வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

'நாம் தமிழர் முத்துக்குமார்' கொலையின் பின்னணி என்ன..?



15.02.2011 இரவு சுமார் 10.15 மணிக்கு புதுக்கோட்டை நகரின் மைய்யப் பகுதியான அண்ணா சிலை அருகில் உள்ள தாஜ் என்ற பழங்கள் விற்கும் கடையில், பழங்கள் வாங்கிக் கொண்டு இருக்கையில் பின்புறமாக வந்த மூன்று பேர் கொண்ட கும்பலில் வயிற்றில் கத்தியை சொருகுகிறார் ஒருவர்.


நிலைமை என்னவென்று அறிவதற்குள் மற்றொருவர் பின்புற தலையை நோக்கி அரிவாளால் வெட்டுகிறார். இதை சற்றும் எதிர்பாராத அவருடைய வக்கீல் தடுக்க முற்படும் போது அவரின் கையில் வெட்டு விழுகிறது. முகத்திலும் வெட்டு விழுகிறது. சுப.முத்துக்குமார் எந்த வித சுயநினைவும் இன்றி பழக்கடையின் மைய்யப் பகுதியில் குடல் சரிய விழுந்து உயிரை விடுகிறார். கடைக்காரர்கள் நிலை என்னவென்று அறிவதற்குள் இந்த கொலைகார கும்பல் காரில் எறி தப்பி விடுகிறது. சுப.முத்துக்குமார் வக்கீல் கூச்சலிடுகிறார். போலீஸ் வருகிறது. முத்துக்குமாரை வழியனுப்பிய நண்பர்கள் விரைகின்றனர். முத்துக்குமார் படுகொலை கிட்டத்தட்ட அன்று இரவு சுமார் ஒரு மணிக்குள் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது.

புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது அவரின் நண்பர் வக்கீல் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். தமிழகமெங்கும் இருக்கும் முத்துக்குமாரின் நண்பர்கள், அரசியல் தோழர்கள், மாற்று கட்சியினர் என்று அனைவரும் மீளாத்துயரில் ஆள்கொள்கின்றனர். அதிகாலையில் இருந்தே அரசு மருத்துவமனை சுற்றிலும் பெருந்திரளான மக்கள் கூட்டம். புதுக்கோட்டை பாவாணன் அவர்கள் விரைகிறார். நாம் தமிழர் மாவட்ட நிர்வாகிகள், செயலர்கள், அமைப்பாளர்கள் என்று அனைவரும் குவிந்து விட்டனர். அரசு மருத்துவமனையில். போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு முத்துக்குமார் உடலை நாம் தமிழர் இயக்கத்தினர் பெறுகின்றனர். முத்துக்குமார் உடல் சுமந்த வாகனம் மெல்ல ஊர்ந்து செல்ல பின்வரிசையாக சுமார் 100 - க்கும் மேற்பட்ட கார்கள் செல்ல, புதுக்கோட்டை - பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வடகாடு என்ற பெரும் கிராமத்தை நோக்கி கிட்டத்தட்ட ஒரு மூன்று மணி நேரம் கார் ஊர்வலமாக செல்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் திணறியது.

புதன் கிழமை காலையில் செந்தமிழர் சீமான் விரைகிறார். வடகாடு நோக்கி. நாம் தமிழர் நிகழ்சிகள் அனைத்தையும் நன்கு திட்டமிட்டு நடத்தி வரும் நாம் தமிழர் இயக்கத்தினர், இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்று திணறினர். வடகாடு கிராமம் மட்டும் அல்ல, அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் செய்தவறியாது நின்றனர். பின்பு முத்துக்குமார் உடலை அவரின் வீட்டின் முன் அதாவது முத்துக்குமார் மாமனார் கரு.காளிமுத்து வீட்டின் முகப்பில் புதைக்கப்படுகிறார். சீமான் வீரவணக்கம் முழங்க இந்த துயர சம்பவம் கனத்த நெஞ்சுடன் முடிவடைகிறது. நாம் தமிழர் இயக்கத்தினர் அடையும் முக்கிய சோக, துயர நிகழ்ச்சி இது.

