழ விடுதலைக்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து கட்டுரைகளை வைத்துக் கொண்டு வருகிறது. புலிகளின் மீது விமர்சனங்கள் வைக்கக் கூடாது என்பதல்ல எமது நிலைப்பாடு. எந்த அடிப்படையில் யாருக்கு பலம் சேர்க்கும் வகையில் இக்கட்டுரைகள் இருக்கின்றன என்பதன் அடிப்படையிலேயே எமது எதிர்ப்புகள்.
எந்த காலச்சூழலில் இத்தகைய விமர்சனங்களை காலச்சுவடு மேற்கொள்கிறது என்பதை நாம் உற்று கவனிக்க வேண்டும். காலச்சுவடின் கட்டுரைகள் மிகச்சரியான காலகட்டத்தில் சிங்கள அரசை காக்கும் நேரங்களில் வெளியிடப்படுகின்றன. காலச்சுவடின் வியாபார நோக்கத்தையும் அதற்காக அது செய்யும் பசப்பு வேலைகளையும் முன்னரே மே பதினேழு இயக்கம் கட்டுரையாக வெளியிட்டு இருந்தது. நேரடியாக‌ வாசித்தாலும் சரி, மறுவாசிப்பு செய்தாலும் சரி அல்லது குப்புறப் படித்து வாசித்தாலும் சரி காலச்சுவடின் அயோக்கிய புத்தியை அம்பலப்படுத்துவது முடியாத காரியமல்ல.
காலச்சுவடின் தொடர் ‘கருத்துருவாக்க அடியாள்தனம்
ஒரு புலி எதிர்ப்பு கட்டுரையை கடந்த டிசம்பர் 2011 இதழில் காலச்சுவடு வெளியிட்டு இருந்தது. http://www.kalachuvadu.com/issue-144/page23.asp. புலிகளை விமர்சித்து இப்படி ஒரு அரைகுறை பிரசவத்தை அவசர அவசரமாக வெளிப்படுத்தி இருப்பதன் அவசியம் என்ன?
2009 இனப்படுகொலை போர் முடிந்ததும் ‘கிழக்கிலிருந்து ஒரு கடிதம்’ என ஒரு அனாமதேய புலி எதிர்ப்புக் கடிதம் வெளியிடப்பட்டதன் அவசியம் என்ன? நேர்மையற்றக் அக்கடிதக்கட்டுரையை போலியானது என ஒரு குழந்தைகூட  நிரூபிக்கும் எனும்போது எதற்காக அக்கட்டுரை வெளியிடப்பட்டது.?
இதே போல கடந்த 2011 சனவரியில் தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டபோது, வழக்கம்போல‌ படுகொலையை நியாயப்படுத்த புலிகளை சொல்ல முடியாத நிலையில் ஒரு புதுக் கதையை இந்திய அறிவுசீவி வர்க்கம் வெளியிட்டது. இந்த கட்டுக்கதை காலச்சுவடிலும் வெளிவந்தது. இந்திய அரசு அதிகார வர்க்கத்துடன் இணைந்து  நிதி ஆதாரத்திற்காக செயல்படும் ஒரு அரைவேக்காட்டு அறிவுசீவியிடம் நேர்மையற்ற அந்த பேட்டியை வாங்கி வெளியிட்டது காலச்சுவடு.
இவ்வாறு எண்ணற்ற செயல்பாடுகளை காலச்சுவடு போகிறபோக்கில் எழுதிவிட்டுப் போவதன் காரணம் என்ன?
தமிழினப் படுகொலைப் போர் முடிந்தவுடன் மொத்த உலகமும் இலங்கை அரசின் பயங்கரவாத்தைக் கண்டு திகைப்புற்றபோது, பிரச்சினையை திசை திருப்பும்விதமாக‌ புலிகளின் எதேச்சதிகாரம் என்ற கட்டுரையை வரைந்தது. ஏற்கனவே முடக்குவாதத்தில் சிக்கி இருக்கும் தமிழ்நாட்டு மாற்று அறிவுசீவிகளுக்கு ஏதுவாக இந்தக் கட்டுரை அமைந்தது. “சரிதான், நாம் புலிகளை எதிர்த்ததில் நியாயம் இருக்கவே செய்கிறது” என்ற உள்மன சாந்தியை அவர்களுக்கும், அவர்களின் தொடர் வியாதிக்கட்டுரைகளால் ஏற்கனவே அரசியலற்றுப் போன தமிழகத்தின் மாற்று அறிவுசீவி வாசகனுக்கும் இக்கட்டுரை அளித்திருக்கும். தமிழ்நாட்டைத்தவிர வேறு எங்கேனும் இத்தகைய இனப்படுகொலை நடந்த பிறகு ஒரு கட்டுரை எழுதியிருந்தால், இந்நேரம் காலச்சுவடு காணாமல் போயிருக்கும் அல்லது அறிவுசீவி மஞ்சள் பத்திரிக்கையாக அறியப்பட்டிருக்கும். 
இதே போல இப்பொழுது வெளிவந்திருக்கும் கட்டுரை புலிகளின் மீதும், தமிழினப்படுகொலை பற்றியும் ஒரு நேர்மையான சுயவிமர்சனமாக இல்லாமல், புவிசார் அரசியல், புவிசார் பொருளாதாரம், வளர்ந்து வரும் கடற்சார் வர்த்தகம்-பாதுகாப்பு என 2000ஆம் வருடங்களில் விரியத் தொடங்கிய நகர்வுகளை இருட்டடிப்பு செய்து எழுதப்பட்டது மட்டுமல்லாமல், அரைவேக்காட்டு அரசியலறிவு, காழ்ப்புணர்ச்சி நிறைந்து எழுதப்பட்டுள்ள‌து. உணர்ச்சி வயப்பட்ட அரசியலே இத்தகைய விமர்சனங்களை தடுக்கிறது என்று சப்பைக்கட்டு வேறு. புலிகளை விமர்சித்துப் பேசலாம்; ஆனால் அதற்கான ஆதாரங்களை முன்வைப்பது அவசியம். ஆதாரங்கள், அன்றைய சமகால நகர்வுகள், இனப்படுகொலைப் போரின் யுக்திகள், இந்தியப் பெருங்கடலில் நடைபெற்ற சர்வதேச ஊடுறுவல்கள், மேற்குலக நாடுகளின் ரவுடித்தனங்கள் என மிகப்பெரிய ஆய்வை முன்வைக்கும் அளவிற்கு விடயங்கள் இருக்கும்போது வெறுமனே '9/11க்குப் பிறகு அமெரிக்கா புலிகளை இப்படிப் பார்த்த்து', 'புலிகள் இப்படி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை', 'ஐரோப்பா இதை கண்டுகொள்ளவில்லை', 'இந்தியா கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவில்லை' என சப்பைகட்டு வாசகங்களை வைத்துக் கொண்டு 'கட்டுரை போட்டி'க்காக எழுதியது போன்று எழுதப்பட்டுள்ள கட்டுரை இது. எழுதியவர் தனது வாதங்களை நேரடியாக ஒரு பொது மேடையில் விவாதத்திற்கு வைப்பாரென்றால் அனைத்து பிதற்றல்களும் உடைந்து போகும் என்பதையும் நாங்கள் இங்கு முன்வைக்க விரும்புகின்றோம்.
இந்தக்கட்டுரையின் சில சாரம்சங்களை காண்போம்.
//புலிகள் ஏன் இத்தகையதொரு முடிவைச் சந்திக்க நேர்ந்ததுஇந்திய ஆய்வாளர் ஒருவர் சொல்வது போன்று அது அவமானகரமான முடிவு.// இந்த ஆய்வாளர் யாரென்று சொன்னால் அதன் பின்னுள்ள அரசியலையும் நாம் சேர்த்து வாசகர்களுக்குச் சொல்லலாம். சொல்வாரா?..
நாமும் கூட இப்படிச் சொல்லலாம் “இலங்கையின் முன்னாள் அரசு அதிகாரியும் பின்னாளில் மகிந்தாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஒருவர் சொல்வது போல 'தமிழகத்தில் மகிந்த நிறைய ஆதரவாளர்களை குறிப்பாக அறிவுசீவிகளை விலைக்கு வாங்கியிருந்தார்…’ மேலும் அவர் சொன்னதாவது ‘ஜி.எல் பெரிஸ் தனது அறிவுசீவித் தொடர்புகள் மூலம் இதனைப் பெரிதும் சாத்தியப்படுத்தி இருந்தார்’..
ஹலோ பாஸ் இப்படி நாங்களும் நிறைய பப்ளிக் ரிலேசன்ஸ்  கட்டுரைகளை – கட்டுக்கதைகளை எழுத முடியும். இதற்கு அறிவிசீவி-இலக்கியவாதி என்கிற எந்த கடவுளும் தேவையில்லை. இந்த யுக்தியெல்லாம் அம்பலப்பட்டு வெகு நாளாயிற்று.
சிங்கள அரசின் மக்கள் தொடர்பு வியாபார ஒப்பந்தம்
இலங்கையின் மக்கள் தொடர்பு நிறுவனம் பெல்பாட்டிங்கர் என்கிற நேர்மையற்ற லாப நோக்கை குறிக்கோளாகக் கொண்ட மக்கள் தொடர்பு (பி.ஆர்) நிறுவனத்தினைப் பற்றி நாங்கள் பாலிவுட் திரைப்படவிழா எதிர்ப்பின் போதே சொல்லியிருக்கிறோம். http://www.bbc.co.uk/news/world-south-asia-11606899.. இந்த நிறுவனம் தொடர்ச்சியாக இலங்கை அரசின் ஆதரவு செய்திகளையும், புலி எதிர்ப்பு செய்திகளையும் ஊடகங்களில் பதிய வைத்தது. இதே நிறுவனம் தான் பினோசெட்டின் இனப்படுகொலை குற்றச்சாட்டையும் எதிர்கொண்டு அவருக்கு ஆதரவான செய்திப் பதிவுகளை செய்து கொண்டிருந்தது. ராசபக்சேவும், பினோசெட்டும் வேறுவேறானவர்கள் அல்ல; அதே போல காலச்சுவடும், பெல்பாட்டிங்கரும் வேறுவேறல்ல.
இந்தியாவில் இந்த பெல்பாட்டிங்கர் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு சேவைகள் தேவைப்படவில்லை. ஏனெனில் இந்தியாவில் உள்ள அறிவுசீவி நிறுவனங்கள், அது எகனாமிகல் பொலிடிக்கல் வீக்லியாக இருந்தாலும் சரி, தெகல்காவாக இருந்தாலும் சரி அல்லது லோக்கல் காலச்சுவடாக இருந்தாலும் சரி, இதன் ஆசிரியர்கள்/நிறுவனர்கள் ஒன்று இந்து 'ராமின்' கைப்பிள்ளைகள், அல்லது இந்திய அரசின் வெளியுறவுத்துறை செளத் பிளாக்கின் கைப்பிள்ளைகள். ஆக மொத்தம் நேர்மையற்றவர்கள். இவர்களை ஒரு பி.ஆர் நிறுவனத்தை வைத்து வளைக்க கடினப்பட வேண்டியதில்லை; ’சொன்னால் போதும்’ செய்து விடுவார்கள். ஏனெனில் இவர்கள் தங்களின் வர்க்க எதிரிகளை எதிர்க்க எந்த அநீதியையும் செய்பவர்கள்.
இப்பொழுது எதற்காக இந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு?
கடந்த ஆகஸ்டு-செப்டம்பர் மாத பாராளுமன்றத்தில் இலங்கை அரசு ஒரு போர்க் குற்றவாளி எனும் தீர்மானத்தை கிட்டத்தட்ட கொண்டு வரும் தருண‌த்தை நாம் பார்த்தோம். அதை அவசர அவசரமாக சென்னையின் அப்சர்வர் ரிசர்ச் பெளண்டேசனின் சத்தியமூர்த்தி மற்றும் ஏனைய எடுபிடிகளை வைத்தும், காங்கிரஸின் எம்.பியை வைத்தும் டில்லியில் – கான்ஸ்டிடுசன் அரங்கில் இலங்கை அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு தமிழகம் அல்லாத பிற மாநில பாராளுமன்ற உறுப்பினர்களை மூளைச்சலவை செய்து தடுக்க முயன்றது இந்திய காங்கிரஸ் அரசு.
அதன் பிறகு வந்த மாதங்களில் ஐ.நா.வில் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கையை நெருக்க முடிவெடுத்தபோது அதை தனது எல்.எல்.ஆர்.சி விசாரணை முடிவுறாததைக் காரணம் காட்டி தட்டிக்கழித்த்து.  இந்த அறிக்கை தற்போது (நவம்பர்,2011) வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிக்கை மேசை துடைக்கக் கூட உதவாத அறிக்கை என்பதும், இது ஒரு கண் துடைப்பு என்பதும் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகிறது. இச்சூழலில் இந்த அறிக்கையைப் பற்றிய விவாதங்கள் தமிழக சூழலில்- அறிவுசீவித் தளத்தில் வராமல் இருக்கவும்,  நார்வேயின் அறிக்கையில் அப்பட்டமாக தெரியக்கூடிய இந்திய அரசின் அயோக்கியத்தனத்தை விவாதமாக்காமல் இருக்க திசை திருப்பும் கட்டுரையாக காலச்சுவடு இந்த புத்திசுவாதீனமற்ற கட்டுரை குழந்தையை அவசர அவசரமாக பெற்றெடுத்திருக்கிறது.
