போராடி; தொலைத்தது போல் வருடங்கள்
மௌனமாய் தொலைகிறதே.,
தேசம் கடந்து போன என் மக்கள் -
ஊர்திரும்பா வேதனையில் ஈழக்கனவும் குறைகிறதே;

மாவீரர் தினம் கூட -
ஒரு பண்டிகையாய் வருகிறதே
மலர்வளையம் வைத்து வணங்கி -
மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே;

வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் - சொட்டிய ரத்தம்
எப்படி உள்ளே நினைவறுந்துப் போனதுவோ???????
விழுந்து துடித்த பிள்ளைகளின் அழுகுரல்
எப்படி ஓரிரு வருடத்தில் அந்நியம் ஆனதுவோ????

வலிக்கும் வலியின் ரணம்; சுதந்திரமெனில்
துடிக்க மறந்ததேன் உறவுகளே ? இன்னும்
மறந்து வானம் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுமளவு
நாம் சொந்த மண்ணில் வாழவில்லையே உறவுகளே..

சிரிக்கும் சிரிப்பில் முழு சுதந்திரம் இருக்குமெனில்
போகட்டும் ஈழம் மறப்போம். மறப்போம்.
சிறைப்பட்ட வாழ்வில் சிரிக்கப் பணித்த நமக்கு -
விடுதலை எட்டா காசு எனில்; மறக்கலாமா சுதந்திரம்???????????

மண்ணில் ஆண்டாண்டு காலமாக
அடிமை சங்கிலி உடைக்க இழைத்த கொடுமைகளும்
இழப்பும் ஒன்றோ இரண்டோ  இல்லையே,
பின் -  ஒடுங்கிக் கிடைப்பின்
சுதந்திரம் செல்லாக் காசாகுமே உறவுகளே..???

நினைக்கிறோம்; போதவில்லை, துடிக்கிறோம; போதவில்லை,
அழுகிறோம்; போதவில்லை, பதைபதைக்கிறோம்;போதவில்லை......
இப்போது எல்லோருக்கும் இல்லாத இவ்வுணர்வு -
விடுதலை வெல்லுமளவிற்கு போதவில்லையே!

உணர்வு, உணர்வு, உணர்வு...................
உணர்வு மெல்ல ஒவ்வொருவருக்காய் அறு பட்டு
இப்போது உயிர் இருந்தும் கடைசியில் -
இறக்க இயலா நடைபினமானோமே!!!!!!!!!!?

கடைசியாய் ஒன்று சொல்கிறேன் உறவுகளே -
ஈழம்...................................................................
ஈழம் என்பது, இனி, மெல்ல மறந்துப் போவதற்கல்ல;
ஒரு;  காலம் கடந்த போராட்டத்தில் -
தமிழன் வென்றதாய்.., வாழ்ந்ததாய்; குறித்துக் கொள்வதற்கு!!

இப்படிக்கு..

கல்லறையில் உறங்கும் மாவீரர்களில் ஒருவர்....
-------------------------------------------------------------------------------
வித்யாசாகர்