சில மாதங்களுக்கு முன் இதே வடகாடு கிராமத்தில் முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் வெங்கடாசலம் என்பவர் கொலை செய்யப்படுகிறார் அவரது சொந்த வீட்டிலேயே. இவரின் நெருங்கிய உறவினர் தான் கரு.காளிமுத்து. இவரின் மகளை தான் முத்துக்குமார் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் முடித்தார். முத்துக்குமார் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் " இவரைப் பற்றி தெரியுமா " என்று துண்டு பிரசுரங்களை ஆங்காங்கே வீசி செல்கின்றனர் ஒரு சிறு கும்பல் இரவில். அந்த பிரசுரத்தின் துண்டு நோட்டீசில் முத்துக்குமார் மீது உள்ள வழக்குகள், வீரப்பனுடன் உள்ள தொடர்புகள், தடை செய்யப்பட்ட புலிகளுக்கு மருந்துகள் வாங்கிய விபரங்களை எல்லாம் தெரிவித்து இறுதியில், கொலையுண்ட வெங்கடாசலத்தை ஏன் இவர் கொலை செய்திருக்கக் கூடாது என்று அரசியல் வகுப்பைப் போல எழுதி இருந்தார்கள். இந்த சிறு பிரசுரத்தை அறிந்த முத்துக்குமார் தனது நண்பர்களை மிக கவனமாக இருக்கச் சொல்லி இருக்கிறார்.

இடையில், முத்துக்குமாரின் மாமனார் கரு,காளிமுத்து, இந்தப் பிரசுரம் குறித்து தான் சந்தேகம் அடையும் இருண்டு மூன்று நபர்களை அடையாளப் படுத்துகிறார் காவல் நிலையத்தில். சிறு பிரசுரம் வெளியிட்ட மூன்றாவது நாளில் முத்துக்குமார் படுகொலை செய்யப்படுகிறார். இந்த துயர சம்பவத்திற்கு என்ன காரணம் என்று முழுதும் நண்பர்களால் அலசி பார்க்க முடிந்தது. காரணங்கள் அரசியல் தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. என்றே பலராலும் பேசிக் கொண்டிருந்ததை அறிய முடிந்தன.

முத்துக்குமார் 89 - ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்துள்ளார்.பின்பு தமிழகம் வந்து தமிழர் மீட்சிப் படை என்ற ஒரு அமைப்பை பலப்படுத்துகிறார். தமிழீழம் தமிழகம் என்று அரசியல் வேலைகளை செய்கிறார். பின்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார். தடா சட்டத்தில் சிறைக்கு செல்கிறார். பின்பு குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படுகிறார். 'மீசை' என்று மரியாதையுடன் அழைக்கப்படும் வீரப்பனோடு சேர்ந்து காட்டிற்கு செல்கிறார். வீரப்பனின் 'வெள்ளி திருப்பூர்' காவல் நிலைய தாக்குதலில் சேர்க்கப்படுகிறார். மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார். 'தமிழ் விடுதலைப் படை' மாறனுடன் இணைந்து தமிழக உணர்வாளர்களை ஒன்றிணைக்கும் வேலைகளை செய்து கொண்டு இருந்தார். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட நிலையில், வீரப்பன் வைத்த நிபந்தனைகளில் ஒன்று முத்துக்குமார் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற ஒன்றும்.

புலிகளின் யுத்த கால கட்டங்களில் மருந்துப் பொருட்களை மணல் மேடு பகுதியில் இருந்து, இரவு வரை காத்திருந்து படகு கரைக்கு வராததால் விடியற்காலை பொது மக்கள் தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல் துறை முத்துக்குமாரை கைது செய்து இந்த தடவை பொடாவில் போட்டார்கள். பின்பு வெளியே வந்த முத்துக்குமார் இந்திய இலங்கை விடுதலைப் புலிகளின் இறுதி கட்ட யுத்தங்களில் படுகாயம் அடைந்த பொது மக்களுக்கு ரத்தம் மற்றும் மருந்து பொருட்கள் அனுப்புவார் என்று அல்லது அனுப்பினார் என்று கைது செய்து வழமை போல சிறையில் தள்ளியது. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்து அதன் ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். முந்தா நாள் வரைக்கும்.