இவர்கள் கட்டுரை ஒரு போதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு நேர்மையற்றதாய் நடந்தது அல்லது இந்தியா எவ்வாறு வல்லாதிக்கம் செய்தது என்பதை கவனக்குறைவாகக் கூட எழுதி இருக்க மாட்டார்கள் (ஒரு வேளை காலச்சுவடின் கம்யூட்டரின் தட்டச்சு எடிட்டரில் எக்ஸ்பர்ட் சிஸ்டம் ஏதானும் இன்ஸ்டால் ஆகி இருக்கலாம்) இவை எதையும் பரிசீலிக்காத கட்டுரை எவ்வாறு நேர்மையான விமர்சனத்தை- அதுவும் சுயவிமர்சனத்தை வைத்திட முடியும்?
இவர்களின் வாத முறைகளை இவ்வாறு புரிந்து கொள்ளலாம். அதாவது பலுச்சிஸ்தான் விடுதலை போராட்டத்தைப் பற்றி எழுதுவதென்றால்(இவர்கள் பாணியில்), பலுசிஸ்தான் போராளிகள் தங்கள் விடுதலைப் போராட்டம் எவ்வாறு அமெரிக்காவின் பயங்கரவாத்த்திற்கு எதிரான போருடன் குறுக்கே சென்று நின்றது என்பதை கவனிக்கவில்லை. இதன் பலனாக அவர்கள் தாலிபான்களுடன் சேர்ந்து பயங்கரவாதிகளாக அமெரிக்காவால் பார்க்கப்பட்டு பலியிடப்பட்டார்கள். பலுசிஸ்தான் போராளிகள் தங்களை தாலிபான்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி தங்களது ஆயுதப் போராட்ட‌த்தை வேறு வடிவத்திற்கு மாற்றி இருக்க வேண்டும் அல்லது தங்களது தலைக்கு மேல் கட்டும் டர்பனை வேறு நிறத்திற்காகவாவது மாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவர்களின் மேற்குலக அரசியலின் குறை புரிதல்கள், பாகிஸ்தான் – அமெரிக்காவின் கூட்டுப் போர்முறைகள், தாலிபான்களிடம் குறைந்து அல்லது இல்லாது இருந்த சனநாயக முறைகளிடமிருந்து தன்னை வேறுபடுத்துதல் என பல விடயங்களை கண்டு கொள்ளாமல் வெறும் ஆயுதங்களை நம்பியே தனது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்- என விரிந்து செல்லும். அதாவது பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணிடம் சென்று “.. நீ ஏன் அவன் கண்ல படுற மாதிரி அந்தப் பக்கம் போன..” என்பதான முறையாக அமையும்.
(இப்படி திசை திருப்பாமல் இருந்திருந்தாலும் கூட நமது – தமிழக அறிவுசீவிகள் – நேர்மையாக விவாதிப்பார்களா என்று கேட்டுவிடக்கூடாது நீங்கள். அவர்கள் தங்களது ஆன்மாவைத் தொலைத்து வருடங்களாகிவிட்டது.)  
சிங்கள பேரினவாத அறிவுசீவி வர்க்கத்தின் கூட்டாளி இந்திய ஊடக வர்க்கம்.
ஜி.எல் பெரிஸ்ஸின் புகைப்படத்தை இடம் கிடைக்கும்போதெல்லாம் பெரிது பெரிதாக காலச்சுவடில் அடிக்கடி காண்பவர்கள் அல்லது கவனிப்பவர்கள் காலச்சுவடை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
ஜி.எல். பெரிஸ்-> சிங்களப் பேரினவாத அறிவுசீவிகள் -> இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் -> வெளியுறவு அறிவுசீவிகள்- அறிவுசீவி தொண்டு நிறுவனங்கள்- செளத் ஏசிய அனலிஸ்ட் குருப்- அப்சர்வர் ரிசர்ச் பெளண்டேசன், இதர -> இந்து ஆசிரியர் என்.ராம் மற்றும் அவரது நண்பர் கும்பல் -> எகனாமிக் பொலிடிக்கல் வீக்லி ஆசிரியர்- ராம் மனோகர் ரெட்டி (முன்னால் இந்து இதழின் பொருளாதார பகுதி ஆசிரியர் -> ஐ.ஏ.என்.எஸ் தலைமை ஆசிரியர் எம்.ஆர். நாராயண் -> பிரண்ட் லைன் என விரிவடையும் இந்தக் கும்பலை தமிழர்கள் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
காலச்சுவடு நேர்மையற்ற திசை திருப்பும் விவாதங்களை முன்வைத்தது இது முதன்முறையல்ல. போர் முடிந்த சமயத்தில் அடுத்த கட்ட  நடவ‌டிக்கையின் பால் சிந்தனை கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த தமிழ்ச் சமூகத்தில், முற்றிலுமான சிதைவு சிந்தனைக் கட்டுரைகளை பிரசுரித்து இருந்தது. அதில் முக்கியமான கட்டுரையாக "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு” என்கிற தலைப்பில் வெளிவந்த ஒரு கட்டுரை.http://www.kalachuvadu.com/issue-116/page47.asp
இது முழுக்க முழுக்க புலி எதிர்ப்பாக மட்டுமே அமைந்தது மட்டுமன்றி சிங்கள அரசின் கொடூர யுத்ததைப் பற்றிய எந்த ஒரு விவாதமும் முன் வைக்கப்படாமல் தமிழர்களின் சிந்தனை களத்தினை புலிகளின் மீதான விமர்சன அரசியலை நோக்கித் திருப்பியது. ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இந்தியாவின் கடுமையான முயற்சியாலும் அணிசேரா நாடுகளின் உதவியாலும் சர்வதேச விசாரனையில் இருந்து இலங்கை தப்பிய அச்சமயத்தில், இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் பற்றிய ஆவணங்களும், பதிவுகளும், கட்டுரைகளும் நிரப்பி இருக்க வேண்டிய  நேரத்தில்,  மனித குலத்திற்கு விரோதமான குற்றத்தில் புலிகள் ஈடுபட்டதாக ஆவணப்படுத்துகின்ற தோரணையில் அக்கட்டுரை அமைந்திருந்த‌து.
புலி அரசியலை விமர்சிப்பது என்பது வேறு புலிகள் கடுமையான போர்க்குற்றங்கள் புரிந்தார்கள் என்பதாக ஆதாரப்பூர்வ அனுபவக் கட்டுரை எனும் பெயரில் போலிக் கட்டுரைகளை வெளியிடுவது என்பது வேறு.  அக்கட்டுரையிலிருந்து //வன்னி யுத்தத்தில் இரண்டு தரப்புமே போர்க் குற்றவாளிகள். அதிலும் பிரபாகரன் தன்னை நம்பிய மக்களைக் கொன்று குவித்தார். படுகொலைக்குக் காரணமாக இருந்தார். சனங்களின் கொலைகளில் அரசியல் நடத்தப் பார்த்தார். சேரன் சொல்வதைப்போலப் பிணங்களை வைத்து அரசியல் செய்தார். இறுதியில் அவர் அநாதரவாகக் கொல்லப்பட்டார்.//   அதாவது லெபனான் மீதான 2008 இஸ்ரேலின் தாக்குதலில் 1000க்கும் அதிகமான லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கு முழுமையான காரணம் - இசுரேலிய படைவீரர்கள் இருவரை ஹிஸ்புல்லா போராளிகள் சிறைபிடித்து செய்த அரசியலே என்று சொல்வதற்கு ஒப்பானது. அதாவது இசுரேல் வேறு வழியில்லாமல் இரண்டு படைவீரர்களைக் காக்க ஆயிரம் லெபனான் மக்களை கொல்லவேண்டி வந்தது, இதற்குக் காரணமாக ஹிஸ்புல்லாக்களின் ஆட்கடத்தல், பிளாக்மெயில் அரசியலே என்று எழுதுவதைப் போன்றது. இதைப் போன்ற அரைவேக்காட்டு கட்டுரைகளை காலச்சுவடு கும்பல்களிடம் இருந்து வெளிப்படவே செய்யும்.  
இது மட்டுமல்லாமல் இந்தக் கட்டுரை முகாமில் கழிப்பறையில் எழுதப்பட்டது என்றும், ரகசியமாக அனுப்பப்பட்டது என்றும் பெரிதுபடுத்தி படம் காண்பிக்கப்பட்டது. அடிப்படையில் இக்கட்டுரை எழுத ஒருவருக்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் தேவைப்பட்டிருக்கும் அந்தக் கழிப்பறை ஐந்து நட்சத்திர ஹோட்டலின் தரத்தில் அமைந்திருந்தால் மட்டுமே ஒருவர் நான்கு மணி நேரம் அங்கு இருந்திருக்க முடியும்.. முகாமைப் பற்றி முழுமையாகத் தெரிந்த தமிழீழத் தமிழர்கள் இந்தச் செய்தியை கண்டு சிரித்திருக்கவே முடியும்.
  அந்தக் கட்டுரை எழுதியவர் தமக்கு 15 வருடங்களுக்கு மேலாகத் தெரிந்தவர், விடுதலை அரசியலில் பிடிப்புள்ளவர் என்று காலச்சுவடு முதலாளி கண்ணன் அவர்கள் குறிப்பிட்டது உண்மையெனில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் அவர் ஏன் புலிகளுக்கு எதிராக சாட்சியத்தைப் பதியவில்லை என்பதான அடிப்படைக் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா எனப் பார்க்கவேண்டும். அந்த அநாமதேய நபர் கட்டுரையின் முகப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார் //மனமும் நினைவுகளும் ஒரு சீருக்கு வரமுடியாது கொந்தளித்த நிலையிலேயே உள்ளன.//  ஆனால் கட்டுரை படிப்பவர்களுக்கு அதன் சீரமைப்பும்  நுணுக்க அரசியல் கட்டமைப்பும் எளிதாக புலப்படும். இந்த சீருக்கு வரமுடியாத மன நிலையில் இக்கட்டுரையை எழுத முடியுமா என்பது முதலாளி கண்ணன் அவர்களுக்கே விளங்கும்.  
அந்தக் கட்டுரையை கவனமாக படிப்பவர்கள், முக்கியமாக தமிழரல்லாதவர்கள் யாராயினும் இந்தக் கட்டுரை, நிதி பெறுவதற்காக‌ ஓர் அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் தயார் செய்த ஆவணக் கட்டுரையினை அல்லது அரசுவர்க்கம் ஒரு நிகழ்வை தொகுத்து வைக்கும் அரசாங்க ஆவணக்கட்டுரையை ஒத்து இருப்பதை கவனிக்க முடியும். சாராம்ச ரீதியிலும், எழுத்து நடையிலும், இக்கட்டுரை சிங்கள கொடூர முகாமில் மறைத்து எழுதப்பட்டது என்பதை ஒருவரும் நம்ப இயலாது. ஆனாலும் தைரியமாக இந்தக் 'கட்டுரை திரைக்கதை'யை தமிழர்களிடத்தில் காலச்சுவடு விற்றது. இந்தக் கட்டுரை கிட்டத்ட்ட  போர் புரிந்த அரசின் வெற்றி நகர்வுத் திட்டங்களை, எதிர்முனையிலிருந்து விவரிக்கும் தோரணையில் ஆவணமாகவே திட்டமிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது. மேலும்  புலிகள் போர்க்குற்றம் புரிந்ததாக குறிப்பான ஆதாரமற்று, வெற்று வார்த்தைக் கட்டுமானங்களில் ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக எழுதப்பட்டுள்ளதை கவனிக்க முடியும்.
இந்தக் கட்டுரையின் நோக்கத்தினை உற்று நோக்கினால் இலங்கை அரசும், புலிகளும் குற்றம் புரிந்தனர் என்ற சாரம்சத்தில், ஆனால், கூர்மையாக புலிகளைப் போலவே சிங்களப் படைகளும் போர்க் குற்றங்களைப் புரிந்தனர் என்று புலிகளை முதன்மைக் குற்றவாளிகளாகவும் அதன் விளைவாக அதே போன்றதொரு குற்றங்களை சிங்கள ராணுவம் பின்பற்றியது என்பதாக, இரண்டாவது அணியின் மீது மேலோட்டமாக குற்றப் பதிவுகளை ஆழமாக உள்ளடக்கமற்று பதிவு செய்கிறது. இந்தக் கட்டுரை வேறு எவரையும் விட இலங்கை அரசிற்கு சாதகமான ஒரு கட்டுரையாக இருக்க/உதவ முடியும். ஆனால் இந்தக் கட்டுரை வலுவான குற்றம் நிரூபிக்கும் ஆவணமாக இல்லாமல், கருத்தியல் தளத்தில் சிங்கள அரசிற்கு வலுசேர்க்கும் கட்டுரையாகவே அமைகிறது. அதாவது ஒரு பி.ஆர் கட்டுரை. அந்த காலகட்டத்தில் அதாவது போர் முடிந்த இரண்டொரு மாதங்களில் புலிகளை மிக தரக்குறைவாக சித்தரிக்கும் கட்டுரைகள், நம்பத்தகுந்த நடுநிலை ஊடகங்கள் என்று அறியப்படும் ஊடகங்களான எகனாமிக் பொலிடிக்கல் வீக்லி, தெகல்கா போன்ற ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இதே போலவே தமிழக மீனவர் படுகொலையை திசை திருப்பும் கட்டுரைகளும் இந்த இரண்டு ஊடகங்கள் மற்றும் காலச்சுவடிலும் வெளியிடப்பட்டது. இம்மூன்றிலும் இந்த இரண்டு முக்கியமான காலகட்டத்திலும் ஒரே மாதிரியான கட்டுரைகள் (சாராம்சம்-வடிவம் உட்பட) வெளியிடப்படுகின்றன.
 புலிகளின் மீது சிங்கள அரசு வைக்கும் குற்றச்சாட்டை தமிழரின் வாயிலிருந்து ஒரு வாக்குமூலமாக பதிவு செய்ததை போன்றதொரு விவரணத்தை காலச்சுவடின் ’அநாமதேய குறிப்புகள்’ செய்கின்றன. இதே காலகட்டத்தில் மாதிரியாக 'கிழக்கிலிருந்து ஒரு கடிதம்' என்று தலைப்பிட்ட ஓர் அநாமதேயக் கடிதம் எகனாமிக் பொலிடிக்கல் வீக்லியில் வெளியிடப்பட்டிருந்தது ஆச்சரியத்தை அளிக்கக்கூடும். அதெப்படி முகாமில் இருந்தவர் இரு இதழ்களுக்கும் இக்கடிதத்தை எழுதி இருப்பார் என்பது ஆச்சரியமே. ஒரு வேளை முதலாளி கண்ணனே இக்கடிதத்தை அங்கே ஒப்படைத்திருப்பாரோ.. ஏனெனில் எகனாமிக் பொலிடிக்கல் வீக்லிக்கு இந்து ராமின் நண்பர் ராம்மனோகர் ரெட்டி ஆசிரியராவதற்கு முன் இம்மதிரியான அநாமதேய எழுத்தாளர்களின் கட்டுரைகளை வெளியிடும் பழக்கம் கிடையாது. (அதுமட்டுமல்லாமல் இத்தனை விளம்பரங்களையும், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களின் லாப நட்ட அறிக்கைகளை விளம்பரமாக வெளியிடுவதும் கிடையாது. மேலும் பிளாஸ்டிக் உறைகளையும் அவர்கள் பயன்படுத்தியதும் கிடையாது. எல்லாம் இந்து ஆசிரியர் என்.ராமின் நண்பரின் பொருளாதார வளர்ச்சித் திட்டமே காரணம். ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் சண்டைகளுக்கு சிறப்பு விவாதப் பக்கங்களை ஒதுக்கும் இந்த இதழ் இதுவரை இலங்கைப் போரைப் பற்றிய சிறப்பு விவாதத்திற்கு அழைப்பு விடுவதற்கான காலம் வரவில்லை என்பது  நாம் நினைவில் கொள்ள வேண்டும்)
இந்த ஒற்றுமைகள் ஒரு விபத்தல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் நலம் பயக்கும். இந்திய- இலங்கை நலனை மிக சாதுர்யமாக முன்னெடுக்கும் வல்லமையும் அறிவாற்றலும் இந்த நபர்களுக்கு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக பாசிசமாக மாறியிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் அறிவுசீவி வர்க்கத்தை மேலும் மேலும் சுயமோகத்திற்குள்ளும், வெற்று விவாத பிரமைகளுக்குள்ளும் தள்ளும் உக்தியே இவையெல்லாம்.
சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் சர்வதேச அரங்கில் வைக்கப்பட்டன. அத்தகைய ஆதாரங்கள் இதுவரை இலங்கை அரசினால் பதில் சொல்லப்படவும் இல்லை முறியடிக்கப்படவும் இல்லை, மறுக்கப்படவும் இல்லை. புலிகளின் மீதான குற்றச்சாட்டுகளில் பொத்தாம்பொதுவான, நீதிமன்ற விசாரனைக்குட்படுத்த முடியாத வார்த்தைக்கட்டுகளையே பார்க்க முடிகிறது. இந்த கருத்துகளை மிக எளிதாக உள்ளடக்கமற்ற வன்மமாக நேரடியான விவாதங்களில் நிரூபித்திடல் முடியும்.
பின்வரும் கருத்துப்பதிவுகளை கவனிக்க. அதனினும் முக்கியமானது இக்கட்டுரை வெளியிடப்பட்ட காலகட்டத்தில் 'வடக்கின் வசந்தம்' என்கிற பெயரில் ”போருக்குப் பின்னான தமிழினப்படுகொலை” திட்டத்தின் செயல்பாடு நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கான திட்டமிடலும் கூர்மைப்படுத்தலும் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் முக்கிய பங்காற்றியவர்கள் காலச்சுவடின் செல்லப் பிள்ளைகள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இந்தப் பின்னணியில் இக்கட்டுரையின் வரிகளை வாசியுங்கள். வடக்கின் வசந்தம் முடிவில் போரே நடைபெறாத மட்டக்களப்பில் 7000 தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறையால் கர்ப்பிணிகளாக்கப்பட்டிருந்தனர் என்பதை ஆதரப்பூர்வமாக கள ஆய்வறிக்கை 2011 ஜூன் மாதத்தில் விவரித்தது.
////வன்னியில் புலிகளின் தடைகள், ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரமின்மைக்குள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச முடியாமை என்னும் நிலைமை இருந்ததைப் போலவே இப்போது அங்கிருந்து தப்பிவந்து இடைத்தங்கல் முகாம், (நலன்புரி நிலையம்) என்ற தடுப்பு முகாம்களில் இருந்துகொண்டும் எல்லாவற்றையும் பேச முடியவில்லை.
இங்கும் தொடர்பு வசதி இல்லை. அது மட்டுமல்ல, வன்னியிலிருந்து வெளியேறப் புலிகள் விதித்திருந்த பயணத் தடையைப் போன்றே இந்த முகாமிலிருந்தும் யாரும் வெளியே செல்ல முடியாது. ஒரு கைதி நிலையே (தடுப்பு நிலையே) தொடர்கிறது. அதனால் இந்தப் பத்திகூட மிக ரகசியமாகவே எழுதப்படுகிறது.///
சிங்கள அரசின் மனித உரிமை மீறலென்பது புலிகளின் மனித உரிமை மீறலை ஒத்தது (ஆகவே அதற்குப் பழகிய நாங்கள் இதற்குப் பழகுவது கடினமாக இல்லை … அல்லது  புலிகளின் கொடூரங்களில் இருந்து விடுபட்டு போரற்ற அடக்குமுறைக்கு திரும்புவது ஒரு வகையான இயல்பு நிலை வாழ்க்கை என்பதை கட்டுரை மிகக்கவனமாக‌ கட்டமைக்கிறது)  
மேலும் போராட்டத்தின் பின்னான விவாதத்திற்கு முன்வைக்கும் பொருளாக மீள்கட்டமைத்தல், மறுவாழ்வு, மீள் குடியமர்த்தல் என்கிற பிரச்சனைகளை முன்வைக்கும் கட்டுரை, போராட்டத்தின் அடிப்படைக் கேள்வியான 'தமிழீழத்தின் விடுதலை', 'அரசியல் தீர்வு' என்பதைப் பற்றிய கருத்துகளை மிகக் கவனமாக மறைக்கிறது. இந்தப் பதங்களைத்தான் 'தமிழீழ விடுதலையை கைவிடுங்கள்' என்று வற்புறுத்தும் மேற்குலக நாடுகளும், சர்வதேச மனித உரிமைத் தொண்டு நிறுவனங்களும் முன்வைக்கின்றன என்பதை மறக்க முடியாது.  //இப்போதுகூட - புலிகளின் மீதான இவர்களின் பகையுணர்ச்சி தீர்ந்த பிற்பாடும் - தமிழ்மக்களின் பிரச்சினைக்கான எத்தகைய தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை. தவிரவும் மக்களின் நல்வாழ்க்கைக்கான உத்தரவாதம், ஏற்பாடுகள், இயல்புநிலை என்பவற்றுக்குக் கூட எவரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இல்லை.//   இயல்புநிலை- எது இயல்பு நிலை?....  சிங்கள அரசின் ஆட்சியில் நகர்த்தப்படும் வாழ்வை, சிங்கள ஆட்சியதிகாரத்தை மெளனமாக அங்கீகரித்து முன்வைக்கப்படும் சமரச- போராட்டமற்ற (எவ்வகையான வடிவமானாலும் ) வாழ்க்கை முறையை இயல்பு நிலை  என முன்வைக்கிறது.  
மேலும் காலச்சுவடு அக்கட்டுரையில் குறிப்பிடுவது // ஒரு கட்டத்தில் மருத்துவமனைப் பகுதியை அண்மித்து நின்று விடுதலைப்புலிகள் கனரக ஆயுதம் மூலமாகப் படையினர் மீதும் விமானப் படையின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதை சிறிலங்கா அரசின் வேவு விமானம் (..) வட்டமிட்டு நோட்டமிட்டது.. வேவு விமானத்தின் தரவுகளின்படி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது.
 வன்னியிலிருந்தால் மரணத்தைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலை. ஆனால் வன்னியை விட்டு .. சுழித்துக்கொண்டு வெளியேறும்போது புலிகளின்கண்களில் சிக்கினால் அவ்வளவுதான். நெற்றிப்பொட்டுச் சிதறும். சுட்டுக் கொன்றுவிடுவார்கள். கொல்லப்படுவோர் தவிர இளவயதுடைய பெண்களையும் ஆண்களையும் பிடித்துச் செல்வார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் மட்டும் விடுவிக்கப்படுவார்கள். இளவயதினர் போருக்காகப் பிடித்துச் செல்லப்படுவர்.இதைவிடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஏதாவது வழியில் செல்லத் தொடங்கினால் கண்டமேனிக்குத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள்.  சிலசந்தர்ப்பங்களில் புலிகள் சுடச்சுடப் பலர் தப்பியோடி இராணுவத்தினரிடம் சரணடந்தார்கள். சிலர் தப்பியோடும்போது அவர்களுடைய குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். புலிகள் தடுக்கத் தடுக்கப் பொதுமக்கள்மீதானஇராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்தன.
 சனங்களை இலக்குவைத்து இரண்டு தரப்புகளும் தாக்குதல்களை நடத்தின….கொலைப்பட்டியலை நீட்டிக் காட்டுவதற்கேற்ற முறையில் இராணுவத்தைச்சீண்டும் விதமாகக் கோபமூட்டும் வகையில் தமது தாக்குதல்களைத் தொடுத்தனர். படைத்தரப்புக்குத் தப்பியோடித் தங்களிடம் வரும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம். ...//  