முத்துக்குமாரின் செயற்பாடுகளை மட்டும் அல்ல. நாம் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகளையும் நிறுத்த வேண்டும். என்ன யோசித்தாலும் காவற் துறைக்கு இந்த பாழாய்ப்போன சட்டங்கள் இடையூறாக இதுகாறும் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் பகுதியில் நாம் தமிழர் இயக்க பணிகளை நிறுத்துவதற்கு ரயிலில் கல்லுகளைப் போட்டும் இரும்புத் துண்டங்களைப் போட்டும் தமிழ் தீவிரவாதிகள் என்றார்கள். நாம் தமிழர் என்றார்கள். ஒரு பத்துப் பதினைந்து பேர்களை தூக்கிக் கொண்டு சென்றார்கள். படு ரகசியமாக. பின்பு வக்கீல் தோழர்கள் 'ஆட் கொனர்வு' மனுவைப் போட்டு இந்த பாழாய்ப் போன சட்ட இடையூறுகளை ஏற்படுத்தி ஜாபர் சேட்டுக்கும், தமிழக முதல்வருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். பிறகு ஏன் இது போன்று செய்கிறீர்கள் என்றதற்கு முதல்வர் அவர்களின் நெருங்கிய தமிழ் அறிஞர் ஒருவர் இப்படி சொன்னார். " எல்லாம் இந்த ஜாபர் சேட் அவர்களின் வேலை என்று " முதல்வருக்கு தெரியாமல் இந்த உளவுத் துறை அதிகாரி நடவடிக்கை எடுத்து விட்டார் என்று புதிய விளக்கத்தை கொடுத்தனர்.

பிறகு என்ன செய்வது..? எப்படி நாம் தமிழர் இயக்கத்தை முடக்குவது..? நன்கு யோசித்து ஒரு செய்தியை கசிய விட்டார்கள் சில வாரங்களுக்கு முன்..! சீமான் அவர்களை கொலை செய்வதற்கு ஒரு டீம் சிங்கள உளவு மற்றும் இந்திய உளவு அமைப்புகளால் ட்ரெயின் செய்து ஆட்களை தமிழகத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள் என்று. எனவே சீமான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்று சொன்னார்கள். சீமான் அவர்கள் சொன்னார்கள் 'எனது மண்ணில் இறப்பதை பெருமையாக கொள்வேன்' என்றார். போலி மோதலில் கொல்ல முடியாது. அங்கேயும் சட்ட சிக்கல் வந்து விடுகிறது. மேலும் இந்த போலி மோதலை சீமான் அவர்கள் அரசியலாக்கி விட்டால் மேலும் பெரும் சிக்கலாகி விடும். எனவே தேர்தல் வேறு நெருங்கிக் கொண்டு இருக்கிறது. என்ன செய்யலாம்..? ஏதாவது செய்தே ஆக வேண்டும்..? என்ற நிலைமை இந்திய தமிழக உளவு துறைக்கு, சில அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் பெரும் முட்களாக உள்ளனர். எல்லாம் தேர்தல் வரைக்கும். பிறகு தான் இருக்கிறதே அடக்குமுறை.

எனவே சீமானை பயமுறுத்தி வைக்க வேண்டும். அரசியல் செயற்பாடுகளை தற்காலிகமாவது தடுத்து நிறுத்த வேண்டும். எனில், என்ன செய்யலாம் என்று கருதி....நாம் தமிழர் இயக்கத்தின் முக்கியமானவராக இருக்கும் இந்த முத்துக்குமாரை பழைய பாணியில், அதாவது கருப்பு வெள்ளை கால சினிமா பாணியில், காவல் துறையே மாற்று வேஷங்களில் புகுந்து ரவுடி வேசங்கள் போட்டு 'போட்டுத் தள்ளி' விட்டால் என்ன என்று, யோசித்து செய்திருக்கலாம் என்று ஒரு தோழர் இறங்க கூட்டத்தில் இருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். இதன் மூலம் வருங்காலங்களில் ஒரு மாற்று சக்தியாக வளர்ந்து விடுவதை தடுத்து நிறுத்தலாம். சீமானை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் பட்டாளத்தை தடுத்து நிறுத்தலாம்..! எனவே இந்த மாதிரி நடவடிக்கைகளை 'நவீன போலி மோதல்' என்று சொல்லலாமா..? என்று இறங்கக் கூட்டத்திற்கு வந்தவர்கள் பிரித்து மேய்ந்து விட்டார்கள்.