இந்த வாதங்கள் கோத்தபய ராசபக்சேவின் பேச்சினை நினைவுபடுத்தலாம். ஆனால் இவை காலச்சுவடின் கட்டுரை வரிகள். அதாவது புலிகளுக்கு  பிணங்கள் வேண்டும். அதன் மூலம் சர்வதேசத்தை நெருக்கலாம், ராணுவத்திற்கு தப்பியோடி வந்த மக்கள் உயிரோடு வேண்டும். மக்களைக் கொல்வது புலிகளின் நோக்கம், ராணுவத்தின் நோக்கம் உயிரோடு பிடிப்பது. ஆனால் முந்தைய பத்தியில் சொல்லிய “எப்பொழுதும் வானில் பறந்து கொண்டிருக்கும் உளவு விமானம்”  புலிகள் மக்களைக் கொல்வதையெல்லாம் படமெடுக்கவில்லை. சேனல்4 இல் வெளியிடப்பட்டது போன்ற காணொளிகள் புலி ஆதரவாளர்களுக்கு கிடைத்ததைப் போல இலங்கை அரசிற்கு இதுவரை ஏன் காணொளிகள் கிட்டவில்லை.. அதுவும் உளவு விமானம், சாட்டிலைட்டுகளின் உதவியோடும், அமெரிக்காவின் முப்பரிமாண ரேடார்களின் உதவியோடும், மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர், தெர்மோபாம், கிளஸ்டர் பாம் கொண்டு நடத்தப்பட்ட போரில் இது பதிவாகாமல் எப்படி போனது? புலிகள் புரிந்த இத்தனை அட்டூழியங்களுக்கும் இலங்கை அரசிடம் ஆதாரமில்லாமல் போனது எப்படி.?.. நிமிடத்திற்கு 90 செல்களை எறியும் ராக்கெட் லாஞ்சர்களில் மக்கள் இறந்ததை விட புலிகளின் துப்பாக்கிகளால் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டு இறந்தவர்கள் அதிகம் என்பதே காலச்சுவடின் வாதம்.
போர் காலச்சுவடு விவரித்ததைப் போல நடக்கவில்லை. இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையின் அறிக்கையை ஒரு கட்டுரையாக/ ஒரு முன்னோட்டமாக வெளியிடும் காலச்சுவடிற்கு இதை ஆய்வு செய்வதற்கான அவசியமும் தேவையும் இல்லை. இதில் காலச்சுவடு குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு பல்வேறு தமிழர் அல்லாத பிற மக்களால் பேசப்பட்ட கட்டுரைகளை முன்வைக்க முடியும்.
மேலும் இக்கட்டுரையில் உள்ள முரண்கள் இதன் போலித்தன்மையை பல இடங்களில் வெளிப்படுத்துகின்றன, உதாரணமாக //ஒரு கட்டத்தில் இதுதான் உண்மை நிலைமை என்று சர்வதேச அமைப்புகளும் சர்வதேச ஊடகங்களும் கண்டுபிடித்திருந்தன// இதே கட்டுரையில் முன்னர் குறிப்பிட்டிருந்த //சர்வதேச ஊடகம் வெளியேற்றப்பட்டமை// என்கிற வாசகத்தை காலச்சுவடே மறந்து போயிருந்தது.
எல்லாவற்றிலும் அயோக்கியமான எழுத்தாக காலச்சுவடு பதிவு செய்திருப்பது //யுத்தத்தின்போது முதலில் பலியாவது உண்மை என்பார்கள். இந்த உண்மை முழுதாகவே பலியானது. இரண்டு தரப்பினரும் சனங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு மக்களைக் கொன்று குவித்தனர். அப்போது இந்த நிலைமைகள் தொடர்பாகச் சில கிறிஸ்தவ மதக் குருமார்கள் சொன்னார்கள்: உண்மையில்இரண்டு தரப்பினருமே போர்க் குற்றவாளிகள்தான். அதிலும் போராட்டம்,விடுதலை என்று வந்த சக்தியான புலிகள் இப்படி மனிதகுல விரோதச் செயலுக்குப் போனதை வரலாறு மன்னிக்காது. பிரபாகரனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையையே இப்போது புலிகள் செய்கின்றனர். தனியொரு மனிதனுக்காக இத்தனை உயிரிழப்புகளாஇவ்வளவு கொடுமைகளா? …”.//
//ஒரு தொகுதிச் சனங்களைப் புலிகள் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தை நோக்கிக்கட்டாயப்படுத்தி அடித்து விரட்டினர். அதுவும் பல வந்தமாகவே விரட்டினர். ஏற்கனவே உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே வசதியற்றிருந்த மக்கள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிடப் படையினரிடம் போய்ச்சாவது மேல் என்று மறுத்தார்கள்.//
இந்தக் கருத்தை எந்த குருமார் சொன்னார் என்று காலச்சுவடு விவரித்தது என்றால் பொருத்தமாக இருக்கும். மேலும் இலங்கை அரசிற்கும் பெரும் உதவியாக இருக்கும்.  எந்த ஒரு குற்றச்சாட்டிற்கும் ஆதாரம் வேண்டுமல்லவா? அதுவும் புலிகள் அற்றச் சூழலில் அவர்கள் யாருக்காக பயப்படுகிறார்கள், அவர்களை காப்பாற்றத்தான் பரமபிதா ராசபக்சே இருக்கிறாரே, பிறகு என்ன, காலச்சுவடே பேசுங்கள். உண்மைகளை நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.  மன்னார் மாவட்டத்தின் பேராயர் பல்வேறு ஆணையங்களில் இப்போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை பதிவு செய்திருந்தார். அதைத் தவிர வேறு யார் இத்தகைய கருத்தை அதுவும் போரின் முனையிலிருந்து நேராக முகாமுக்கு வந்த ஒருவருக்கு செய்தி அனுப்பி இருந்தார் என விளக்குவது காலச்சுவடின் பொருப்பு.
//இறுதி மூச்சை எப்படித் தக்கவைத்துக் கொள்வது என்று பிரபாகரனும் அந்த மூச்சை எப்படிப் பறிப்பது என்று அரசாங்கமும் இறுதிநிலையில் இருந்தன//
இந்தப் போரை பிரபாகரனின் உயிருக்கு குறி வைத்து நடந்த போராக சிங்கள அரசும், காலச்சுவடும் ஒரே சிந்தனையோட்டத்தில் பேசுவது விபத்தல்ல. திரும்பத் திரும்ப காலச்சுவடு இந்தப் போரை ஒரு பயங்கரவாதத்திற்கு எதிரான போராக சித்தரிப்பதற்குரிய கருத்துருவாக்க அடித்தளத்தை வலிந்து நேர்மையற்றதாய் உருவாக்குகிறது.
தமிழர்களின் நியாயத்தைப் பேசுகிறோம், மனித உரிமைகள்பால் நிற்கிறோம் என்ற போர்வையில் வன்மம் மிக்க கருத்துப் பதிவுகளை காலச்சுவடு தொடர்ந்து முன்வைத்து வருகிறது. அரசுவர்க்க, அரச நலன் சார்ந்து செயல்படும் நபர்களின் கருத்துக்களையும், ஆதார‌ரமற்ற வெற்று அவதூறுகளையும் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே செல்கிறது. இதற்கு மேலாக தனது வர்த்தக நலன், தான் கட்டமைக்கும் நேர்மையான நடுநிலை மக்கள் சார்பு அரசியல் விவாதங்கள் என்கிற பிம்பத்தை சார்ந்தது என்று மிகத் தெளிவாக உணர்ந்த காலச்சுவடு, அதற்குரிய புத்தகங்களை வெளியிட்டு தனது பிம்பத்தைக் காக்கிறது. ஆனால் ஒரு போதும் தான்முன்வைத்த அவதூறுகளைப் பற்றிய நேரடியான விவாதங்களுக்கு வருவதில்லை.
மேலும் தனது போலிபிம்பத்தை தற்காத்துக் கொள்ள ஒரு உளவாளி அமைப்பு எப்படி போராட்ட ஆதரவு கருத்துக்களை வைப்பதன் மூலம் தனது இருப்பை தக்கவைத்து நகர்கிறதோ அதே போல காலச்சுவடும் ஐ.நா. அறிக்கை பற்றிய கருத்தரங்கம், ஐ.நாவின் அதிகாரி எழுதிய ஆங்கிலப் புத்தகத்தினை மொழிபெயர்த்து வெளியிடல் என பல சாகசங்களைப் புரிகிறது. தெளிவாக இம்மாதிரியான நிகழ்வுகளில் நேர்மையான-அப்பாவி சிந்தனையாளர்களையும் அவர்களூடாக நேர்மையற்ற விலைபோன அறிஞர்களையும் சேர்த்துக் கொள்கிறது. இந்த யுக்தி தமிழ்ச் சமூகத்தில் செல்லுபடியாகிறது. காலச்சுவடின் நோக்கம் புத்தக விற்பனையாக நிற்கிறது. பத்திரிக்கையில் வைக்கும் நேர்மையற்ற விவாதங்களை சமாளிக்கும் விதமாக இசுலாமிய, தமிழீழ, தலித்தியப் புத்தகங்களை வெளியிடுகிறது. இதன் அடிப்படையில் நாங்கள் காலச்சுவடை ஒரு நேர்மையற்ற சமநிலை தவறிய கருத்துருவாக்க ஊடகமாக பார்க்கிறோம்.
புலம்பெயர் தமிழர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் எங்களது வேண்டுகோள்
இதற்கு மேலும் புலம்பெயர் தமிழர்கள் இந்திய அரசு-இலங்கை அரசின் கருணையில் இயங்கி வரும் காலச்சுவடை வாங்கி அதன் வியாபாரத்தையும், அறிவிசீவிக் கழிவுகளையும் பெருக்கினால், ‘சுயமரியாதை அறியாத, சுயபோராட்ட வரலாறு புரியாத மக்கள்’ என புலம்பெயர் மக்களின் முகத்தில் வரலாறு காறி உமிழும். இந்த இதழையும் இதனூடாக வரும் பதிப்புகளையும் தமிழர்கள், முக்கியமாக புலம் பெயர் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் புறக்கணித்தல் அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் நேர்மையான படைப்பு தளம் உருவாவதற்கு உதவுகிறீர்கள். மேலும் களைகளை களையும்போது மட்டுமே பயிர்களை நாம் பேணவும் முடியும்; அடையாளம் காணவும் முடியும். குழப்பங்கள் நிறைந்த போருக்குப் பின்னான காலகட்டத்தில் வெளிப்படையாக செயல்படும் இந்த அடியாட்களை புறக்கணித்து வெளியேற்றுவதே நமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும். இதை மே பதினேழு இயக்கம் உங்கள் முன் தாழ்மையான வேண்டுகோளாக வைக்கிறது.
காலச்சுவடை தொடர்ந்து ஆதரித்து வரும் படைப்பாளிகள் தங்களது படைப்பு நேர்மையில் உள்ள பிடிப்பை அரசியல் நேர்மையிலும் காட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறோம். இவர்கள் மேலும் காலச்சுவடுடன் நின்று தமது படைப்புகளை வெளிப்படுத்த விரும்பும் பட்சத்தில் இத்தகைய செயல்பாடுகள் ஒரு சிங்கள கைக்கூலியுடன் சேர்ந்து வேலைசெய்வதற்கு ஒப்பாகும் என்பதை  நீங்களே உணர்வீர்கள். பல்வேறு மாற்றுவெளிகள் உருவாகிய இந்த காலகட்டத்தில் ஒரு பதிப்பகமும், இதழும் மட்டுமே உங்களது படைப்புகளை மக்களிடத்தே சென்று சேர்ப்பித்து விடும் என்று நம்புவது அறிவுடைமையாகாது.
காலச்சுவடையும், அதன் முதலாளியையும் நாங்கள் நேரடியாக சந்திக்கத் தயாராக இருக்கிறோம்; விவாதிக்க காத்திருக்கிறோம். அதற்கு ஒரு கால அளவு இருக்கிறது என்பதையும் தீர்க்கமாகச் சொல்கிறோம். சனநாயகமாக பதில் சொல்லாமல், நேரடியான விவாதத்திற்கு வராமல் காலச்சுவடு நழுவிச் சென்று தனது தொடர்ச்சியான சீர்குலைவு அரசியலையும், அரசு வர்க்க சாதக அரசியலையும், ஆதாரங்களற்ற வார்த்தை ஜாலமிக்க கட்டுரைகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தும் பட்சத்தில்,  காலச்சுவடு தனது தளத்தில் உள்ள பலத்தை பயன்படுத்தி பொய் பிரச்சாரங்களை முன்னெடுப்பது போல, மே பதினேழு இயக்கமும் அதன் முழு பலத்தையும் அந்த இயக்கம் வலுவாக உள்ள களத்தில் இருந்து செலுத்தி காலச்சுவடை எதிர்கொள்ளும் என்று தாழ்மையோடு தெரிவிக்க விரும்புகிறோம். காலச்சுவடை புறக்கணிப்பது தமிழர்களின் ஆகப்பெரும் வரலாற்றுக் கடமையாக பார்க்கிறோம்.  
நாம் வெல்வோம்
- திருமுருகன் காந்தி ( thiruja@yahoo.com)
மே பதினேழு இயக்க
ம்

புதன், 14 டிசம்பர், 2011

தமிழரசன் வாழ்கை குறிப்பு


தோழர்களே!
சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்!
தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்!


அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல் மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு.

கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தார்.

இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட இவர் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (ML)-ன் மாபெரும் போராளி சாரும் மஜும்தாரின் அறைகூவலான ’’ மக்கள் விடுதலை” எனும் முழக்கத்தினை ஏற்று மாணவராக இருந்தபோதே அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ML இயக்கத்தின் மாபெரும் முன்னோடி AMK என்கிற கோதண்டராமன் அவர்களுடன் இணைந்து ”மக்கள் போர்க்குழு” உறுப்பினராகப் பணியாற்றினார்.

1975-ல் அரசு இவரை அரியலூரில் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்து தப்ப முயன்று பிடிபட்டார். பலமுறை முயன்று ஒவ்வொரு முறையும் காவல் துறையினரிடம் பிடிபட்டார்.
1984-ல் 9 ஆண்டு சிறை வாழ்வை முடித்துக் கொண்டு வெளிவந்த அவர் மீண்டும் AMK (எ) கோதண்டராமனுடன் தொடர்பு கொண்டார். அவருடன் இந்திய விடுதலையிலிருந்து தமிழக விடுதலை குறித்து தொடர்ந்து விவாதித்து வந்தார்.
1984-ல் மே மாதம் 5-6ம் தேதிகளில் கட்சி ஒரு மாநாடு ஏற்பாடு செய்தது. ”இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை” மற்றும் ”தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு” எனும் தலைப்பில் மாநாடு பென்னாடத்தில் நடந்தது.
மாநாட்டுக்குப் பின் ML அமைப்பிலிருந்து தமிழ்நாடு கிளை அமைப்பினர் வெளியேற்றப்பட்டனர். திருச்சி – தென்னார்காடு உள்ளிட்ட சில மாவட்ட ML தோழர்கள் 64 பேர் கொல்லிமலையில் கூடினர். அக்கூட்டத்தில் தாங்கள் இனி தனித்து இயங்குவது என முடிவு செய்தனர். கூட்டத்திற்கான அனைத்து முன்முயற்சிகளையும் தமிழரசன், சுந்தரம், புதுவை தமிழ்ச்செல்வம், தர்மலிங்கம் போன்றோர் செய்தனர்.
இப்படியாக ML இயக்கத்திற்குள்ளான கருத்து மோதல்களை அமைப்பு வடிவில் பிளவு படுத்திய முதல் தோழர் தமிழரசனே.

1985-ல் பெரம்பூர் மாவட்டம் மீன்சுருட்டியில் ”தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்” நடத்திய கருத்தரங்கில் ”சாதி ஒழிப்பின் தேவையும், தமிழக விடுதலையும்” எனும் பொருள்பட ஓர் அறிக்கையை தமிழரசன் முன்வைத்தார்.
டெல்லியில் நடந்த அகில இந்திய அளவிலான ML குழுக்களின் ஓர் கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து தோழர் புதுவை தமிழ்ச்செல்வன், புலவர் கலியபெருமாள் இருவரும் கலந்து கொண்டு தாங்கள் ”தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி” என பங்கு கொண்டனர்.

தமிழரசன் ”தமிழ்நாடு விடுதலைப் படை” எனும் பெயரில் இயக்கம் கட்டி இயங்கத் தொடங்கினார். சாதி ஒழிப்பிற்கான தேவை குறித்தும் தமிழக விடுதலை குறித்தும் தமிழகம் முழுக்கச் சுற்றி பல்வேறு தோழர்களையும், தாழ்த்தப்பட்ட அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.

தமிழக விடுதலைக்கும், சாதி ஒழிப்பிற்கும் ஆயுதமேந்தும் அரசியல் குறித்து கருத்துப் பரப்புரையும், செயல் திட்டங்களையும் வகுத்துச் செயல்பட்டார். புதிய ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் சாதி ஒழிப்பு ஒரு முகாமையான பங்கை வகிக்கின்றது என்பதை முன்வைத்து செயலாற்றினார்.

பல்வேறு போராட்டங்களை கருவியேந்துதல் வழி செயல்படுத்திய தமிழரசன் தமிழகத்தின் தலையாய பிரச்சனையான காவிரி ஆற்று நீர் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டி ஒரு திட்டம் தீட்டினார்.

அதை செயல்படுத்த தேவைப்படும் பொருளியல் ஈட்டல் நடவடிக்கை மேற்கொண்டபோது பொன்பரப்பியில் உளவுத்துறையின் சதியால் காவல் துறையால் படுகொலை செய்யப்பட்டார். தமிழரசனுடன் தர்மலிங்ம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் போன்ற தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைமைக் குழுவினர் ஐந்து பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இவரது இறப்பிற்குப் பின் தோழர் பொழிலன் உள்ளிட்ட சில தோழர்கள் தமிழ்நாடு விடுதலைப் படை என மீண்டும் செயல்பட்டனர்.

இதனால் கொல்லிமலை கூட்டத்தில் பிரிந்து சென்ற தோழர் சுந்தரம் ”தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி” எனும் பெயரில் செயல்பட ஆரம்பித்தார்.