இளம் வயதில் முத்துக்குமார் போன்றவர்கள் பெற்ற அரசியல் போராட்ட அனுபவங்கள் கிடைக்கப் பெற்ற ஒரு சிலரில், இன்று முத்துக்குமார் நீக்கப்பட்டு விட்டார். அரசியல் அனுபவங்கள் அற்ற சினிமா நடிகர்கள் மற்றும் உதிரி அரசியல் கட்சிகள், சாதியக் கட்சிகள், மத கட்சிகள் என்று தமிழகத்தில் வலம் வருகையில், இது போன்ற தமிழ், தமிழ் தேசியம், தமிழ் மக்கள், தமிழர்கள் விடுதலை, தமிழ் நாடு, உலகத் தமிழர்கள் என்று மிக ஆழமான கருத்து உருவாக்கங்களை கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர்களின் தலைவர்களாக வர முடியாத சூழலை உருவாக்குவதே திராவிட அரசியல், இந்திய தேசிய அரசியலுக்கு மிக கட்டாயமாக உள்ளது. இது போன்ற நிலையை உருவாக்க தலைகீழாக முயன்று வருகிறது இந்திய பார்ப்பனிய அரசியல் கூட்டம். எல்லாவற்றையும் மீறி, எல்லா தடைகளையும் கடந்து இன்று தமிழன், உலகத் தமிழன் என்ற தேவை உடனடி நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று விட்டது என்று கருதலாம் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு
ஈழதேசம்..

2 கருத்துகள்:

  1. சீமான் அவர்களே உங்களுக்கு என்னுடைய பகிரங்க கேள்வி புதுக்கோட்டை வடகாடு முத்துக்குமாரின் கொலைக்கு நீ என்ன செய்தாய்? உங்கள் கட்சியில் இருந்த அவர், உங்களை வைத்து பல கூட்டங்களை துடிப்புடன் செய்த அவருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள். அவசர அவசரமாக புதைத்துவிட்டு வந்ததன் மர்மம் என்ன?..பல ஊர்களில் இருந்து உணர்வாளர்கள் வந்துகொண்டிருக்க இங்கு யாரும் வரவேண்டாம் எனவும், எல்லாம் திரும்பி போய்விடுங்கள் என்றும் அலைபேசியில் கூறியதன் உள்நோக்கம் என்ன?..உன்னை நம்பி வரும் தொண்டனுக்கு இதுபோல் நடந்தால் இதுதான் கதியா?...உனக்கு அரசியல் நடத்த தெரியுமா?...போராட தெரியுமா?...உனது வீரமெல்லாம் ஒலிபெருக்கிக்கு முன்பு மட்டும்தானா?...தேர்தல் வரும் இவ்வேளையில் அவ்வுணர்வாளர்க்கு நடந்த இந்த கதிக்கு யார் காரணம் என்று போராட தெரியாத உனக்கு இந்த தமிழ் சமூகத்திற்கு என்ன செய்துவிட முடியும்... உங்கள் அரசியல் செயல்பாடுகள் இப்படி இருந்தால் உங்களால் ஒரு கட்டத்திற்கு மேல் வளரவே முடியாது என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு கீழ் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு என்ன அரசியல் கற்றுகொடுக்கிறீர்கள்..

    இவ்வாறு ஒரு செய்தியை இனையத்தில் படித்தேன்
    மிகவும் அதிர்ச்சியளிக்கிரது..
    நாம்தமிழர் கட்சியும் மற்ற அரசியல் கட்சிபோல் செயல்படுகிறது...
    http://www.nakkheeeran.com/Users/frmNews.aspx?N=48814

    பதிலளிநீக்கு
  2. முதலில் உன்னை நம்பி வந்த புதுக்கோட்டை முத்துக்குமாரின் அரசியல் படுகொலைக்கு போராடு...

    பதிலளிநீக்கு