தமிழக மக்கள் விடுதலைக்கான போரில் தனது உயிரை ஈந்த தமிழரசன் உள்ளிட்ட தோழர்களின்  முகாமைக் குறிக்கோளான சாதியொழிப்பை நெஞ்சிலேந்திப் போராட அனைவரும் சூளுரைப்போம்!

தோழர்களே

சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்!
தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்!

திங்கள், 31 அக்டோபர், 2011

பிரபாகரன் கடல்வழியாகத் தப்பினால் பிடிக்க உதவுவேன்: அமெரிக்க தெரிவித்தது:



இறுதிப்போரில் தேசிய தலைவர் இலங்கையை விட்டு தப்பிச் சென்றால் அவரைப் பிடிக்க தான் உதவுவேன் என்று அமெரிக்க என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 2009ம் ஆண்டு மே 15 நாள் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிய பாதுகாப்பான கேபிள் செய்தி ஒன்றை இடைமறித்துள்ள விக்கி லீக்ஸ் இத் தகவலை வெளியிட்டுள்ளது. ரோபேட் ஓ பிளேக் உடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார். அதில் தாம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாகவும் ஆனால் தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் திரு பொட்டு அம்மானுக்கும் தாம் மன்னிப்பு வழங்கத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இக் கலந்துரையாடல் அமெரிக்க தூதரகத்தால் சரியான முறையில் டைப் செய்யப்பட்டு அதன் நகல் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் இணைப்பு)

இதன்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இலங்கையை விட்டு தேசிய தலைவர் தப்பிச் சென்றால் தாம் அதனைக் கண்காணித்து தகவல்களை உங்களுக்கு சொல்லட்டுமா என்ற விண்ணப்பமும் அமெரிக்க தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க ஒரு நாட்டை வேவு பார்க்க பயன்படுத்தும் செய்மதி அல்லது ஆளில்லா விமனம் போன்ற உதவிகளை அந் நாடு இலங்கைக்கு வழங்கத் தயாராக இருந்திருக்கிறது என்பது இதன்மூலம் தெள்ளத்தெளிவாகிறது. அமெரிக்கா பல்லாயிரம் மயில்களுக்கு அப்பால் இருப்பதால் ஆளில்லா விமானம் சாத்தியமாகது. எனவே செய்மதி மூலம் முள்ளிவாய்க்காலை கண்காணித்து அங்கிருந்து புலிகளின் தலைவர்கள் தப்பிச் சென்றால் ஆதனை இலங்கைக்கு பரிமாற அமெரிக்கா தயாராக இருந்திருக்கிறது. ஆனால் அதே மே மாதம் 2009ம் ஆண்டு இலங்கை மனித உரிமைகளை மீறுவதாகவும் அமெரிக்கா பாட்டுப்பாடியுள்ளது.

அதுமட்டுமல்லாது பசுபிக் பிராந்தியத்தில் உள்ள தமது கப்பல் படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றை அனுப்பி காயப்பட்ட பொதுமக்களையும் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களை வெளியே எடுக்கவும் தாம் தயார உள்ளதாக இரகசிய சமிஞ்சைகளையும் அது வெளியிட்டது. பின்னர் நடந்த சந்திப்பு ஒன்றில் கோத்தபாய ராஜபக்ஷ தேசிய தலைவருக்கும் பொட்டு அம்மானுக்கும் மன்னிப்பு வழங்க விரும்புவதாகவும் அவர்கள் இருவரையும் தாம் காப்பாற்ற நினைப்பதாகவும் தன்னிடம் தெரிவித்தார் என ரோபேட் ஓ பிளேக் குறிப்பிடுகிறார். முதலில் தேசிய தலைவர் மற்றும் பொட்டு அம்மான் கொல்லப்படவேண்டும் என நினைத்த கோத்தபாய பின்னர் அவர்கள் தப்பிக்கவைக்க நடவடிக்கைகளை எடுத்தார் என்கிறார் ரோபேட் ஓ பிளேக் அவர்கள்.

அதாவது ஒரு சிறிய வட்டத்துக்குள் அகப்பட்ட பல புலிகளின் தலைவர்களை அமெரிக்காவின் உதவியுடன் சரண்டையச் செய்து அவர்களை உயிரோடு பிடிக்கும் நோக்குடனேயே கோத்தபாய செயல்பட்டுள்ளார் என்பது அவர் 2வதாக கலந்துகொண்ட பேச்சுவார்த்தைகளின் குறிப்புகளில் இருந்து தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. ஆனால் சரணடைவு முயற்சிகள் என்ன நடந்தது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். வெள்ளைக்கொடியுடன் சென்ற இரண்டாம் நிலை தலைவர்கள் கொல்லப்பட்டது யாவரும் அறிந்ததே. எனவே தேசிய தலைமை என்ன முடிவெடுத்திருப்பார்கள் என்பதும் தமது தாக்குதல் வியூகங்களை எவ்வாறு வழிநடத்தியிருப்பார்கள் என்பதனையும் நாம் சொல்லத்தேவை இல்லை. இவர்களை நம்பி அங்கே எந்தக் காய் நகர்த்தல்களும் இடம்பெற்றிருக்காது. போர் முடிவுற்ற பின்னர் முள்ளிவாய்க்காலில் பேரழிவு இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்ததும், செய்மதிப் புகைப்படங்களைக் காண்பித்ததும் அமெரிக்காவின் ரெட்டை நிலையை உணர்த்தி அதன் முகமூடியையும் கிழித்துள்ளது.

ஆனால் சம்பந்தன் ஐயா தொடக்கம் சில தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர்கள் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை என்ன ? இல்லை தமிழர்கள் போராட்டம் சுயநிர்ணய உரிமை குறித்து அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்ன எனத் தெரியாத இவர்கள் என்ன பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போகிறார்கள் என்று தெரியவில்லை. வல்லரசான அமெரிக்க கூப்பிட்டால் உடனே சென்றிவிடவேண்டும் என பாடப் புத்தகத்தில் படித்துவிட்டார்கள் போலும் !

செவ்வாய், 4 அக்டோபர், 2011

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி தீ பரவட்டும்...!

இளங்கோவன்



பேரறிவாளன் உள்ளிட்டோர் மீதான தூக்குத்தண்டனைக்கு எதிரான தமிழ்த்தேசத்தின் எழுச்சி மரணதண்டனைக்கு எதிரான கிளர்ச்சியாக பரிணமிக்க வேண்டிய வேளை இது.
சட்டமும் நீதியும் நவீனக் கோட்பாடுகள் பலவற்றால் வளம்பெற்றிருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் மரணதண்டனை என்பது ஐயத்திற்கிடமின்றி கொடுங்குற்றம்தான்.
'சட்டம் வலிமையான வர்களுக்கு வளைந்து கொடுக்கும் ஏழைகளைக் கண்டால் எட்டி உதைக்கும்'. என்ற அண்ணல் அம்பேத்கரின் பார்வையோடு மரணதண்டனைத் தீர்ப்புகள் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. இந்தியாவில் ஆகஸ்ட் 2004 இல் தூக்கிலிட்டு கொல்லப்பட்ட தனஞ்செய் சட்டர்ஜி “நீதி பணம் படைத்தவர் களுக்கானது இன்னொருமுறை நான் பிறக்க நேரிட்டால் ஒரு பணக்காரனாகப் பிறக்க விரும்புகிறேன்'' என்று சாவதற்கு முன் சொன்ன சொற்கள் இதனை உறுதிசெய்கின்றன. ஒரு பள்ளிச்சிறுமியைக் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திக் கொலை செய்ததாக அவர்மேல் குற்றம்சாட்டப்பட்டு இந்தத் தூக்கு வழங்கப் பட்டது.
1991 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு ஒரு வாழ்நாள் தண்டனையை அதாவது சற்றேறக் குறைய 14 ஆண்டுகளை கழித்த பின் அந்த ஏழை மனிதன் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டான்.
பாலியல் வல்லுறவு வழக்குகளில் செய்யப் படுகிற மரபணு ஆய்வு தனஞ்செய் வழக்கில் செய்யப்படவில்லை என்றும் தக்க சட்ட உதவி தனஞ்செய்க்குக் கிடைக்கவில்லை என்றும் அவ்வாறு கிடைத்திருந்தால் தீர்ப்பு வேறாக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு என்றும் தனஞ்செய் தரப்பில் தூக்கு நாளுக்கு முந்தைய நாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட செய்திகள் ஏதும் நீதிமன்றங்களின் காதுகளில் விழவில்லை. இறுதியாக 2004 ஆகஸ்ட் 14 இல் அந்த ஏழைச்சிறையாளியை தூக்கிலிட்டு தன் பணியை முடித்துவிட்டு அவர்பொருட்டு இறைவனிடம் பிரார்த்தனைபுரிந்துவிட்டு அந்த 72 அகவைக் கிழவரான தூக்கிலிடும் பணியாளர் தீரா மன உளைச்சலுடன் ஒதுங்கிக்கொண்டார்
எண்ணாயிரம் மனிதர்களை கழுவிலேற்றிப் பதைக்கப் பதைக்கக் கொன்ற மரபு நம்முடையது. எளிய திருட்டு வழக்குக்கு கோவலனை நேரிய விசாரணை ஏதுமின்றிக் கொன்ற நீதி தமிழர் நீதி. கணைக்கால் இரும்பொறை மன்னனுக்கே ஒரு குவளைத்தண்ணீர் தரத் திமிர்பேசிய சிறைப்பண்பாடு சங்கத்தமிழர் பண்பாடு. மூத்த தமிழ்க்குடிக்கு மனித உரிமை, மரணதண்டனை ஒழிப்பு என்பதெல்லாம் புரியவே புரியாத விந்தைகள் என்பதை நாம் அறிவோம்.
ராசீவ் காந்தி படுகொலை சிறப்புப் புலனாய்வுக் குழுத்தலைவர் கார்த்திகேயன் “என்றாவது மரணதண்டனை இந்தியாவில் ஒழிக்கப்படும்'' என்று தன் அவாவை வெளிப்படுத்துகிற அதே காலத்தில் "சிறைக்குள் புகுந்து ராசீவ் கொலை சிறையாளிகளைக் கொன்றிருக்க வேண்டும்' என்ற ஈவிகேஎஸ் இளங்கோவனின் சீறலும் வெளிப்படுகிற காரணம் நமக்குத் தெரிகிறது.
ஒரு துளிக் கண்ணீரிலும் ஒரு துளிச் செந்நீரிலும் ஏன் ஒரு துளி விந்திலும் கூட அரசியல் கலந்தோடும் காலம் நமது காலம். பேரறிவாளனுக்கும் முருகனுக்கும் சாந்தனுக்கும் உருகி யோடும் தமிழ் மனச்சான்று அப்சல் குருவுக்கும் நாளை கசாப்புக்கும் உருகியாகவேண்டும். இது மனிதநேயச் சிக்கலில்லை என்றும் நீதி குறித்த நாகரிக சமூகத்தின் பார்வைச் சிக்கல் என்றும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். ஆனால், மனிதநேயப் பார்வையின் ஈரம் கூடச் சுரக்காத நெஞ்சில் மனித உரிமைக்கான ஆழ்ந்த போர்க்குணம் உருவாவ தில்லை.
130நாடுகளுக்கும் மேலாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடைசெய்யப்பட்ட ஒரு தண்டனைக்கு நாம் எதிராகப் போர்க்கொடியை உயர்த்துகையில் மரணதண்டனைக்கு ஆதரவான வர்களால் எந்த வெட்கமும் இன்றி அரசியல் அம்மண ஆட்டம் களத்தில் தொடங்கப்படுகிறது. வாருங்கள் அனைவரும் வாருங்கள் மரணதண்டனை குறித்த உணர்ச்சிப்பெருக்கற்று அறிவார்ந்த விவாதங்களைத்தொடங்குவோம்.
“அரிதிலும் அரிதான வழக்குகளில்'' மரண தண்டனை வழங்கப்படலாம் என்ற இந்திய நீதித்துறையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருது கோள் வேண்டும் பொழுதெல்லாம் வளைத்துப் பொருள்கொள்ளத்தக்க ஒரு ரப்பர் கூற்றாக மாறி நெடுநாட்களாகிவிட்டன. இதனை உலக மன்னிப்புக்கழகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் உறுதிசெய்த கவலை தோய்ந்த பரிந்துரைகள் நிறையக்கிடக்கின்றன.
“அரிதிலும் அரிதான வழக்குகளில்'' என்ற சொற்றொடரில் எந்த வழக்கையும் எளிதாக இணைத்துப் பொருள்சொல்ல நீதிமான்கள் மலிந்து கிடக்கும் சூழலில் மரணதண்டனைக்கு எதிரான இயக்கத்தின் அறம்சார்ந்த அடிப் படைகள் வலுப்படட்டும்.
மரணதண்டனை என்பது திரும்பப்பெற முடியாத தீவினை மரணதண்டனை என்பது தண்டனை அல்ல கொலை. மரணதண்டனை என்பது குற்றவாளி திருந்தும் வாய்ப்பைத் தடுக்கும்நோக்குகொண்டது.
மரணதண்டனை என்பது கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்பது போன்ற பழிவாங்கும் செயல்பாட்டை ஒத்தது. மரணதண்டனை மனிதரின் வாழ்வுரிமைக்கு எதிரானது. மரண தண்டனை ஒருபோதும் குற்றங்களைக் குறைப்பதில்லை.
இக்கூற்றுகள் எல்லாம் தொடர்ந்த தருக்கங் களில் நிறுவப்பட்டும் இன்று மரணதண்டனை தொடர்வதன் காரணம் எளிமையானதன்று.
ஈவிகேஎஸ் இளங்கோவன் நிகழ்த்தும் சாகச அரசியல் வித்தைகளைப் போன்று அது விளையாட்டானதும் அன்று.
காலங்காலமாய் அரசியற்சமூகத்தில் நிலவுகிற பகைவன்மத்தின் வேர்கள் ஆழப் பரவியிருக்கும் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தின் அரசியற் போர்க்களத்தில் மரணதண்டனை ஒரு கூரிய போர்வாள்.
ராசீவ் காந்தியின் கொலைவழக்கு ஆதாரங் களில் நுழைந்து நுழைந்து செல்லும் எந்த ஒரு எளிய வாசகரும் அனைத்து ஆதாரங்களும் காங்கிரசை நோக்கிக் கைகாட்டுவதையும் அவற்றின் சுட்டுவிரல் ராசீவ் காந்தியைக் கொடூரமாக கொன்ற கொலையாளியாக சோனியா காந்தியை முதல் குற்றவாளியாகக் கருதச் செய்வதையும் உய்த்துணரமுடியும்
காவு கொடுக்கப்படுகிற மெலிந்த ஆடுகள் நம் குருதி வெறியைத் தணிக்கின்றன. பீறிட்டுக் கிளம்பும் ஆடுகளின் குருதியில் பொதுச் சமூகத்தின் மூச்சுக்காற்று குமிழியிட்டு மறைகிறது. ஒரு பெருமூச்சு மேலெழும்புகிறது.
அப்பாவிகளின் உயிர்களை ஒரு வெறிக்கடியில் குடித்தபிறகு அரசியல் ஓநாய் இளைப்பாறுகிறது. ஆகப்பெரிய புத்தகங்களில் ஒரு பெருங்கதையின் முடிவுரையை எழுதிமுடித்தபின் அடுத்த வேட்டைக்கு அது கிளம்புகிறது.
அரசியல் கயிற்றில் ஆடும் பொம்மைகளாய் தூக்குதண்டனைச் சிறையாளிகளாக பேரறி வாளன் சாந்தன் முருகன் ஆகியோர் முகங்கள் தென்படுகின்றன.
சொந்தவலியிலிருந்து இன்னபிறரின் வலியை அறிந்து கிளர்வதே மக்கள் அரசியலின் அறம்.
சதாம் உசேனைத் தூக்கிலேற்றிய அமெரிக்க அறம், பேரறிவாளன் உள்ளிட்டோரைத் தூக்கி லேற்றத் துடிக்கும் இந்திய அறம் என எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் தினவோடும் திமிரோடும்தான் இருக்கிறோம்.
நமது மானுட அறத்தின் திருப்பெயரால் சொல்கிறோம்.
மரணதண்டனை ஒழியட்டும்!
அப்பாவிகளுக்கு மட்டுமல்ல! குற்றவாளிகளுக்கும் சேர்த்தே சொல்கிறோம் !
மரணதண்டனை ஒழியட்டும்!
குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் மனப்பிறழ்வு மனிதர்களுக்கும், கயர்லாஞ்சிப் படுகொலைக்குக் காரணமான ஆதிக்கச்சாதி வெறியேறிய மனிதர்களுக்கும் நாம் கற்பிக்கவேண்டிய மானுட அறம் நிறைய உள்ளது.
எந்த உணர்ச்சிக் கலப்பும் இல்லாத அறிவார்ந்த சொற்களால் ஆன இம்முழக்கத்தை முன்னெடுப் போம்!
மரணதண்டனை ஒழியட்டும்! மானுட அறம் வெல்லட்டும்!

நமக்களிக்கப்படும் தண்டனைகளே நாம் ஏந்தும் கருவிகளை தீர்மானிக்கின்றன!


இந்தியா நம் எதிரி நாடு! இந்தியர்கள் அனைவரும் நம் எதிரி! இந்திய விடுதலை நாள் நம் துக்க நாள்! எனும் முழக்கத்தோடு தமிழ் நாட்டை வென்றெடுக்க களத்தில் முனைப்புடன் செயலாற்றும் நாம், தோழர்களின் மரணத்தின் மூலமாக பல்வேறு அச்சுறுத்தல்களை இவ் ஏகாதிபத்திய அடிவருடிகள் வரலாற்றின் வழி எங்கும் பொதுமக்களுக்கு நிகழ்த்திக் காட்டிக் கொண்டே வருவதின் மூலமாக தேசிய இன விடுதலைக் கருத்தியலை பொதுமக்களின் மனம் நாடாமல் செய்யும் கருவியாகப் பயன்படுத்தி வருவதைக் காணலாம். அவற்றில் முதன்மையான தாக போலி மோதல் படுகொலையும், அரசப் பயங்கரவாதத்தின் மற்றொரு வகையான தூக்கு தண்டனையும் ஆகும்.
தற்போது போலி மோதல் படுகொலைக்கெதிராக பல்வேறு மனித உரிமை இயக்கங்களும், வழக்கு மன்றங்களும் தலையிட்டு போராடி கண்டிப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் அந்தப் பூதம் எப்போது அரசதிகாரத்திற்கு தேவைப்படு கிறதோ அப்போது திடீரெனக் கிளம்பும். இது இவ்வாறிருக்க தற்போது உலகில் 136 நாடுகளில் தூக்குத் தண்டனையை நிறுத்தி விட்டாலும், இன்னமும் ஏகாதிபத்தியமும், அதன் அடிவருடி களும், அவர்களுக்கெதிராக பொதுமக்களும், போராளிகளும் கிளர்ந்தெழும்போது அவர்களை அச்சுறுத்தி அடக்குவதற்கு தூக்கு எனும் அரசப் படுகொலையை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு செய்யப்படும் கொலைகளில் ஒரு சிலவற்றின் உண்மைகளை அன்றைக்கு எவ்வாறு யார் யார் பார்த்தனர் என்றும் இன்று எவ்வாறு யார் யார் பார்க்கின்றனர் என்றும் பார்த்தோமானால் மிகவும் பிரமிப்பாகவும், தூக்கிலிடும்போது பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவார்கள்.
அதே நிகழ்வு காலம் மாறும்போது அவர் இன்றைய அரசு அமைப்பதற்கான போராளியாகவும் ஈகியர்களாகவும் வரலாற்றுப் பாட நாயகர்களாகவும் போற்றப்பட்டு கற்பிக்கப்படுவார்கள்.
ஆனால் அவ்வாறு போற்றப்படுகிற அந்த நாயகர்களின் வழியில் நாளைய அரசமைப்பதற்கும் பொதுமக்களின் உரிமைகள் பாதுகாத்து நிலைநிறுத் தப்பட வேண்டுமென்பதற்காகவும் இன்று அரச பயங்கரவாதிகள் உண்மையானவர்களைப் பயங்கர வாதிகளாகவும், தீண்டத்தாகதவராகவும் பொதுமக் களிடமிருந்து பிரித்து முந்தைய ஏகாதிபத்தியம் என்ன செய்ததோ அதையே இவர்களும் செய்கின்றனர்.
எடுத்துக்காட்டாக இந்திய ஒன்றியத்தின் விடுதலைப் போரில் தனது இளம் வயதில் ஈடுபட்டு வெள்ளை அதிகாரியை தனது துமுக்கியால் சுட்டு வீழ்த்தி தனது 23ம் அகவையில் ஏகாதிபத்திய தூக்கு கயிறை முத்தமிட்ட தோழர்கள் திருவாளர்கள் பகத்சிங், சுகதேவ், இராசகுரு ஆகியோர் இன்று இந்திய ஒன்றியத்தில் ஒப்பற்ற விடுதலை வீரராகவும், உலகப் போராளிகள் போற்றப்படும் போராளியாகவும், போற்றப்படுகிறார்கள்.
ஆனால் இன்று ஈழத்தில் தங்கள் இன வழி தேசியத்திற்காக தனது வாழ் நாளை அர்ப்பணித்து போராடி வந்த தோழர்கள் சாந்தனும், முருகனும், தாயக தமிழகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவத் திலும் ஈடபடா நோக்குடன் தனது தலைமைக் கட்டளையை ஏற்று தமிழகம் வழியாக வெளிநாடு செல்ல வந்த சாந்தனும், பெயர் குழப்பத்தினாலும் (திருச்சியில் இறந்த சாந்தன் எனும் போராளியின் செயல்களையெல்லாம் இவர் மீது சுமத்தி சென்னை போன்ற ஒரு பெருநகரில் பழக வேண்டும் என்பதற்காக பயிற்சி யெடுக்க சென்னை வந்த முருகனும், திராவிட கழக மரபில் வந்து இயற்கையிலேயே தமிழ் தமிழர் ஆதரவாளராக வளர்ந்த ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டு இளைஞர் தோழர் பேரறிவாளனும் சோனியாவின் கணவன் இராசீவ் காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு மொத்தமாக 21 ஆண்டுகளாக தனிமைச் சிறை கொட்டடியில் அடைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். இந்திய ஒன்றியத்தின் குடியரசு தலைவர்களான திருவாளர்கள் கே.ஆர். நாராயணன், ஏ.பி.சே. அப்துல் கலாமாலும் தூக்குத் தண்டனையை உறுதி செய்து நடுவணரசு சிபாரிசை புறக்கணித்து தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பியனுப்பியதால் 2வது முறையாக ஏ.பி.சே. அப்துல் கலாமை குடியரசு தலைவராக தேர்ந் தெடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்பினாலும்,
எங்கு அவர் வந்தால் தங்களது ஆசை நிராசை ஆகிவிடுமோ என்று கருதி மராட்டிய மாநிலத்தி லிருந்து தங்கள் சொல்லைத் தட்டாத திருமதி பிரதீபா பாட்டீலை இந்திய ஒன்றியத்தின் முதல் மகளாக்கி அவரின் மூலம் தங்களின் ஆசையான நம் தோழர் களின் உயிரை சட்டத்தின் மூலம் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கச் செய்து விட்டு அமெரிக்கா சென்று ஓய்வெடுத்துள்ளார்கள் தாய் சோனியாவும், மகன் இராகுலும். நாமோ தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்து தூக்கு தண்டனையை நிறுத்தச் சொல்லியும், தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றச் சொல்லியும் கூக்குரலிடுகிறோம்.
கண்ணாடி மாளிகையில் இருக்கும் அவர்களுக்கு நம் கூக்குரல் எங்கே கேட்கப் போகிறது. மேலும் நம் எதிர்ப்பலையைக் கண்டு எங்கு திருவாளர், கலைஞர் அவர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் இன்று நேர்ந்துள்ள கதி நாளை நமக்கும் நம் தோழி குடும்பத்திற்கும் நேர்ந்துவிடக் கூடாது எனக் கருதி, பல்வேறு சட்ட நிபுணர்களும் தூக்கி நிறுத்த, இரத்து செய்ய தமிழக மக்கள் மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என பல சட்டப் பிரிவுகளையும், பல முன் மாதிரிகளையும் கூறியப் பிறகும், செவிடன் காதில் ஊதிய சங்காக தமிழக மக்கள் மன்றத்தின் விதி எண் 110 ன் கீழ் தனக்கு அதிகாரமில்லை எனும் பார்ப்பனிய நயவஞ்சகத்தோடு அறிவிக்கிறார் மாண்புமிகு செல்வி செயலலிதா அவர்கள்.
ஆனால் மறுநாளே நமது தோழி செல்வி செங்கொடி ஏற்றிய பெரு நெருப்பில் எங்கு நாம் எரிக்கப்பட்டு விடுவோமோ எனப் பயந்து சட்டமன்றத்தில் ஒப்புக்கு ஒரு தீர்மானம் போட்டு அனுப்பி விட்டு என் கடமை முடிந்து விட்டது என உட்கார்ந்து விட்டார். ஏனெனில் கடந்த காலங்களில் போட்ட தமிழக மக்கள் மன்றத் தீர்மானத்தின் மதிப்பு தெரியாதவரா அவர்.
ஆனால் அத் தீர்மானத்தை விட அமைச்சரவை தீர்மானம் மிக முக்கியம் என பல நிபுணர்கள் கூறிய போதிலும் அதைப் பற்றி இன்றுவரை வாய் திறக்க வில்லை. நாமும் ஒற்றை சட்டமன்ற தீர்மானத்தின் மூலம் விடிவு கிடைத்து விடும் என்றெண்ணி, அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டோம். இது போதாதா பார்ப்பன பனியா கும்பலுக்கு.
சரி கண்ணாடி மாளிகையில் மயக்கத்திலிருக்கம் கோமாளிகளிடமிருந்து நம் கண் முன்னே சாவின் விளிம்பில் இருக்கும் தோழர்கள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் உயிரையுமாகட்டும், அல்லது இனி வரும் காலங்களில் நம் தோழர்களின் உயிரை எடுக்க எவரும் எண்ணாமலிருக்க நாம் என்ன செய்ய வேண்டுமென சிந்தித்த வேளையில் கிடைத்த ஓர் தகவல் என்னவெனில்,
தோழர்கள் பகத்சிங், சுகதேவ், இராசகுரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வெள்ளைய ஏகாதிபத்தியம் நாள் குறித்த செய்தி கேட்டவுடன் அவர்களின் உயிரை மீட்டெடுக்க நாட்டின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்து கிளம்பிய மக்கள் பெரு வெள்ளம் ஏகாதிபத்திய அடக்கு முறைக் கருவிகளால் பலமான கருவியான சிறைக் கொட்டடி மதில் சுவர்களை தகர்த்து கொட்டடி இரும்புப் பூட்டுகளை சிதறடிக்கப் போகிறது எனும் செய்தி ஏகாதிபத்திய காதுகளை எட்டியவுடன், உடனே அவசர அவசரமாக தோழர்கள் மூவரையும் நயவஞ்சகமாகக் குறித்த நாளுக்கு முந்தைய மார்ச் 23ம் நாளில் தூக்கின் மூலம் கொலை செய்யப்பட்டனர். இது அன்று அவர்களுக்கு தண்டனை நமக்கு கொலை.
அதேதான் இன்று தோழர்கள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் நிலையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நாம் சிறிது ஏமாந்தாலும் ஏமாற்றப்படுவோம். அதனால் தோழர்களே சிறைக் கொட்டியை நோக்கி பயணித்து அதன் மதில் களையும், திமிர்களையும் தகர்த்தெறிந்து நம் தோழர்களைக் காப்போம்.
சரி இது வன்முறை செயல் என்று சில அதி மேதாவிகள் பொய் அரசியல் பேசலாம். ஆனால் வரலாற்றின் அடிப்படையில் அது வன்முறையா என்றால் இல்லை. ஏன் இல்லை என்றால், இதை நாம் சொல்லவில்லை இந்திய ஏகாதிபத்திய மகாத்மா என்று போற்றப்படுகிற கரம்சந்த் மோகன்ராம் காந்தி அவர்கள் சொல்கிறார்கள். இதோ அவர் கூறுவதைப் பார்ப்போம்.
1942ம் ஆண்டு நடைபெற்ற ஆகத்துப் புரட்சிக்கு முன்பு தனது ஏடான அரிசனில் அகிம்சையின் தந்தை எனும் திருவாளர் காந்தி அவர்கள் திருவாய் மலர்ந்தது என்னவென்றால், முடிந்தவரை இப்போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தவே நான் முயற்சிப் பேன். ஆனால் பிரிட்டிசு அரசை இப்போராட்டம் கவரத் தவறினால் அதன்பின் இந்தியாவில் நடைபெறுகின்ற காரியங்களுக்கு நான் பொறுப்பல்ல என்கிறார். அதே ஏட்டில் அவர்களின் மாணவரான திரு. கிசோரிலால் மக்ரூவாலா என்பவர் சதி செயல்களும், பாலங்களை தகர்ப்பதும், தந்தி தபால் தொடர்புகளை துண்டிப்பது சாத்வீக போராட்டத் திற்கு உட்பட்டது தான் என்று எழுதுகிறார்.
ஆகத்து 7ல் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் திருவாளர் காந்தி அவர்கள் அரசு என்னை முன் கூட்டியே கைது செய்தால் பலாத்கார செயல்கள் நாடு தழுவிய அளவில் வெடித்தெழும். வன்முறை புரட்சி ஏற்பட்டால் நான் அதைக் கட்டுப்படுத்த மாட்டேன் என்றும் மேலும் நியூசு(ஸ்) கிரானிக்கல் எனும் பத்திரிகையில் பொதுமக்கள் இயக்கத்தில் வன்முறை போராட்டங்கள் உட்பட்டவைதான் அங்கீகரிக்கப்பட் டவைதான் என உறுதிபட கூறுகிறார்.
மேலும் காந்தியின் நெருங்கிய நண்பர் பட்டாபி சீத்தாரமையா ஆந்திர சுற்றறிக்கை எனும் ஓர் அறிக்கையை அனைத்து மாநிலத்திற்கும் அனுப்பி அதில் கூறப்பட்டுள்ள போராட்ட வழிமுறைகளான தந்தி கம்பிகளை அறுக்கவும், தபால் நிலையங்களை கைப்பற்றவும், தண்டவாளங்களையும், பாலங்களை யும் வெடி வைத்து தகர்க்கவும் எனவும், அதை அனுமதிக்குமாறும் காங்கிரசு தலைவர்களுக்கு அனுப்பினார்.
ஆகத்து 8 அன்று காந்தி கைது செய்யப்பட்டவுடன் கோவை விமான நிலையம் கொளுத்தப்பட்டன. காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. தாலுகா அலுவ லகங்கள், தொடர் வண்டி நிலையங்கள் கைப்பற்றப் பட்டன. வழக்கு மன்றங்கள் கைப்பற்றப்பட்டு வெள்ளைய நடுவர்கள் துரத்தப்பட்டனர். போராட்ட வீரர்களே நடுவர்களாக அமர்ந்து வெள்ளை நடுவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரித்தனர். வீடுகள் தோறும் வெடிகுண்டுகள் தயாராயின.
கொல்லு பட்டறையில் துமுக்கிகள் தயாரிக்கப் பட்டு போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. தந்திக் கம்பங்கள் தபால் அலுவலகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பெருமைமிகு சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மன்றத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. அவை எல்லாவற்றிற்கும் மேலாக சிறைக் கொட்டடி மதில்கள் உடைக்கப்பட்டு கொட்டடி இரும்புக் கம்பிகள் தகர்க்கப்பட்டு போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஆக ஒரு இன விடுதலைப் போராட்டத்தில் பொய்யான நவீன பார்ப்பனர்கள் பேசும் அகிம்சை வழிப் போராட்டத்தினால் நம் தேச விடுதலையும் கண் முன் உள்ள தோழர்களையும், இனிவரும் தோழர்களையும் காக்க முடியாது. அவ்வாறு காக்கத் தவறினால் நம் போராட்டத்தை நடத்தவோ, இலக்கை அடையவோ முடியாது.
ஆகவே தோழர், தமிழரசன் வழிகாட்டியுள்ளார் என்று கூறி தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவதிலிருந்து தப்பிக்க ஓர் வழியை மகா ஆத்மா வழங்கி உள்ளது. ஆகவே மேலே அவர் காட்டிய சிறை உடைப்பு தகர்ப்புப் போராட்டத்தினால் நமது நாட்டை நமதாக்கி, நம் விடுதலைப் பூட்டை நாமே திறப்போம்.
தோழர்களே! விடுதலை என்பது கெஞ்சி பெறுவதில்லை. மிஞ்சி பெறுவது எனும் தொடரை நெஞ்சிலேற்றி விடுதலை கனலை மூட்டுவோம்! மூன்று தமிழர் உயிரை மீட்போம்!